புத்ரகாமேச்சுரர் PuthraKamechurar - 1

புத்ரகாமேச்சுரர்   PuthraKamechurar - 1





முத்தினையோர் மூலப் பொருளானானை பரமனை
மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு
சித்ர கானாம்ருத அரனை ! சதாசிவனை ! தொழ
புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே!

முத்தினை ஓர் மூலப் பொருளாய் ஆனானை பரமனை 
மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு 
சித்ர கான அம்ருத அரனை சதாசிவனை தொழ 
புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே!

மித்ரன் - நண்பன்,   அம்ருதம் - அமுதம்,   
மேரு - மேருமலை,  சித்ரம் - அழகு,   கானம் - இசை

பொழிப்புரை:– 

முத்திக்கு  ஒரு மூலப்  பொருளாய் ஆனவனை பரமனை,
நண்பனாகச் சுந்தரரை ஆட்கொண்ட மகாமேருமலையான
அழகு மிகுந்த இசையமுதமாகிய ஈசனை, சதாசிவனை வணங்க
புத்திர பாக்கியமொடு பல புகழுந் தருவானே!

கருத்துரை:-

முத்தி தரும் மூல போருளாக இருப்பவனை பரமேச்சுரனை, அன்று நண்பனாக வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை  ஆட்கொண்டவனை, மேரு மலையளவுக்கு உயர்ந்த புகழை உடையவனை,
அழகு மிக்க இசையெனும் அமுதமாய் திகழும்  சிவனின்  64 - திருமூர்த்தங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி எனுந் திருநாமங் கொண்டவனை வணங்கிட புத்ர பாக்கியமும் பல வகையான புகழும் தந்தருள்வானே !

திருத்தல பெருமை :- 

சுவாமி -            புத்ரகாமேச்சுரர் 
அம்பாள் -        பெரிய நாயகி,  பிரம்ம நாயகி 


தலப்பெயர் -   புதுகாமூர், அரணி.

தீர்த்தம் -           கமண்டல நதி.

விருட்சம் -         பவழ மல்லி.

வழிபட்டோர் - 
தசரதன்,   சூரியன்,  சனீஸ்வரன்.

பாடியவர் -       ஆரணியடியார்க்கடியவன்.

நூல்  -                  லிங்காட்சர மாலை, புத்திரகாமேச்சுரர் மாலை.

வழிபடும் பலன் -  புத்ர பாக்கியம் பெறுதல், நாக தோஷம் விலகல்.

வரலாறு :-
 
தசரத மஹாராஜன் புத்ர பாக்கியம் வேண்டி இத்திருத்தலத்தில் தம்முடைய குல குருவான வசிஷ்டர் கூறியதின் பேரில் புத்ரகாமேட்டி யாகம் செய்து அதன் பலனாய் இராமன், லஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்ற நான்கு புத்திரர்கள் பெற்றான். இந்த யாகம் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவரின் தலைமையில் நடைபெற்றதாக வரலாறு. யாகத்தின்போது தசரதன் தன் மேனியில் ருத்ராட்சம் தரித்து கையில் கமண்டலம் தாங்கித் தவக்கோலம் பூண்டு இருந்ததாக இங்குள்ள சந்நிதியில் அறியலாம். இங்கு ஆஞ்சனேயருக்கு வேறு எங்கும் காண முடியாதபடி சங்கு சக்கரம் தரித்தவராக இருப்பதை காணலாம். இங்கு கிருஷ்ணன் பாமா ருக்மினியோடு காட்சி தருகிறான்.

இங்குள்ள புளியமரத்தின் அடியில் உள்ள நாகர் சிலைகளை வலம் வந்து வழிபட்டால் நாக தோஷம் புத்ர தோஷம் நீங்குவதாக வரலாறு. இங்குள்ள விநாயகர் திருநாமம் சுவர்ண விநாயகர். இங்குள்ள சோமஸ்கந்தர் உற்சவராக வீற்றிருக்கிறார்.

ஜமதக்னி முனிவர் தம்முடுடைய கமண்டலத்தில் உள்ள நீரை கொட்டி கமண்டல நதியை உற்பத்தி செய்ததாக வரலாறு.
 

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam