வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai ViriUrai old



வேலும் மயிலும் துணை
திருச்சிற்றம்பலம்

வள்ளி மணாளன் அட்சரமாலை

விநாயகர் காப்பு

ராகம் : நாட்டை

பள்ளியிலுறையும் பிள்ளாய் பணிந்தேனுனையே வலமாய்
புள்ளி மயிலேறி புவனமதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையையோதியுய்ந்திடயெமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்லபடியே.


பள்ளியில் உறையும் பிள்ளாய் பணிந்தேன் உனையே வலமாய்
புள்ளி மயில் ஏறி புவனம் அதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையை ஓதி உய்ந்திட எமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்ல படியே.


(கருத்துரை) கல்வி அறிவும் வித்தையும், கலைகளும் போதிக்கும் இடமாகிய பள்ளியில் முதலாவதாக இருக்கும் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானே! உனைப்பணிந்து வலமாய் வந்தேன். அன்று புள்ளி மயில் ஏறி உலகை ஓர் இமை பொழுதில் வலம் வந்த, வள்ளியின் மணவாளனாகிய முருகப் பெருமானின் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தொகுத்த, அட்சரமாலை என்னும் நூலைப் படித்து, பாடி, நற்கதி அடைந்திட எனக்கு ஞானமும் சொற்களும் வாரி வழங்கிட அருளினைத் தருவாய் (என்றவாறு)

நூல் 
 
ராகம் : ஹம்ஸத்வனி

அகர உகர மகர வடிவாகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகரயுருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகரயயிலை கடாவி வசமாக்கி தனி பேற்றை யருளிய
புகர புங்கவ! காவாய் பொன்னொளிர் ஆதியே. 1


அகர உகர மகர வடிவு ஆகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகர உருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகர அயிலை கடாவி வசம் ஆக்கி தனி பேற்றை அருளிய
புகர புங்கவ காவாய் பொன் ஒளிர் ஆதியே.


(க-ரை) அகரம், உகரம், மகரம் எனும் எழுத்துக்களை உள்ளடக்கிய 'ஓம்'' எனும் பிரணவ மந்திர வடிவாகிய சோதி ஒளிக்கு ஒப்பான வள்ளிக்கு மணவாளனே! உயர்ந்த புள்ளிகளையுடைய மயில் வாகனா! பொன்னைப் போன்று ஒளி வீசக் கூடிய மூலப் பரம் பொருளே! மலையின் உச்சிக்கு நிகராக உயர்ந்து நின்ற சூர பதுமனை தகரம் என்று சொல்லக் கூடிய வேலாயுதத்தால் ஏவி இரு பாகமாகச் செய்து சேவலும் மயிலுமாக தன் வசம் கொண்டு நல்ல தனி பேற்றினை அருளியவனே! எனையும் காத்து அருள்வாய் (எ.று)

ஆதி முதனாளிலரனார் நுதலிலுதித்த வள்ளிமணாளனே!
மேதினியிலிது தகுமோ யெமை நோக்காதிருத்தல்
போதியாயினி யோர் சொற்புனிதா! குமரா! நீயும்
சோதியாய் தோன்றி காவாயினி மூத்த இபமுடனே. 2


ஆதி முதல் நாளில் அரனார் நுதலில் உதித்த வள்ளி மணாளனே!
மேதினியில் இது தகுமோ எமை நோக்காது இருத்தல்
போதியாய் இனி ஓர் சொல் புனிதா! குமரா! நீயும்
சோதியாய் தோன்றி காவாய் இனி மூத்த இபம் உடனே.


(க-ரை) எல்லாவற்றிற்கும் மூலமும் முதலுமாய் இருக்கக் கூடிய பரம் பொருளாகிய சிவபெருமான் நெற்றியில் அன்று தோன்றிய வள்ளிக்கு வாய்த்தவனே! உலகினில் எனை பார்க்காதிருப்பது உமது தன்மையோ? அல்லது அழகோ! சொல்வாய் குமரா! புனிதத் தன்மை வாய்ந்தவனே! நீயும் மூத்தவனாகிய விநாயகப் பெருமானுடன் சேர்ந்து சுடரென பிரகாசித்து இனியேனும் எமக்கு ஓர் உபதேசச் சொல்லினைக் கூறி காத்து அருள்வாய் (எ.று)

இபமா மடந்தையை புணர்யெழில்மிகு வள்ளிமணாளனே!
யெமை கபடாகிய சூதும் வாதும்யென்றும் நாடாது நலியாது
சுபஞான சொற்குமரா! சுடரொளிர் சுப்பிரமணியா! யானு
மபயமுந்தன் பொற்பாதமே தீராயெந்தன் ஈனமே. 3


இபமா மடந்தையை புணர் எழில் மிகு வள்ளி மணாளனே!
எமை கபடு ஆகியசூதும் வாதும் என்றும் நாடாது நலியாது
சுப ஞான சொற் குமரா! சுடர் ஒளிர் சுப்பிரமணியா ! யானும்
அபயம் உந்தன் பொற்பாதமே தீராய் எந்தன் ஈனமே.


(க-ரை) தெய்வயானையை மணந்து அணைந்த அழகுமிகுந்த வள்ளிக்கு மணவாளனே! நன்மையை அளிக்க கூடிய ஞானச் சொல்வடிவாகிய குமரா! சுடர் என ப்ரகாசிக்கும் சுப்பிரமணியா! நானும் உந்தன் பொன் போன்று ஒளி வீசும் திருப்பாதங்களில் சரணம் அடைந்தேன். எனை இழிவாகிய சூது, வாது, கபடு போன்ற துற்குணங்கள் சேராமல், அதிலிருந்து விடுபடுவதற்கு அருள்வாய் (எ-று)

ஈனமிகுத்தப் பிறவியினி சூழாதறுக்கும் வள்ளிமணாளனே!
ஏனமும் கொம்பும் விருப்போடு மணியு மீசன் மகனே!
தானமுந் தவமுமியற்றிடயடியேன் பாலென்றும்
ஊனமும் பிணியுமூடாது காவாயினி உய்யவே. 4


ஈன மிகுத்தப் பிறவி இனி சூழாது அறுக்கும் வள்ளி மணாளனே!
ஏனமும் கொம்பும் விருப்போடு அணியும் ஈசன் மகனே!
தான முந்தவமும் இயற்றிட அடியேன் பால் என்றும்
ஊனமும் பிணியும் ஊடாது காவாய் இனி உய்யவே.

(க-ரை) இழிவை அதிகமாகத் தரக்கூடிய இப்பிறவி இனி எடுக்காமல் அறுத்து விடும் வள்ளிக்கு மணவாளனே! பன்றியின் கொம்பையும் விரும்பி அணிந்து கொண்டிருக்கும் சிவபெருமானின் புதல்வனே! என்னை என்றும் குற்றங்களும், நோயும் சேராது, இனியேனும் தானம் தவம் போன்ற தரும் வாழ்க்கையைப் பின் பற்றிடவும், மேலான கதியை அடைவதற்கும் அருளி காத்திடுவாய். (எ-று)

உய்ய ஞானத்து சிவபோதமதை யருளாய் வள்ளிமணாளனே!
பொய்யுருவாகிய புலால் குரம்பையைக் கொண்டடியேன்
மெய்யுருவென்று நம்பி மேதினியில் வீணேயுழன்
றய்யுறுவேனோ! நீயும் புகுவாயெந்தன் ஊனத்தசைக்குள்ளே. 5


உய்ய ஞானத்து சிவபோதம் அதை அருளாய் வள்ளி மணாளனே!
பொய் உருவு ஆகிய புலால் குரம்பையைக் கொண்டு அடியேன்
மெய் உருவு என்று நம்பி மேதினியில் வீணே உழன்று
ஐ உறுவேனோ! நீயும் புகுவாய் எந்தன் ஊனத் தசைக்கு உள்ளே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பொய்யாகிய இந்த மாமிசம் நிறைந்த உடம்பைக் கொண்டு, இதுவே என்றும் மெய் என்று நம்பி , உலகினில் வீணாகத் திரிந்து, சந்தேகித்து அலைவேனோ? நீயும் இந்த மாமிசமாகிய உடலினுள்ளே புகுந்து, சிவசிந்தனையும், உபதேசமும் அருள்வாய் (எ-று)

ஊனத்தசைக்குள்ளேயொன்பது வாசலிட்ட வள்ளி மணாளனே!நீயும்
ஈனனெனையேனென்று கேட்காதிருப்பது தானேனோ? வினையா
லான மலத்தை யழிக்கவே யருளயுனாறிரு விழியால்
வானவர் தம்தலைவா! வருவாய் குருவாய் காவாய் எனையே. 6


ஊனத் தசைக்கு உள்ளே ஒன்பது வாசல் இட்ட வள்ளிமணாளனே! நீயும்,
ஈனன் எனை ஏன் என்று கேட்காது இருப்பது தான் ஏனோ? வினையால்
ஆன மலத்தை அழிக்கவே அருளாய் உன் ஆறு இரு விழியால்
வானவர்தம் தலைவா! வருவாய் குருவாய் காவாய் எனையே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தேவர்களின் தலைவா! தசையால் அமைந்துள்ள இவ்வுடலின் உள்ளே ஒன்பது வாசல்களை பொருத்திப் படைத்தவனே! இழி செயல்களை புரிகின்ற என்னை ஏன் என்று கேட் காதிருப்பது தான் ஏனோ? நீயே குருவாய் வந்து வினையால் ஆகிய மலத்தை உன் பன்னிரண்டு விழிகளால் அழித்து என்னைக் காத்து அருள்வாய் (எ-று).

ராகம் : மோகனம்

எனையடைந்த யூழ்வினைகளையறுப்பாய் வள்ளிமணாளனே!
புனைந்த மலர் மாலைகளை பொன்னடிக்கே சாற்றிப் போற்றா
துனையே நாவாலிசைத்து வணங்கித் துதித்திடாது பூவுலகில்
வினையேனாதாரமாய் தேடியப் பொருள் தான் ஏது? 7


எனை அடைந்த ஊழ் வினைகளை அறுப்பாய் வள்ளி மணாளனே!
புனைந்த மலர் மாலைகளை பொன் அடிக்கே சாற்றிப் போற்றுது
உனையே நாவால் இசைத்து வணங்கித் துதித்து இடாது பூவுலகில்
வினையேன் ஆதாராமாய் தேடியப் பொருள் தான் ஏது?


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தொடுத்த மலர் மாலைகளை பொன் போன்ற உன் திருவடிகளில் சாற்றி, போற்றி வழிபடாமல், உன்னை என் நாவால் பாடி வணங்கி துதிக்காமல், உலகில் பழமையாகிய வினைகளால் கட்டுப்பட்டு இருக்கும் நான், எனக்கு ஆதரவாகத் தேடிய பொருள் தான் எது? கூறுவாய், என்னை வந்து சேர்ந்த இவ்வினைகளை விலக்கி அருள்வாய் (எ-று)?

ஏது புத்தியெனக்கினி சொல்லிடாய் வள்ளிமணாளனே!
தீதில்லா தெளிந்த ஞான மோன முத்திக்கு
ஈதுயுத்தி யென்றுன்னையேயறியாது தெரியாது
போது போக்கிய புலையனேனையினியேனுங் காவாய் ஐயனே. 8


ஏது புத்தி எனக்கு இனி சொல்லிடாய் வள்ளிமணாளனே!
தீது இல்லா தெளிந்த ஞான மோன முத்திக்கு
ஈது உத்தி என்று உன்னையே அறியாது தெரியாது
போது போக்கிய புலையனேனை இனியேனும் காவாய் ஐயனே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! என் ஐயனே! தீமைகள் இல்லாத தெளிவடைந்த ஞானம் பொருந்திய மௌனமாகிய முக்திக்கு இது தான் வழி என்று உன்னை அறிந்து கொள்ளாமல், பொழுதை இதுநாள் வரை விணாகக் கழித்த, இந்த அறுவறுக்கத் தக்கவனுக்கு இனியேனும் புத்தி இல்லாதவனே! என்று கூறி, காத்து அருள்வாய் (எ - று)

ஐயுமுறு நோய் தீண்டாதகற்றியருள்வாய் வள்ளிமணாளனே!
பையுமுடன் வைத்த பாம்பணிந்த பரமனை வணங்கி
கையுமிரு காலுமுன்றன் கழற்கே தொண்டு புரிய
வையுமுன்திரு பொற்பாதங்களை முடிமேல் ஒருநாளே. 9


ஐயும் உறு நோய் தீண்டாது அகற்றி அருள்வாய் வள்ளி மணாளனே!
பையும் உடன் வைத்த பாம்பு அணிந்த பரமனை வணங்கி
கையும் இரு காலுங் உன்றன் கழற்கே தொண்டு புரிய
வையும் உனது இரு பொற் பாதங்களை முடிமேல் ஒரு நாளே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! விஷத்தை பையில் அடக்கி தன்னுடன் வைத்த பாம்பை ஆபரணமாக அணிந்த பரமேச்வரனை என் இரு கைகளால் வணங்கிடவும், கால்களால் வலம் வரவும், உமக்கு என்றும் தொண்டுகள் புரிந்திடவும், சந்தேகங்களை தன்னுள் வைத்த இவ் வுடலினுள் உண்டாகும் நோய்கள் எனை அணுகாமல் உனது பொன்னுக்கு நிகரான உனது இரு பாதங்களை என்றாவது ஒரு நாள் என் தலைமேல் வைத்து அருள்வாய் (எ-று)

ஒருபொழுதும் மறவேனுந்தன் திருப்புகழைவள்ளிமணாளனே!
கருநோயறுத்து மெய்ப் பொருள் காணவேயென்
இருவினை களைந்திணையடியைப் பற்றியுய்ந்திட
தருவாய் வாழ்வும் ஞானமுமிசையும் நினைத்தபடி ஓதிடவே.10

ஒரு பொழுதும் மறவேன் உந்தன் திருப்புகழை வள்ளிமணாளனே!
கரு நோய் அறுத்து மெய்ப் பொருள் காணவே என்
இரு வினை களைந்து இணை அடியை பற்றி உய்ந்திட
தருவாய் வாழ்வும் ஞானமும் இசையும் நினைத்தபடி ஓதிடவே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பிறப்பிற்கு காரணமாகிய 'கரு'' எனும் நோயில் இருந்து எனை விலக்கி மெய்யான பொருள் எது? என்பதை காணவும் என் இரு வினைகளை விலக்கி, உன் திருவடிகளைப் பிடித்து, நல்ல பேற்றினை அடைவதற்கு உரிய வாழ்வை அடையவும், உன் திருப்புகழை ஒரு நாளும் மறவாது பாடுவதற்கு வேண்டிய இசை ஞானமும், நான் நினைத்தபடியே தருவாய் (எ-று)

ஓது முத்தமிழினுள்ளொளிக்குள்ளேயிருக்கும் வள்ளிமணாளனே!
யேதுருவில்லேதமும் துன்பமுயெமையணுகாதிருக்க
மாதுருவாய் நின்ற மறை நாயகன்மைந்தாயென்றன்
தீதுரு பிறவிக்கிருப்பாயென்றுமோர் ஒளடத மாகவே. 11


ஓது முத்தமிழின் உள் ஒளிக்கு உள்ளே இருக்கும் வள்ளிமணாளனே!
ஏது உருவில் ஏதமும் துன்பமும் எமை அணுகாது இருக்க
மாது உருவாய் நின்ற மறை நாயகன் மைந்தா என்றன்
தீது உரு பிறவிக்கு இருப்பாய் என்றும் ஓர் ஒளடதமாகவே.


(க-ரை) பாடக்கூடிய , படிக்கக்கூடிய முத்தமிழின் உள்ளே அடங்கிய ஓசை எனும் பிரகாசிக்கக் கூடிய சுடரின் உள்ளே ஒளிவடிவாக குடி கொண்டிருக்கும் வள்ளிக்கு மணவாளனே! பெண்ணை ஒரு பாகமாக கொண்ட வேதங்களுக்குத் தலைவனான சிவபெருமானின் புதல்வனே! எந்த வடிவிலும் குற்றமும், துன்பமும் எனை சேராது இருக்கவும், என்னுடைய தீமையின் காரணமாக எடுத்த இப்பிறப்பிற்கு நீ இருப்பாய் என்றுமே ஒரு மருந்தாக (எ-று)

ஒளடதமாய் துணையாயடியேனுக்கிருக்கவே வள்ளிமணாளனே!
எவ்வகையில் யானும்யிப்புவியிலுய்வேனெனயியம்பாய்
வெவ்வினைகளை வேறாக்கி விரும்பிய படியேயுந்தனாமங்களை
செவ்வையாய் புகன்றிடயருளாயினியுதியாதிருக்க ஓர்கருவிலே. 12

ஒளடதமாய் துணையாய் அடியேனுக்கு இருக்கவே வள்ளிமணாளனே!
எவ்வகையில் யானும் இப்புவியில் உய்வேன் என இயம்பாய்
வெவ் வினைகளை வேறு ஆக்கி விரும்பியபடியே உந்தன் நாமங்களை
செவ்வையாய் புகன்றிட அருளாய் இனியும் உதியாதிருக்க ஓர் கருவிலே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! நீயே அடியேனுக்கு என்றும்
துணையாகவும், யான் இனியும் பிறப்பு எனும் ஒரு கருவிலே தோன்றாமல்
இருக்கவும், துன்பம் அளிக்கும் என் வினைகளை வேறு படுத்தி உன்
நாமங்களைச் சிறப்பாகக் கூறவும், நீயே ஒரு மருந்தாக இருந்து, அடியேன்
எந்த வகையில் ஈடேறுவேன் என்பதையும் கூறி அருள்வாய் (எ-று)

ராகம் : சண்முகப்பிரியா

கருவாய் தாயுதிரத்திலுதித்துருவாய் வளர்ந்து வள்ளிமணாளனே!
குருவாயுளமதிலுனையே யிருத்தி வழிபடாது முன்ன
மிருவினையால் கட்டுண்டு மாயையில் சிக்கியயான்மாவை
முருகாய் மணக்க செய்யாதிருப்பதென்ன காரணமோ? 13


கருவாய் தாய் உதிரத்தில் உதித்து உருவாய் வளர்ந்து வள்ளிமணாளனே!
குருவாய் உளம் அதில் உனையே இருத்தி வழிபடாது முன்னம்
இரு வினையால் கட்டுண்டு மாயையில் சிக்கிய ஆன்மாவை
முருகாய் மணக்க செய்யாது இருப்பது என்ன காரணமோ?


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கருவாக தாயின் உடலில் தோன்றி ஆளாக வளர்ந்தயான், உனை குருவாக என் உளமதில் இருத்தி தொழாமல், முன் பிறப்பில் செய்த வினைகளால் கட்டுப்பட்டு மாயை எனும் துன்பமதில் அகப்பட்டு அலையும் இந்த ஆன்மாவை அழகாக மணம் வீசும்படி செய்யாமல் இருப்பது தான் என்ன காரணம்? கூறாய் (எ-று)

காரணமதாக வந்து யானிப்புவிமீதில் வள்ளிமணாளனே!
பூரணமாகிய மெய்ப்பொருளையுணர்ந்து ய்ந்திடயோர்
ஆரணம் கருணையோடென்றெனக்குபதேசிக்க வருவாய்
வாரண முகத்தோன் தம்பியே வரமருளும் கிரி யோனே. 14

காரணம் அதாக வந்து யான் இப்புவி மீதில் வள்ளி மணாளனே!
பூரணம் ஆகிய மெய்ப் பொருளை உணர்ந்து உய்ந்திட ஓர்
ஆரணம் கருணையோடு என்று எனக்கு உபதேசிக்க வருவாய்
வாரண முகத்தோன் தம்பியே வரம் அருளும் கிரியோனே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! யானை முகவனுக்கு இளையவனே! வரங்களை அளிக்க பல மலைகளிலும் வாழ்ந்து கொண்டு இருப்பவனே மெய்யான பொருளாகிய உன்னை முழுவதுமாய் உணர்ந்து நல்ல பேறினை அடைந்திடவும் என்ன காரணமாக நான் இவ்வுலகினில் வந்து பிறந்தேன் என்பதையும் அறிய ஒரு உபதேசமதை கருணையுடன் எனக்கு உபதேசிக்க வந்து அருள்வாய் (எ-று)

கிரிவலம் வருமடியார்க்கு வரங்களருளும் வள்ளிமணாளனே!
எரிவாய் நரகக்குழியில் யானும் வீழாதீடேறவும்
தெரியாது செய்த பிழைகளை பொறுத்து தினமுனை பாடிடவும்
பரிவாயருளாய் ஞானமும் போதமும் நாதமும் கீதமுமே. 15


கிரிவலம் வரும் அடியார்க்கு வரங்கள் அருளும் வள்ளி மணாளனே!
எரிவாய் நரக குழியில் யானும் வீழாது ஈடு ஏறவும்
தெரியாது செய்த பிழைகளை பொறுத்து தினமும் உனை பாடி|டவும்
பரிவாய் அருளாய் ஞானமும் போதமும் நாதமும் கீதமுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! நீ வாழுகின்ற மலைகளை வலமாக வரும் உனது அடியவர்களுக்கு வரங்களை அருள்பவனே! நான், எரியும் வாயை உடைய நரகக் குழியில் வீழாமல் மேலான நிலைமை அடையவும், நான் தெரியாமல் செய்த பிழைகளைப் பொறுத்து, தினமும் உனை பாடி தொழுவதற்குறிய , ஞானமும், நாதத்துடனாகிய இசையும், உபதேசமும், கருணையுடன் அடியேனுக்கு அருள்வாய் (எ-று)

கீத நாத விநோத பெருமானாகிய வள்ளிமணாளனே!
வாத பித்த நோய் கலந்த வாழ்வுறாதுயுந்தன்
பாத தாமரையையடியேன் மனதில் சிந்தித்து தொழுதிட
வேத கற்பக சொரூபமே வினையேனுக்கு யருளாய் குமரனே!. 16

கீத நாத விநோத பெருமான் ஆகிய வள்ளிமணாளனே!
வாத பித்த நோய் கலந்த வாழ்வு உருது உந்தன்
பாத தாமரையை அடியேன் மனதில் சிந்தித்து தொழுதிட
வேத கற்பக சொரூபமே வினையேனுக்கு அருளாய் குமரனே!


(க-ரை) நாதத்தோடு கூடிய இசையின் வடிவாகி பற்பல அதிசயங்களை புரிய வல்ல பெருமானாகிய வள்ளிக்கு மணவாளனே! வேதத்தின் வடிவே ! கற்பக மரத்திற்கு நிகராக வாரி வழங்கும் குமரனே! வினையால் அழுந்தி இருக்கும், வாதமும், பித்தமும் கலந்த இந்த வாழ்க்கையை தவிர்த்து உந்தன் தாமரை மலர்களுக்கு இணையான திருப்பாதங்களை அடியேன் மனதில் தியானித்து வணங்கிட அருள்வாய் (எ-று)

குமர குருபர முருக சரவணபவனாகிய வள்ளிமணாளனே!
எமராசன் விட்ட கடையேடுயடியேனை சாரும் போழ்து
இமராசன் புதல்வியளித்த வேலாயுதம் காக்குமென்றே
அமராரணைய நீயும் தோன்றி கருணையுடன் கூறுமே. 17


குமர குருபர முருக சரவணபவன் ஆகிய வள்ளிமணாளனே!
எமராசன் விட்ட கடை ஏடு அடியேனை சாரும் போழ்து
இமராசன் புதல்வி அளித்த வேல் ஆயுதம் காக்கும் என்றே
அமரார் அணைய நீயும் தோன்றி கருணையுடன் கூறுமே.


(க-ரை) குமரனே! குருபரனே! முருகனே! சரவணபவனே! வள்ளிக்கு
மணவாளனே! யமன் விடுகின்ற பாசம் எனும் முடிவாகிய ஏடு
அடியேனை வந்து சேரும் போது, மலைகளுக்கு அரசனான இமராஜன்
புதல்வியாகிய உமையம்மை அளித்த சக்தி வேலாயுதம் காத்து
இரட்சிக்கும் என்று தேவர்கள் சூழ என் முன் தோன்றி கருணையுடன்
கூறுவாயாக (எ-று

கூறுமாறு கூறிய கவிகளனைத்தும் குமரா வள்ளிமணாளனே!
ஊறுமாறு நாவினில் பிழையற சரளமாயோதிடவேயளிக்க
ஏறுமாறு மயிலினில் வேலொடும் யானும் வேண்டதுயர்
ஆறுமாறு யருளாயினி தவிக்காது தூண்டிற் கெண்டையாகவே. 18


கூறுமாறு கூறிய கவிகள் அனைத்தும் குமரா! வள்ளிமணாளனே!
ஊறுமாறு நாவினில் பிழை அற சரளமாய் ஓதிடவே அளிக்க
ஏறு மாறு மயிலினில் வேலொடும் யானும் வேண்ட துயர்
ஆறு மாறு அருளாய் இனியும் தவிக்காமலே தூண்டிற் கெண்டையாகவே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! குமரனே! நீ எனக்குக் சொல்லுமாறுச் சொல்லி அருளிய கவிகள் அனைத்தையும் பிழை இல்லாமல் என் நாவினில் ஊறி சரளமாக பாடவும் தூண்டில் சிக்கி தவிக்கும் கெண்டை மீனைப்போல என்னுடைய துயரங்கள் எல்லாம் ஆறிப்போகுமாறு வேலொடு ஏறுமயில் ஏறி வருக என யான் வேண்டவும், நீயும் வந்து அருள்வாய் (எ-று)

இராகம் : இந்தோளம்

கெண்டையங் கண்ணாள் ஒரு சேரணைத்த வள்ளிமணாளனே!
வண்டினம் பாடும் வடிவழகாயுனைப் பாடாது நாடாது
பண்டையம் பழவினையால் கட்டுண்டு மதிமயங்கினேனே நின்
தண்டையந்தாளிணைக்குதவா வெறுங் கேதகை யாகவே. 19

கெண்டையங் கண்ணாள் ஒரு சேர அணைத்த வள்ளிமணாளனே!
வண்டினம் பாடும் வடிவழகா! உனைப் பாடாது நாடாது
பண்டையம் பழவினையால் கட்டுண்டு மதி மயங்கினேனே நின்
தண்டையந் தாள் இணைக்கு உதவா வெறுங் கேதகையாகவே.


(க-ரை) கெண்டை மீனையொத்த கண்களையுடைய உமையம்மை சரவணப் பொய்கையில் தவழ்ந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாய் அணைத்த வள்ளிக்கு மணவாளனே! வண்டுகள் பாடும் அழகிய வடிவோனே! உன் தண்டைகள் அணிந்த பாதங்களுக்கு உதவாத தாழை மலரைப்போல, யான் உனை பாடாமல், தரிசிக்காமல் என் பழைய வினைகளால் கட்டப் பெற்று என்னுடைய அறிவு மழுங்கி மயங்கிப் போனேனே! (எ-று)

கேதகைய பூமுடித்தோர் மயலில் சிக்காது வள்ளிமணாளனே!
ஏதகையதோர்சொலுபதேசித்தருளாயினி
வேதகையும் விளங்கிய சின்முத்திரையும் கொண்ட பரமனின்
பாதகையும் பரவிய ஞானபலமும் திண்ணமாய் கைத்தருணமே. 20


கேதகைய பூமுடித்த ஓர் மயலில் சிக்காது வள்ளிமணாளனே!
ஏதகையது ஓர் சொல் உபதேசித்து அருளாய் இனி
வேத கையும் விளங்கிய சின் முத்திரையுங் கொண்ட பரமனின்
பாதகையும் பரவிய ஞானமும் பலமும் திண்ணமாய் கைத்தருணமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தாழை மலர்களைச் சூடிய பெண்களின் ஆசைவலையில் சிக்காமல் எனக்கு தக்கதோர் சொல்லை உபதேசித்து அருள்வாய். அங்கனம் உபதேசித்தாய் என்றால் இனி குருவாய் நான்மறைகளைக் கைகளில் தாங்கி சின் முத்திரை காட்டிய பரமேச்வரனின் பாதங்களும், எங்கும் பரந்து இருக்கும் ஞானமும், பலமும் நிச்சயம் அடியேனை வந்து சேருமே. (எ-று)

கைத்தருணசோதியத்திமுக வேதனுக்கிளைய வள்ளிமணாளனே!
தைத்தயயிலால் தவங்கள் பலவியற்றிய யசுரனை
நைத்து நற்பேறு நல்கிய வரையொணாபாதங்களை யென்றும்
வைத்துயுளத்திலுருகிட வாராது நீங்கும் கொடிய னவே. 21


கைத்தருண சோதி அத்திமுக வேதனுக்கு இளையவள்ளிமணாளனே!
தைத்து அயிலால் தவங்கள் பல இயற்றிய அசுரனை
நைத்து நற்பேறு நல்கிய வரை ஒணா பாதங்களை என்றும்
வைத்து உளத்தில் உருகிட வாராது நீங்கும் கொடியனவே.


(க-ரை) வேதங்களுக்கு நிகரான ஒளி பொருந்திய துதிக்கையைத் தன்னிடத்தே கொண்ட யானைமுகப் பெருமானாகிய விநாயகனுக்கு இளையவனான வள்ளி மணவாளனே! அறிய பல தவங்களை இயற்றிய சூர பதுமனை வேல் கொண்டு குத்தி, இரு கூறாய்ப் பிளந்து, நல்ல பேற்றினை அருளிய சொல்லுதற்கு இயலாத அவனது திருப்பாதங்களை என்றும் உள்ளத்தில் புகுத்தி நினைந்து உருகினால் கொடியது என்று சொல்லக் கூடியவை அனைத்தும் நீங்கி விடும். (எ-று)

கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே!
பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட
இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு
கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே! 22


கொடிய மறலியும் அவனது கட்கமும் வருமுன் வள்ளி மணாளனே!
பிடி நடையாள் பேர் உவகை யோடு பெயர்த்து !அளித்து இட்ட
இடியும் மின்னலும் தோற்கும்! எனவே வேல் ஆயுதம் எடுத்து இட்டு
கடி நகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே..

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! என்றும் கல்யாண சொரூபம் நிறைந்த உமையம்மை பெற்ற கோமளமே! கொடியவனான, யமனும், அவனது கைவாளும் என் முன்னே வருமுன் பெண் யானைக்கு நிகரான நடையினை உடைய பார்வதியாள் பெரு மகிழ்ச்சி பொங்க எடுத்து அளித்து அருளிய இடியும் தோற்கும்படியான ஒலியும் மின்னலும் மங்கும்படியான ஒளியும் உடைய வேலாயுதத்தை கையினில் எடுத்து புன்னகைத் தவழ எனை காத்திட வாரும். (எ-று)

கோமள பரிமள சுகந்தமணியும் மார்பனே! வள்ளிமணாளனே!
சோமனொடருக்கன் முதலாய கோள்களும் தன்நிலை மாறிட
தூம மொடு நெய் தீபமுமிட்டிணையிலாயுந்தன்
நாம மொடு பாடிடயருளாய் பதிகள் எங்கெங்கிலுமே. 23


கோமள பரிமள சுகந்தம் அணியும் மார்பனே வள்ளிமணாளனே!
சோமனொடு அருக்கன் முதலாய கோள்களும் தன் நிலை மாறிட
தூமமொடு நெய் தீபமும் இட்டு இணைஇலா உந்தன்
நாமமொடு பாடிட அருளாய் பதிகள் எங்கு எங்கிலுமே.

(க-ரை) அழகும், மணமும் கூடிய சந்தனம், அர்த்தர்,போன்றவைகளை தன் மார்பினில் அணிந்த வள்ளிக்கு மணவாளனே! தூபம் நெய்தீபம் முதலியவைகளை வைத்து உந்தன் நாமங்களை நீ வாழும் பதிகள் தோறும் சென்று தொழுதிடவும், பாடிடவும் சூரியன் சந்திரன் முதலான ஒன்பது கிரஹங்களும் என்னை வருத்தாமல் தன் நிலை மாறிடவும் அருள்வாய் (எ-று )

எங்கேனு மொருவர் வந்திரக்கும் வேளையில் வள்ளிமணாளனே!
அங்கே யவர்க்கீந்திட யருளாயின் முகமொடு பொருளும்
பங்கேருகனை புடைத்து படைப்பை நடத்திய பிரணவக்குமரா!
சங்கே முழங்கிய சாரங்கன் மருகா! கூறினேன் சரணங்களே! 24

எங்கேனும் ஒருவர் வந்து இரக்கும் வேளையில் வள்ளிமணாளனே! 
அங்கே அவர்க்கு ஈந்திட அருளாய் இன்முகமொடு பொருளும் 
பங்கேருகனை புடைத்து படைப்பை நடத்திய பிரணவக் குமரா!    
சங்கே முழங்கிய சாரங்கன் மருகா ! கூறினேன் சரணங்களே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பிரமனை தலையில் குட்டி படைக்கும் தொழிலை தானே நடத்திய 'ஓம்'' எனும் பிரணவத்தில் அடங்கிய குமரனே! பாரதப் போரில் ''பாஞ்சசன்யம்' எனும் சங்கை கையில் தாங்கி ஊதிய சாரங்கபாணியாகிய திருமாலின் மருமகனே! நான் பலவாறாக உன்னைத் துதித்து வணங்குகிறேன். நீ எங்கேயாகிலும் ஒருவர் வந்து கேட்கும் போது அங்கே, அப்போது, அவர்க்கு கொடுத்திட பொருளும் இன் சொல்லும் எனக்குத் தருவாய் (எ-று)


ராகம் : பாகே ஸ்ரீ

சரணகமலாலயத்தை சிந்தையிலிருத்திட வள்ளிமணாளனே!
பரகருணைபெருவாழ்வை பரிவாகவே யெமக்கு கொடுத்து
தரணியில் புகழ்பெற்ற நின் திருத்தலங்களின் மகிமை பாடிட
வரமாயருள்வாய் நயமுடன் சேர்த்து நற்சாலமுமே. 25


சரண கமல ஆலயத்தை சிந்தையில் இருத்திட வள்ளி மணாளனே!
பரகருணை பெரு வாழ்வை பரிவாகவே எமக்கு கொடுத்து
தரணியில் புகழ் பெற்ற நின் திருத்தலங்களின் மகிமை பாடிட
வரமாய் அருள்வாய் நயமுடன் சேர்த்து நற் சாலமுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! உந்தன் பாத தாமரையாகிய கோயிலை என் மனதில் என்றும் இருத்தி இகபர சௌபாக்ய பெருவாழ்வை கருணையுடன் கொடுத்து, உலகினில் புகழ் மிக்க நின் திருத்தலங்களின் மகிமைகளை நயத்தோடு பாடி தொழுதிட மிகவும் நீண்ட திறமையை எனக்கு வரமாக தருவாய் (எ-று)

சால நெடுநாளலைந்துன்னருளைப் பெறவேவள்ளிமணாளனே!
காலமும் வெகுவாய் கழிந்தே போனதே கார்த்திகேயா! யறியேனே
பாலகனாயூமைக்கருள் புரிந்த பரமன்மைந்தாதினம்
ஓலமிட்டேனுனையே நினைந்து தீரா யென்னுடனாகிய சினமே. 26

சால நெடுநாள் அலைந்து உன் அருளைப் பெறவே வள்ளி மணாளனே!
காலமும் வெகுவாய் கழிந்தே போனதே கார்த்திகேயா! அறியேனே
பாலகனாய் ஊமைக்கு அருள் புரிந்த பரமன் மைந்தா! தினம்
ஓலம் இட்டேன் உனையே நினைந்து தீராய் என் உடன் ஆகிய சினமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கார்த்திகேயா! பரமேச்வரனின் மைந்தனே! அன்று சிறுவனாக வந்து பேசும் திறன் இல்லாத உன் அருளை பெறுவதற்கு மிகவும் நீண்ட நாட்களாக அலைந்து, காலமெல்லாம் கழிந்தே விட்டதே! இதை அறிந்து கொள்ளாமல் போனேனே! தினமும் உன்னைக் கூவி அழுகிறேனே! என்னோடு சேர்ந்துள்ள கோபத்தை விலக்கி, உன் அருளைத் தருவாய் (எ-று)

சினத்த தெத்தனையிச்சிறு மணியுடல் தான் வள்ளிமணாளனே!
கனத்ததெத்தனை கபடுகளொடிருமாப்புமிழிநோயு சேர்த்து
எனத்துளெத்தனை வகையாய் புக்கிடினும் நில்லா தொழிய
மனத்துளுன்னை புகுத்திடவேயெழுவாய் அணி சீரெனவே. 27


சினத்தது எத்தனை இச்சிறு மணி உடல் தான் வள்ளி மணாளனே!
கனத்தது எத்தனை கபடுகளொடு இருமாப்பும் இழி நோயும் சேர்த்து
எனத்துள் எத்தனை வகையாய் புக்கிடினும் நில்லாது ஒழிய
மனத்துள் உன்னை புகுத்திடவே எழுவாய் அணிசீர் எனவே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சிறிய மணியை யொத்த விந்துவி லிருந்து உண்டான இந்த உடல்தான் எத்தனை வகையாகக் கோபம் கொள்கிறது! சூதும், கர்வமுங் கொண்டு, எத்தனை வகையாக பெருத்து பாரமாக இருக்கிறது! அறுவறுக்கத்தக்க நோய்களோடு சேர்ந்து எத்தனை வகையாக என்னுள்ளே புகுந்து இருக்கிறது! அவ்வாறு இருந்தாலும் இவை அனைத்தும் நில்லாமல் ஒழித்து, உன்னை மனதினில் புகுத்திட, நீயும் அங்கு வந்து வரிசையாகத் தொடுத்த மாலையைப்போல அமர்ந்து அருள்வாய் (எ-று )

சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென்றிடவே
பார் வியக்க சோதி பிழம்பாய் தாமரையிலுதித்து
போர் மிகுத்த சூரனோடு பொருதி பேற்றினை யளித்த
கார் வண்ணன் மருகா! வள்ளிமணாளனே! வினைகளை சுட்டிடுமே. 28


சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என்றிடவே
பார் வியக்க சோதி பிழம்பாய் தாமரையில் உதித்து
போர் மிகுத்த சூரனோடு பொருதி பேற்றினை அளித்த
கார் வண்ணன் மருகா! வள்ளிமணாளனே! வினைகளை சுட்டிடுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கரிய மேகத்திற்கு ஒப்பான நிறமுடைய கண்ணபிரான் மருமகனே! இவ்வுலகம் ஆச்சரியப் படும்படி சோதியின் வடிவமாக, தாமரை மலர்களில் வரிசையாக சிறப்பு மிக்க உந்தன் திருமேனி பச்சைப்பசேல் என்று இருக்க வந்து உதித்தவனே! அன்று போரில் மிகவும் நாட்டமுடைய சூரனை எதிர்கொண்டு அடக்கி நல்ல பேற்றினை அளித்தவனே! என்னுடைய வினைகள் யாவையும் சுட்டு அருள்வாய் (எ-று)

சுட்டது போலாசையை விடாது வளர்த்து வள்ளிமணாளனே!
பட்டது போதுமய்யாயினி படமுடியாது புவியினி
லிட்டமுடனிட்டது பிடியளவேயாயினும் யேற்று
பெட்டகமாய் திகழ பிரியமுடனுந்தன் கிருபையைச் சூழுமே. 29


சுட்டது போல் ஆசையை விடாது வளர்த்து வள்ளிமணாளனே!
பட்டது போதும் ஐய்யா இனி படமுடியாது புவியினில்
இட்டமுடன் இட்டது பிடி அளவே ஆயினும் ஏற்று
பெட்டகமாய் திகழ பிரியமுடன் உந்தன் கிருபையைச் சூழுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இவ்வுலகில் ஆசையை முழுவதுமாய் சுட்டு எரித்து விட்டது போல மேலே தோற்றமளித்து, அவ்வாசையை விடாது உள்ளே வளர்ந்து, அதனால் துன்பப் பட்டது போதும். ஐயா! இனியும் பட முடியாது. செல்வங்களை உள்ளே வைத்துள்ள பெட்டி மேலே பார்ப்பதற்கு செல்வம் இல்லாதது போலத் தெரியும். அதுபோல் யாரே ஆயினும் விருப்பமுடன் கொடுத்தது ஒரு பிடி அளவே இருப்பினும், அதனை ஏற்று அடக்கமுடன் இருப்பதற்கு உந்தன் கிருபா கடாட்சம், என்னை வந்து சேருவதற்கு அருள்வாய் (எ-று)

சூழும் வினைகட்கேற்பறொடரும் வல்வினைகளை வள்ளிமணாளனே!
வீழும்படிச் செய்வாய் விரை மாமலர் பாதங் கொண்டு
பாழும் பிறவி படுமாயை தான்யென் செயுமே
வாழும் நெறியும் பின் முறையாய் வந்து செனித்திடுமே. 30


சூழும் வினைகட்கு ஏற்ப தொடரும் வல்வினைகளை வள்ளி மணாளனே!
வீழும்படிச் செய்வாய் விரை மாமலர் பாதங் கொண்டு
பாழும் பிறவி படு மாயை தான் என் செயுமே
வாழும் நெறியும் பின் முறையாய் வந்து செனித்திடுமே
.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! என்னைச் சுற்றிய பழைய வினைகளுக்குத் தக்கவாறு இப்பிறவியில் தொடரும் வலிய வினைகளை, உனது ஈரம் பொருந்திய மலர் பாதங்களைக் கொண்டு வீழும்படி செய்வாய். அதனால் பாழாகிய இப்பிறவி யெனும் மாயை தான் என்னை என்ன செய்யும். அதன் பின்னர் வாழும் தரும் நெறிகள் எனக்கு முறையாக வந்து தோன்றிடுமே (எ-று)

செனித்திடுஞ் சகலயுயிர்கட்குச் சரணாகதியாய் வள்ளிமணாளனே!
இனித்திடுமினிய வடிவழகும் வரமருளும் பன்னிரு கரங்களும்
குனித்திடுந் திருநீறு தாங்கிய நுதலும் குமிழ் மென்னகையும்
தனித்திடும் போது நல்குமே பெருங்கருணையும் சேமமுமே. 31


செனித்திடுஞ் சகல உயிர்கட்கு சரணாகதியாய் வள்ளி மணாளனே!
இனித்திடும் இனிய வடிவு அழகும் வரம் அருளும் பன்னிரு கரங்களும்
குனித்திடுந் திருநீறு தாங்கிய நுதலும் குமிழ் மென் நகையும்
தனித்திடும் போது நல்குமே பெருங் கருணையும் சேமமுமே.

(க-ரை) அனைத்தும் இழந்து, ஆதரவு அற்று தனித்திடும் போது, உலகில் தோன்றிடும் சகல உயிர்களுக்கும் சரணாகதியாய் இருக்கும் வள்ளி மணாளனது, தித்திக்கும் இனிய வடிவழகும், வரமருளும் பன்னிருகைகளும், வளைந்த திருவெண்ணீறு அணிந்த நெற்றியும், மலர் இதழென ஒட்டிய புன்னகையும் தருமே நிறைந்த கருணையோடு நலன்கள் அனைத்தையும்.
 (எ-று )

சேம கோமள பொற்பாதங்களை நினைந்து வள்ளிமணாளனே!
தாமமொடு தீபமுமிட்டுத் தவறாது வணங்கிடவேயுந்தன்
நாமமு மெந்தனுளேயென்று மகலாதிருத்திடவே
சோம சுந்தரேச்வரர் மைந்தா! பகர்வாயோர் சொல்லே. 32


சேம கோமள பொற் பாதங்களை நினைந்து வள்ளி மணாளனே!
தாமமொடு தீபமும் இட்டுத் தவருது வணங்கிடவே உந்தன்
நாமமும் எந்தன் உள்ளே என்றும் அகலாது இருத்திடவே
சோம சுந்தரேச்வரர் மைந்தா! பகர்வாய் ஓர் சொல்லே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சோம சுந்தரேச்வரர் மைந்தனே! எல்லா நலன்களையும் தரக்கூடிய உனது சுந்தர மிக்க பொன்னை யொத்த நின் திருப்பாதங்களை நினைந்து மலர்களொடு தீபமும் தவறாமல் வைத்து தொழுதிடவும், என்னுள்ளே உந்தன் நாமம் என்றும் நீங்காது இருத்திடவும் கூறாய் ஒரு சொல்லே (எ-று )

சொற்பிழை வராமலுன்றன் திருப்புகழைவள்ளிமணாளனே!
கற்பவர் தமை கருணையோடு நாடி நல்லருளே புரிவாய்
நற் தவத்தவர் தொழும் நற்பயனே! நல்மருந்தே! நல்முத்தே!
அற்பனின் பிழை பொறுத்தருளாயானந்த சோதியே! 33

சொற் பிழை வராமல் உன்றன் திருப்புகழை வள்ளிமணாளனே!
கற்பவர் தமை கருணையோடு நாடி நல் அருளே புரிவாய்
நற்தவத்தவர் தொழும் நற்பயனே! நல் மருந்தே! நல்முத்தே!
அற்பனின் பிழை பொறுத்து அருளாய் ஆனந்த சோதியே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஆனந்தமயமான சோதியின் வடிவே! நல்ல தவத்தைச் செய்தவர்கள் வணங்கும் நல்ல பயனாய் இருப்பவனே! நல்ல மருந்தே, நல்ல முத்தைப் போன்றவனே! சொற்களின் பிழை இல்லாமல் உந்தன் திருப்புகழை கற்பவர்களைக் கருணையுடன் தேடிச் சென்று நல்ல அருளைத் தருவாய். அதோடு இந்த அற்பனுக்கும் உனது அருள் புரிவாய் (எ-று)

அஞ்சுவித பூதமு மதன் செயல்களுமுணர்ந்து வள்ளிமணாளனே!
நெஞ்சமதில் வேண்டியதை புகுத்தி வேண்டாததை விலக்கி
தஞ்ச மடைந்தேனுன்னையே நம்பி தயவுடனேயருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களையினி வாராமல் இடரே. 36


அஞ்சுவித பூதமும் அதன் செயல்களும் உணர்ந்து வள்ளி மணாளனே!
நெஞ்சம் அதில் வேண்டி யதை புகுத்தி வேண்டாத அதை விலக்கி
தஞ்சம் அடைந்தேன் உன்னையே நம்பி தயவுடனே அருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களை இனி வாராமல் இடரே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஐம்பொறிகளின் செயல்பாடுகளை அறிந்து உள்ளத்தில் தேவையானவற்றைச் செயல் படுத்தி, தேவை இல்லாதவற்றை விலக்கி, உன்னையே நம்பி தஞ்சம் அடைந்தேன். இனி அடியேனுக்கு உந்தன் மணம் பொருந்திய மலர்களுக்கு ஒப்பான திருப்பாதங்களை அருளித் துயரங்களை நீக்குவாய் (எ-று)

அஞ்சுவித பூதமு மதன் செயல்களுமுணர்ந்து வள்ளிமணாளனே!
நெஞ்சமதில் வேண்டியதை புகுத்தி வேண்டாததை விலக்கி
தஞ்ச மடைந்தேனுன்னையே நம்பி தயவுடனேயருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களையினி வாராமல் இடரே. 36


அஞ்சுவித பூதமும் அதன் செயல்களும் உணர்ந்து வள்ளி மணாளனே!
நெஞ்சம் அதில் வேண்டி யதை புகுத்தி வேண்டாத அதை விலக்கி
தஞ்சம் அடைந்தேன் உன்னையே நம்பி தயவுடனே அருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களை இனி வாராமல் இடரே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஐம்பொறிகளின் செயல்பாடுகளை அறிந்து உள்ளத்தில் தேவையானவற்றைச் செயல் படுத்தி, தேவை இல்லாதவற்றை விலக்கி, உன்னையே நம்பி தஞ்சம் அடைந்தேன். இனி அடியேனுக்கு உந்தன் மணம் பொருந்திய மலர்களுக்கு ஒப்பான திருப்பாதங்களை அருளித் துயரங்களை நீக்குவாய் (எ-று)

ராகம் : சகானா

இடர்மொய்த்திருவினையோடிக்கடம் வள்ளிமணாளனே!
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாயுந்தன் பாதார விந்தங்களில் படர
சுடர்வேலவா! கருணையோடருளாய் தீமைகள் நாடாமலே.37


இடர் மொய்த்து இருவினையோடு இக்கடம் வள்ளி மணாளனே!
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாய் உந்தன் பாத ஆதார அரவிந்தங்களில் படர
சுடர் வேலவா! கருணையோடு அருளாய் தீமைகள் என்றும் நாடாமலே.


நாடா பிறப்பை பெற்று வள்ளிமணாளனைவழிப்பட்டுய்யாது
ஓடாய் தேய்ந்து யாக்கையு மழியு முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டுயானந்தமாய் யாடி
சூடாயவனிருபாதங்களை முடிமேல் பூரணவடிவாகவே! 38


நாடா பிறப்பை பெற்று வள்ளிமணாளனை வழிப்பட்டு உய்யாது
ஓடாய் தேய்ந்து ஆக்கையும் அழியும் முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டு ஆனந்தமாய் ஆடி
சூடாய் அவன் இரு பாதங்களை முடிமேல் பூரண வடிவாகவே!

(க-ரை) உடம்பே! கிடைத்தற்கு அரிய இம் மானிடப் பிறப்பைப் பெற்று
வள்ளி மணாளனை வழிப்பட்டு நல்ல பேற்றினை அடையாமல் நீ , தேய்ந்து போகும் மண் ஒட்டைப் போல் அழிவதற்கு முன் முழுமையான வடிவத்துடன் கூடிய அவனது திருப்பாதங்களை முடிமேல் சூடிக் கொண்டு ஆடியும்,
நாவே! நீயும் பரவசங்கொண்டு பாடியும் தொழுவாய் (எ-று)

வடிவது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளிமணாளனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடியது யாக்கி கவியினைத் தரவேயவனியில் முழங்கும்
இடியது போல சிகண்டியிலேறி வாராய் ஏடு களுடனே! 39


வடிவது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளி மணாளனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடி அது ஆக்கி கவி இனைத் தரவே அவனியில் முழங்கும்
இடி அது போல சிகண்டியில் ஏறி வாராய் ஏடுகள் உடனே!

(க-ரை) உனது ஆறுமுக வடிவத்தை வள்ளிக்குக் காட்டி, வசப்படுத்தி
மணந்து கொண்ட வள்ளிக்கு மணவாளனே! கொடியன என்று சொல்ல
கூடியவைகள் எனை அணுகாமல் மயிலினில் ஏறி உனது கூரான வேலால்
பொடி செய்தும், கவிகளைத் தருவதற்கு ஏடுகளைக் கொண்டும்,
இடி போல் முழங்கி இவ்வுலகினில் வருவாய் (எ-று)

ஏடு மலருற்றிணையடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடுற்று கேள்வியுமற்று கீழ் பிறப்புற்று வீணே
காடுற்று கருகாது கான மயில் வாகனா! யுந்தன்
வீடுற்றிருக்கருளாய் வினையேதும் அடையாதே. 40


ஏடுமலர் உற்று இணைஅடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடு உற்று கேள்வியும் அற்று கீழ் பிறப்பு உற்று வீணே
காடு உற்று கருகாது கான மயில் வாகனா! உந்தன்
வீடு உற்று இருக்க அருளாய் விணை ஏதும் அடையாதே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! காட்டில் வாழும் மயில்மேல் அமர்ந்தவனே!
இதழ்களுடைய மலர்கள் போன்று சேர்ந்துள்ள உனது இரு பாதங்களை தினமும், தொழாமல், கீழான பிறப்பு எய்தி, துன்பங்களை அடைந்து, கேட்பார் அற்று, இடுகாட்டை அடைந்து, தீயினுள்ளே (இவ்வுடம்பு) கருகிப்போகாமல், வினைகளை விலக்கி, உந்தன் முத்தி வீடாகிய திருவடிகளைத் தருவாய் (எ-று)

அடை படாதாவியும் கூட்டினுள்ளே வள்ளிமணாளனே!
இடை விடாது மாறி மாறி புகுந்திடரோடு
விடை பெறாது வீணாயுழலாதுலகெங்கிலும்
தடைபடாதயிலாலருள்வாய் சித்திகள் எட்டுமே! 41

அடை படாது ஆவியும் கூட்டின் உள்ளே வள்ளிமணாளனே!
இடைவிடாது மாறி மாறி புகுந்து இடரோடு
விடை பெறாது வீணாய் உழலாது உலகு எங்கிலும்
தடை படாத அயிலால் அருள்வாய் சித்திகள் எட்டுமே!


வள்ளிக்கு மணவாளனே! இந்த ஆவியானது ஓர் உம்பினுள்ளே புகாமல்,
இடை வெளி இல்லாமல், மாறி மாறி பல உடல்களில் புகுந்து, துயரங்களை
அடைந்து, முடிவு பெறாமல், வீணாக அலைந்து கொண்டு இருக்காமல்,
உலகில் தடை என்பதே இலாத வேலாயுதத்தைக் கொண்டு
எமக்கு சித்திகள் எட்டையும் அருள்வாய் (எ-று)

எட்டுடனொரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி 
கெட்டு நொந்தழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக 
பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! யடியேன்
பட்டுப்போகாதிருத்திடுவாய் நின்னிருதாட்களை இணங்கியே. 42 

எட்டுடன் ஒரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி
கெட்டு நொந்து அழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக 
பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! அடியேன்
பட்டுப் போகாது இருத்தி இடுவாய் நின் இரு தாள்களை இணங்கியே
.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மதுரையில் அன்று பிட்டுக்காக மண் சுமந்தவன் பிரியமான புதல்வனே! ஒன்பது துளைகளையுடைய இந்த உடலை நம்பி யான் பல விதமாக கெட்டு நொந்து அழிந்து போகாமல், மலர்கள் பயன் அளிக்காமல் கருகிப் போவது போல் யானும் பட்டுப் போகாமல், கருணையோடு காத்து, உன்னிரு பாதங்களை அடியேன்பால் இடுவாய் ஓருசேர இணைந்து (எ-று)

ராகம் : பீம்ப்ளாஸ் 

இணங்கித்தட்பொடிளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே! 
வணங்கியுந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் யேற்றருளாய் 
அணங்கொடமரர்கள் சூழ வலம் வருவோனே! யெமைநற் 
குணங்களொடு தூயவனாக்கி வினைகளைப் போக்காய் காணாமலே. 43

இணங்கித் தட்பொடு இளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே!
வணங்கி உந்தன் திருப் பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் ஏற்று அருளாய் 
அணங்கொடு அமரர்கள் சுழ வலம் வருவோனே! எமை நற் 
குணங்களொடு தூயவன் ஆக்கி வினைகளைப் போக்காய் காணாமலே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இரு தேவிமார்கள் சூழ தேவர்களோடு வலமாக வருபவனே! ஒன்றோடு ஒன்று இதழ்கள் சேர்ந்து குளிர்ந்து பூக்குந் தருவாயில் உள்ள தாமரை மலர்களை உந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன். அதை கருணையுடன் ஏற்று, என்னை நல்ல குணங்களோடு தூயவனாகச் செய்து, என் வினைகளை விலக்கி தெரியாமல் போகும்படி செய்வாய் (எ-று)

காணாத தூரமதை கடக்கவே வள்ளிமணாளனே! 
யேனோ வீணாகயுயிருமுடலும் வழியே தெரியாதலைகிறதே 
பூணாத பூடணமதை பூணவேயடியேனுக் கருளாய்! 
சோணாடீசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே! 44

காணாத தூரம் அதை கடக்கவே வள்ளிமணாளனே! ஏனோ
வீணாக உயிரும் உடலும் வழியே தெரியாது அலைகிறதே
பூணாத பூடணம் அதை பூணவே அடியேனுக்கு அருளாய்!
சோணாடு ஈசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருவருணையில் வாழும் ஈசன் புதல்வனே! கண்ணுக்குத் தெரியாத தூரமதைக் கடந்து செல்வதற்கு வீணாக இவ்வுடலும், உயிரும் வழி தெரியாமல் அலைகிறதே! எளிதில் அணிந்து கொள்ள முடியாத ஆபரணமாகிய உனது திருவடிகளெனும் ஆபரணமதை அடியேன் தலையில் சூடி அணிந்து கொள்வதற்கு அருள்வாய் (எ-று)

அணி செவ்வியர்யறுவரயணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை
மணியோடிழையுமரகதமாய் மணந்த வள்ளிமணாளனே! யடியேன்
பிணிகளை நீக்கி யருளாயுந்தனிணையிலா இணை களையே! 45 

அணி செவ்வியர் அறுவர் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை
மணியோடு இழையும் மரகதமாய் மணந்த வள்ளிமணாளனே!அடியேன்
பிணிகளை நீக்கி அருளாய் உந்தன் இணையிலா இணைகளையே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! அழகில் செம்மை (அ) செழுமை பெற்ற கார்த்திகை மாதர்கள் அறுவரின் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து, திருபாற்க்கடலில் பாம்பாகிய ஆதிசேடன் மீது படுத்து உறங்கும் பரந்தாமனாகிய திருமாலின் புதல்விகளை, ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசும் முத்துமணியும், மரகதமும் போல மணந்தவனே! அடியேன் நோய்களை நீக்கி அருள்வாய் உந்தன் ஒப்பு நோக்குவதற்கு முடியாத இரு பாதங்களாலே 
(எ-று)

இணையதில் மனதை யிரவும் பகலும் செலுத்து மடியார்களை 
அணைந்தன்பால் வள்ளிமணாளனையுயிருமுடலுமொன்றாய்
பிணைந்து தொழுதிடஅவனது வேலும் மயிலுமெங்கும் 
துணையாய் நிற்குமே! காணலாமே காணொணாததையே! 46

இணை அதில் இரவும் பகலும் செலுத்தும் அடியார்களை
அணைந்து அன்பால் வள்ளிமணாளனை உயிரும் உடலும் ஒன்றாய் 
பிணைந்து தொழுதிட அவனது வேலும் மயிலும் எங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காண ஒணாதது அதையே!


(க-ரை) இரவும் பகலும் வள்ளி மணாளனின் திருவடிகளில் மனதைச் செலுத்தும், அவனது அடியார்களை நாடிச்சென்று, அன்புடன் அவர் களோடு கூடி உயிரும் உடலும் ஒன்றாகச் சேர்ந்து, தொழுதால், அவனது வேலாயுதமும், மயிலும் எங்கும் துணையாக வரும். அதனால் காண முடியாதவைகளையும் காணலாம் (எ-று) 

காணொணாத யுந்தன் திருவுருவைக் காணாது வள்ளிமணாளனே!
பூணொணாததை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து
பேணொணாதை பேணி காத்துனையே பாடாது
நாணொணாததை நாடாதழிவேனோ யருளாய் தண்டைகளையே!.47

காண ஓணாத உந்தன் திருஉருவைக் காணாது வள்ளிமணாளனே! 
பூண ஓணாதது அதை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து 
பேண ஓணாதது அதை பேணிக் காத்து உனையே பாடாது 
நாண ஓணாதது அதை நாடாது அழிவேனோ அருளாய் தண்டைகளையே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பார்ப்பதற்கு அரிதான உந்தன் வடி வத்தை பார்க்காமல், பாடாமல், வாழ்க்கைக்கு தேவையில்லாதவை களான பேராசை, பொறாமை, கோபம், பொய், வெகுளி, காமம், நிந்தனை, ஏமாற்றுதல், விரோதம் போன்றவற்றை, விரும்பி அணியும் ஆபரணம் போல் அணிந்து (ஏற்றுக்கொண்டு), அதனால் பொல்லாத இந்த உடலை வளர்த்து, பாதுக்காக்க படாதவைகளான பெண்களின் தொடர்பு, தீயோர் நட்பு, அளவுக்கு மீறிய செல்வம், இன்சொலாமை, இரக்க மின்மை, உயிர்களை வதைத்தல், களவாடுதல் போன்றவற்றைப் பாது காத்து, வெட்கப்படத்தகாதவைகளாகிய கோயிலுக்குச் செல்லுதல், இறைவனை வணங்குதல், கிரிவலம் வருதல், திருப்புகழைப் பாடுதல், அடியாரோடு இணங்கி இருத்தல், இறை தொண்டுகள் செய்தல், திருநீறு முழுமையாக தரித்தல், அஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல், நைவேத்ய பிரசாதங்களை புசித்தல் போன்றவற்றை விரும்பிச் செய்யாமல் அழிந்து போவேனோ? அவ்வாறு அழியாதிருக்க உந்தன் தண்டைகள் அணிந்த திருப்பாதங்களை அருள்வாய் (எ-று) 

தண்டையணிப் பொற்ப் பாதங்களை சரணமென்றடைந்தவர்க்கு
பண்டையம் பெரும் வினைகளை பரிவாகறுப்பான்வள்ளிமணாளன்
கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதியென்றிருப்போர்க்கு
கொண்டயாவியும் புகாதிருக்குமேயினியோர் தசையிலே. 48

தண்டை அணிப் பொற்ப் பாதங்களை சரணம் என்று அடைந்தவர்க்கு 
பண்டையம் பெரும் வினைகளை பரிவாக அறுப்பான் வள்ளிமணாளன் 
கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதி என்று இருப்போர்க்கு
கொண்ட ஆவியும் புகாது இருக்குமே இனி ஓர் தசையிலே.

(க-ரை) தண்டைகள் அணிந்த பொன் போன்ற திருப்பாதங்களை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு, அவர்களது பழைய வினைகள் எல்லாம் கருணையுடன் அறுத்து விடுவான் வள்ளி மணவாளன்! கெண்டை மீனுக்கு நிகரான விழிகளையுடைய உமையவள் பெற்ற விசாகனையே கதி என்று இருப்போர்க்கு அவர் எடுத்த பிறவியின் ஆவியும் இனியும் ஓர் உடலில் புகாமல் இருக்க அருள் புரிவான் (எ-று)

ராகம் : பெஹாக்

தசையாகிய கற்றையொடு நரம்பென்பும் சேர்த்து வள்ளி மணாளனே! 
பசையாகிய யுதிரமு மோட யுச்சி முதல் பாதம் வரை
இசைவாணியின் கணவன்யிருவினைகளொடென்னையும் படைத்தானே
திசையறியாயெமக்கு திசையாயிருப்பாய் தாரணியிலே! 49

தசை ஆகிய கற்றையொடு நரம்பு என்பும் சேர்த்து வள்ளிமணாளனே! 
பசை ஆகிய உதிரமும் ஓட உச்சி முதல் பாதம் வரை 
இசை வாணியின் கணவன் இருவினைகளொடு என்னையும் படைத்தானே
திசை அறியா எமக்கு திசையாய் இருப்பாய் தாரணியிலே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சரஸ்வதியின் கணவனான பிரம்ம தேவன் மாமிசமும் நரம்பும், எலும்பும், சேர்த்து கட்டிய கட்டுப் போன்ற இந்த உடலில் பசை போன்று ஒட்டும் தன்மை வாய்ந்த இரத்தத்தையும் உச்சி முதல் பாதங்கள் வரை பாய்ச்சி, இருவினைகளோடு என்னையும் படைத்து விட்டானே! உலகினில் வழி அறியாமல் இருக்கும் எனக்கு ஒரு வழியாய் இருப்பாய் (எ-று)

தாரணிக்கதி பாதகமாகிய செயலே புரிந்து
ஓரணியா நின்ற யசுரரோடு திரண்டெழுந்து சமரே புரிந்து 
வேரணியாய் நின்ற சூரனை வேலாலிரு கூறிட்ட
பூரணி பெற்ற வள்ளி மணாளா! தருவாய் நின் திருவடிகளையே! 50


தாரணிக்கு அதி பாதகம் ஆகிய செயலே புரிந்து ஓர்
அணியாய் நின்ற அசுரரோடு திரண்டு எழுந்து சமரே புரிந்து 
வேர் அணியாய் நின்ற சூரனை வேலால் இரு கூறு இட்ட
பூரணி பெற்ற வள்ளிமணாளா! தருவாய் நின் திருவடிகளையே!


(க-ரை) இப்பூவுலகத்திற்கு மிகவும் கொடுமை வாய்ந்த செயல்களையே செய்யும் அசுரர்களோடு ஒரே வரிசையாக நின்று பெருகி எழுந்து போர் புரிந்து, பின் அசுரர்களுக்கு ஆணிவேராகவும், வேர்களை வரிசையாக உடைய மாமரமாக நின்ற சூர பதுமனை வேலாயுதத்தால் இரு பாகமாகப் பிளந்த, அனைத்து அம்சங்களையும் முழுவதுமாய் பெற்றுள்ள பார்வதி யாள் பெற்ற வள்ளி மணவாளனே! உன்னுடைய திருவடிகளைத் தருவாய் (எ-று)


திருமகளுலாவு திருமார்புடையோன் மருகா! வள்ளிமணாளனே!
உருவமாயுந்தனையுள்ளே யுருவகித்து நோக்கினேன் நீயும்
குருவாய் தோன்றி சித்திகளெட்டையுங் குறைவின்றி
அருளியழிப்பாய் தொடரும் பிணியெனும் தீயுருவையே! 51

திருமகள் உலாவு திருமார்பு உடையோன் மருகா! வள்ளிமணாளனே!
உருவமாய் உந்தனை உள்ளே உருவகித்து நோக்கினேன் நீயும்
குருவாய் தோன்றி சித்திகள் எட்டையுங் குறைவு இன்றி
அருளி அழிப்பாய் தொடரும் பிணி எனும் தீ உருவையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இலக்குமி தங்கியுள்ள திருமார்பையுடைய
திருமாலின் மருமகனே! உந்தனை உளத்தினுள்ளே உருவகப்படுத்தி
தியானித்து பார்த்தேன், நீயும் குருவாய்த் தோன்றி எட்டு சித்திகளையும் அருளி, அதோடு தொடர்கின்ற தீய உருவங் கொண்ட பிணிகள்
அனைத்தையும் அழித்துடுவாய் (எ-று)


தீயும் பவனமுந் நீரும் வெளியு மொளியு மிலையுங்
காயுங் கனியுமாய் யனைத்துயிர்க்கும் படைத்து வள்ளிமணாளனே!
சேயுஞ் செல்வக்குமரனுமாய் விருத்தனுமாய் யெங்குமெப்போதும்
தாயுந் தந்தையுமாயிருக்கிலடியாரை யணுகுமோ துயரங்களே! 52


தீயும் பவனமுந் நீரும் வெளியும் ஒளியும் இலையுங்
காயுங் கனியுமாய் அனைத்து உயிர்க்கும் படைத்து வள்ளி மணாளனே!
சேயுஞ் செல்வக் குமரனுமாய் விருத்தனுமாய் எங்கும் எப்போதும்
தாயுந் தந்தையுமாய் இருக்கில் அடியாரை அணுகுமோ துயரங்களே!


(க-ரை) தீ, காற்று, நீர், ஆகாயம், வெளிச்சம், இலைகள், காய்கள்,
பழங்கள் ஆகிய அனைத்தும் உலகினில் உயிர்களுக்காகப் படைத்த
வள்ளிக்கு மணவாளனே! நீயே குழந்தையுமாய், செல்வக்குமரனுமாய்,
வயோதிகனுமாய், தாயுமாய், தந்தையுமாய், எங்கும், எப்போதும்,
இருக்கில் உன் அடியார்களை துயரங்கள் வந்து சேருமோ? (எ-று)

துயர மறுத்து தூய வாழ்வினை கொடுக்கும் யென்றுங்
கயவர் நட்பை விடுக்கும், வள்ளி மணாளனின் கழலடியை
அயராது பாடி பணிக்கும், முத்தியை கொண்டு சேர்க்கும்,
உயர்ந்த நெறியை யிதுகாறுந் தேடாதிருந்தேனே தெரியாமலே. 53

துயரம் அறுத்து தூய வாழ்வினை கொடுக்கும் என்றுங்
கயவர் நட்பை விடுக்கும் வள்ளி மணாளனின் கழல் அடியை
அயராது பாடி பணிக்கும் முத்தியை கொண்டு சேர்க்கும்
உயர்ந்த நெறியை இது காறுந் தேடாது இருந்தேனே தெரியாமலே.

(க-ரை) வள்ளி மணாளனின் திருவடிகள், துயரங்களை விலக்கித் தூய்மையான வாழ்வு கொடுக்கும். என்றும் துட்டர்களின் நட்பை விலக்கிடும்.
முக்தியை கொண்டு சேர்க்கும். அவனை சலிக்காமல் பாடுவதற்குச் செய்யும்.
இத்தகைய உயர்ந்த அவன் திருவடியைத் தொழுகின்ற நல்ல வழியை
பின்பற்றாமலும், தெரியாமலும், தேடாமலும் இதுநாள் வரை
இருந்து விட்டேனே! (எ-று)

தெரிவை மக்கள் செல்வம் பலவுமிருப்பினும் கூற்றன்
உரிய நாளில் வரும் வேளையில் சதமாகுமோ?
அரிய யனறியாதவன் மைந்தனை, வள்ளிமணாளனை பூசனைகள்
புரிந்து போக்கலாமே பிறவியை, பெறலாமேயின்பத் தேனையே! 54


தெரிவை மக்கள் செல்வம் பலவும் இருப்பினும் கூற்றன்
உரிய நாளில் வரும் வேளையில் சதம் ஆகுமோ?
அரி அயன் அறியாதவன் மைந்தனை வள்ளிமணாளனை பூசனைகள்
புரிந்து போக்கலாமே பிறவியை, பெறலாமே இன்பத் தேனையே!

(க-ரை) மனைவி, மக்கள் செல்வங்கள் என பல இருந்தாலும் காலன் தகுந்த நாளில் வரும் போது, இவையெல்லாம் தனக்குச் சாதகமாக துணைபுரியுமா? (புரியாது). திருமாலும், பிரமனும் தேடுதற்கு அரிதான சிவபெருமானின் புத்திரனை, வள்ளிக்கு மணவாளனை பூசைகள் செய்து இப்பிறவியை ஒழிக்கலாமே! என்றும் பருகுவதற்கு இனிய தேனைப் போன்ற இன்ப மயமான வாழ்வை அடையலாமே! (எ-று)


ராகம் : ஹம்சாநந்தி

தேனை வடித்துச் சொரிந்து திருப்பாதங்களை வானவருந்தொழுதிட
வானைப் பிளந்து வரையெனத் திரண்டத்தானவரை யழித்து
மானை யணைந்து மகிழும் வள்ளிமணாளனே! யருளாய் யெந்தன்
ஊனை ஒழித்துமக் கன்பால் பாமாலைகளை தொடுத்திடவே! 55


தேனை வடித்துச் சொரிந்து திருப்பாதங்களை வானவரும் தொழுதிட
வானைப் பிளந்து வரை எனத் திரண்டத் தானவரை அழித்து
மானை அணைந்து மகிழும் வள்ளிமணாளனே! அருளாய் எந்தன்
ஊனை ஒழித்து உமக்கு அன்பால் பாமாலைகளை தொடுத்து இடவே!


(க-ரை) தேவர்கள் எல்லோரும் தேனை பிழிந்து வடித்து உந்தன் திருப் பாதங்களில் ஊற்றி வணங்கிட, ஆகாயத்தைப் பிளந்து கொண்டு நிற்கும் மலையெனத் திரண்டு எழுந்த அசுரர்களை அழித்து, மானைப் போன்ற வள்ளியை அணைந்து மகிழும் வள்ளிக்கு மணவாளனே! எந்தன் மாமிசம் சேர்ந்த இவ்வுடலை ஒழித்து, உமக்கு அன்பால் ஆகிய பாமாலைகளை சூட்டிட அருள்வாய் (எ-று)


தொடுத்த நாள் முதல் கவிகள், முடிவுறும் வரை
எடுத்த ப்பிறவிக்கு இடுக்கண் ஏதும் வாராது வள்ளிமணாளனே!
விடுத்த யுன்றன் பணிகள் யாவும் செம்மையாய்ச்சிறப்புற்றிட 
கொடுத்தருளாய் தெம்பு முறுதியும் நசை ஆகிய தோலுக்கே. 56

தொடுத்த நாள் முதல் கவிகள் முடிவுறும் வரை
எடுத்த இப்பிறவிக்கு இடுக்கண் ஏதும் வாராது வள்ளிமணாளனே!
விடுத்த உன்றன் பணிகள் யாவும் செம்மையாய் சிறப்பு உற்றிட
கொடுத்து அருளாய் தெம்பும் உறுதியும் நசை ஆகிய தோலுக்கே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! உந்தன் திருப்பாதங்களுக்கு கவிகளா கிய பாமாலைகளைச் சூட்டுவதற்கு ஆரம்பித்த நாள் முதல், அந்த பாமாலை கள் முடிவு பெறும் நாள் வரை எடுத்த இந்த பிறவிக்கு துன்பங்கள் ஏதும் வராமல், எனக்கு கொடுத்துள்ள இந்த பணிகள் யாவும் செழிப்பாய், சிறப்பாய், முடிவு பெற்றிட உடலாகிய இந்த தோலுக்கு, உறுதியும், தெம்பும் கொடுத்து அருள்வாய் (எ-று)


தோலொடு மூடிய கூரையை யுனதாக்கி வள்ளி மணாளனே!
கோலொடு கொடியுங் கொண்ட கோமளயுருவமதை
பாலொடு தேனுங் கலந்தாற் போற் திருப்புகழாற் பாடி
ஞாலமும் தலந்தோறும் வலம் வர தீமைகள் நகருமே.57 

தோலொடு மூடிய கூரையை உனது ஆக்கி வள்ளிமணாளனே!
கோலொடு கொடியுங் கொண்ட கோமள உருவம் அதை
பாலொடு தேனுங் கலந்தாற் போற் திருப்புகழாற் பாடி
ஞாலமும் தலந்தோறும் வலம் வர தீமைகள் நகருமே.

(க-ரை) தோலால் கூரையைப் போல் மூடியுள்ள இவ்வுடம்பெனும் வீட்டினை வள்ளிமணாளனுக்கே தொண்டு செய்வதற்கு உரியது என்று வைத்து, தண்டாயுதமும், சேவற்கொடியும் திருக்கரங்களில் கொண் டுள்ள அவனது சிங்கார ரூபமதை, பாலில் கலந்த தேனைப் போல் திருப்புகழ் பாக்களால் பாடி உலகினில் தலங்கள் தோறும் வலம் வந்திட தீமைகள் அனைத்தும் விலகிடுமே (எ-று)

நகரமிரு பாத நாதனுக்கு நற்குருவே! வள்ளிமணாளனே! 
பகரும் பாமாலைகளை பன்னிரு செவியால் பரிபூரணமாய் கேட்டு 
இகபர சௌபாக்கியங்களையருளயினிதாய் மயிலேறி 
சிகர வினைகளையறுக்க வருவாய் சற்குரு நாதனாகவே. 58

நகரம் இரு பாத நாதனுக்கு நற்குருவே! வள்ளிமணாளனே! 
பகரும் பாமாலைகளை பன்னிரு செவியால் பரிபூரணமாய் கேட்டு 
இகபர சௌபாக்யங்களை அருள் இனிதாய் மயில் ஏறி 
சிகர வினைகளை அறுக்க வருவாய் சற்குருநாதனாகவே.

(க-ரை) 'ந' கரம் என்கின்ற தமிழ் எழுத்தை தன் இரு பாதங்களாக கொண்ட தலைவனாகிய நடராஜ பெருமானுக்கே நல்ல குருவாயிருந்து உபதேசம் செய்த வள்ளிக்கு மணவாளனே! யான் சொல்லக்கூடிய பாமாலைகளை உன் பன்னிரு செவிகளால் முழுவதுமாய்க் கேட்டு, என் மலை போன்ற வினைகளை அறுத்து, இகத்திலும் பரத்திலும், சௌ பாக்யங்களை அருளுவதற்கு, இனிமையாக மயிலினில் ஏறி சற்குரு நாதனாக வருவாய் (எ-று)

நாத விந்துகலாதி நமோ நமவென்று துதிக்க போதகமே
போதிக்க வருவாய்! பொற்குமரா! வள்ளிமணாளனே!
பாதகமே யென்றுமணுகாது பரகருணை பதம் பெறவே
வேதமே யுருவாய் வந்து ஞானத்தை நல்காய் நித்தமுமே. 59


நாத விந்துகள் ஆதி நமோ நம என்று துதிக்க போதகமே
போதிக்க வருவாய் புனிதா பொற்குமரா ! வள்ளி மணாளனே!
பாதகமே என்றும் அணுகாது பரகருணை பதம் பெறவே
வேதமே உருவாய் வந்து ஞானத்தை நல்காய் நித்தமுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! புனித தன்மை வாய்ந்தவனே! பொன்னைப் போன்று பிரகாசிப்பவனே! நாதமும் விந்தும் கலந்த ஆதிபரம் பொருளே! உமக்கு வந்தனம் வந்தனம் என்று துதிப்பதற்கும், வேதங்களின் உருவமாய் வந்து நித்தம் ஞானத்தை அருளுவதற்கும் கெடுதல் வராமல் பரமானந்தமாகிய கருணையை பெறுவதற்கும் உந்தன் உபதேசமதை போதிக்க வருவாய் (எ-று)



நித்தமு முந்தன் பாதமதை மனதால் நினைந்து வள்ளிமணாளனே!
சுத்த சிவஞானானந்தத்தோடு கலந்து நீங்கா தென்றும்
உத்தமதான வாழ்வை பெறவே யுலகிலடியேன்
சித்தமதாக வருவாய் சிறியேனையுங் காத்திடவே நீயே. 60


நித்தமும் உந்தன் பாதம் அதை மனதால் நினைந்து வள்ளி மணாளனே!
சுத்த சிவஞான ஆனந்தத்தோடு கலந்து நீங்காது என்றும்
உத்தமது ஆன வாழ்வை பெறவே உலகில் அடியேன்
சித்தம் அது ஆக வருவாய் சிறியேனை காத்திடவே நீயே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! நித்தமும் உந்தன் திருப்பாதங்களை மனதில் தியானித்து, சுத்த சிவமயமான, ஆனந்தத்தோடு சேர்ந்து அந்த நிலை மாறாமல், நீயே அடியேன் உள்ளமதில் வந்து இச்சிறியவனான என்னைக் காத்து, என்றும் உன்னதமான வாழ்வை பெற்றிட அருள்வாய் (எ-று)


ராகம் : சங்கராபரணம் 

நீலங்கொள் மேனியனும் ஞானங் கொள் வேதியனும் வியக்கும்
ஆலங் கொள் சோதியன் அருமை மைந்தா! வள்ளிமணாளனே!
ஓலங் கொள் யசுரனை யன்று வதைத்து வேலொடு மயிலுமாய்
கோலங்கொள் குமரா! யோதிடவேதாராயரிய நூலையே! 61

நீலங் கொள் மேனியனும் ஞானங் கொள் வேதியனும் வியக்கும்
ஆலங் கொள் சோதியன் அருமை மைந்தா! வள்ளி மணாளனே!
ஓலங் கொள் அசுரனை அன்று வதைத்து வேலொடு மயிலுமாய்
கோலங் கொள் குமரா! ஓதிடவே தாராய் அரிய நூலையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! நீல நிற மேனியைக் கொண்ட திருமாலும் ஞானத்தோடு வேதங்களை அறிந்த பிரமனும், வியப்புற்று நிற்கும் ஆலகால விடத்தை உட்கொண்ட சோதி சொரூபமானவன் ஆகிய சிவபெருமானின் அருமை புதல்வனே! மலை போல திரண்டு 'ஓ' வென்று கூவிய அசுரனை அன்று வதைத்து வேலொடு மயிலும் ஆக்கி, அவன் மீது அமர்ந்து கோலங்கொண்ட குமரா! உனது அரிய நூலாகிய திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாய் (எ-று)


நூலினை யொத்த யிடையாளாகிய யுமையம்மையிடம்
வேலினை வாங்கி வெகுண்டெழுந்த சூரனை வதைத்து
காலினை கருணையுடன் முடிமேலிட்ட வள்ளிமணாளனை
தோலினை மூடிய கூரையுளிருத்திட பயணமும் நெடிய தாமோ? 62

நூலினை ஒத்த இடையாள் ஆகிய உமை அம்மையிடம்
வேலினை வாங்கி வெகுண்டு எழுந்த சூரனை வதைத்து
காலினை கருணையுடன் முடி மேல் இட்ட வள்ளி மணாளனை
தோலினை மூடிய கூரை உள் இருத்திட பயணமும் நெடிதாமோ?


(க-ரை) நூலினைப் போன்ற இடையினை உடையவளாகிய உமையவ ளிடம் வேலாயுதத்தை வாங்கி, போர் செய்வதற்கு, கோபங்கொண்டு எழுந்த சூரனை வதைத்து, தனது திருவடிகளை அவனது முடிமேல் வைத்த வள்ளிக்கு மணவாளனை, தோலினைக் கொண்டு மூடியுள்ள கூரையாகிய உடலினுள்ளே வைத்தால், முக்தி பயணம் நீளமாக தோன்றாது (எ-று)

நெடிய வடகுவடுமிடிய வேலை யெறிந்தவள்ளிமணாளனே!
அடியவன் யுள்ளமதில் பன்னிருவிழியோடு முகங்களாறும்
முடியது முதல் தண்டையுந் சிலம்புமணிந்த பாதங்களும்
படியவே யருளும் யென்றும் நீங்கா நேச முடனே! 63

நெடிய வட குவடும் இடிய வேலை எறிந்த வள்ளி மணாளனே!
அடியவன் உள்ளம் அதில் பன்னிரு விழியோடு முகங்கள் ஆறும்
முடி அது முதல் தண்டையுந் சிலம்பும் அணிந்த பாதங்களும்
படியவே அருளும் என்றும் நீங்கா நேசம் உடனே!

(க-ரை) நீண்டு உயர்ந்து நின்ற சிகரமாகிய கிரௌஞ்சமலை இடிந்து பொடியாகும்படி வேலாயுதத்தை எறிந்து அழித்த வள்ளிக்கு மணவாளனே! பன்னிரு விழியோடு கூடிய முகங்கள் ஆறுங்கொண்டு, உந்தன் முடியது முதல், தண்டைகளும், சிலம்பும் அணிந்த பாதங்கள் வரை, அடியேன் உளமதில் நிலை கொளவும், என்றும் நீங்காத அன்பையும் தருவாய் (எ-று) நேசா சாரா! முருகா! யென்று நிறைவோ டோதி ஆசா பாசங்களை துறந்த முநிவர்களை சென்றுயாட்கொண்ட வாசா! வள்ளிமணாளனே! வரையென திரளு மரக்கர் குல நாசா! யடியேன் துயர் களைந்து ஞானமே பகர்வாயே!

நேசா சாரா! முருகா! யென்று நிறைவோ டோதி
ஆசா பாசங்களை துறந்த முநிவர்களை சென்றுயாட்கொண்ட
வாசா! வள்ளிமணாளனே! வரையென திரளு மரக்கர் குல
நாசா! யடியேன் துயர் களைந்து ஞானமே பகர்வாயே! 64


நேசா சாரா! முருகா! என்று நிறைவோடு ஓதி
ஆசா பாசங்களை துறந்த முநிவர்களை சென்று ஆட்கொண்ட
வாசா! வள்ளி மணாளனே! வரை என திரளும் அரக்கர் குல
நாசா! அடியேன் துயர் களைந்து ஞானமே பகர்வாயே!



(க-ரை) அன்பின் சாரமாய் திகழும் முருகோனே! என்று மனநிறைவோடு ஓதுகின்ற ஆசையையும் பந்த பாசங்களையும் வென்று துறந்த முனிவர்களை தேடிச் சென்று ஆட்கொண்ட, வள்ளி மலைதனில் வாழும் வள்ளி மணவாளனே! மலைபோல திரண்டு வரக்கூடிய அசுரர்குலம் முழுவதையும் நாசம் செய்தவனே! அடியேனுடைய துயர்களை நீக்கி ஞானத்தைக் கூறி அருள்வாய் (எ-று )

பகர் தற்கரிய பொருளாய் பதியெங்கிலுமுறையுவள்ளிமணாளனே!
நகர்தற்கரிய நிலை வந்தெய்தா முன்னரேயான்
நுகர்தற்கரிய திருப்புகழையென்று மோதி வுய்வுற
புகர்தற்கரிய பாதங்களைத் தருவாய் தண்டையோடு பாடக முமே. 65


பகர்தற்கு அரிதான பொருளாய் பதி எங்கிலும் உறையும் வள்ளிமணாளனே!
நகர்தற்கு அரிதான நிலை வந்து எய்தா முன்னரே யான்
நுகர்தற்கு அரிதான திருப்புகழை என்றும் ஓதி உய்வுற
புகர்தற்கு அரிதான பாதங்களைத் தருவாய் தண்டையோடு பாடகமுமே.


(க-ரை) சொல்லுவதற்கு அரிய பொருளாக பலபதிகளிலும் வாழுகின்ற வள்ளிக்கு மணவாளனே! யான் நகர்ந்து செல்வதற்கு கூட முடியாத ஒரு நிலை வந்து அடைவதற்கு முன்னரே மனதாலும், உடலாலும் உணர்ந்து கொள்வதற்கு அரிதான உந்தன் திருப்புகழை தினமும் ஓதி திருவடிப் பேற்றினை அடைவதற்கு, கூறுவதற்கு அரிதான உந்தன் தண்டையும், பாடகமும் அணிந்த பாதங்களை தருவாய் (எ-று)

பாடகச் சிலம்பணிந்த பாதங்களை யென்மேல் பொருத்தி
நாடகங்களால் பலவாறாய் நடித்து நடங்கள் பலவே புரிந்த
ஆடகக்குன்றோன்மைந்தா! வள்ளிமணாளனே! யடியேனுய்ய
ஊடகத்தோடுறைந்து னதாக்குமே யிப் பிறவியையே. 66

பாடகச் சிலம்பு அணிந்த பாதங்களை என்மேல் பொருத்தி
நாடகங்களால் பலவாறாய் நடித்து நடங்கள் பலவே புரிந்த
ஆடகக் குன்றோன் மைந்தா! வள்ளி மணாளனே! அடியேன் உய்ய
ஊடகத்தோடு உறைந்து உனது ஆக்குமே இப்பிறவியையே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இவ்வுலகினில் பல வேடங்களில் தோன்றி நடித்து திருவிளையாடல்களை புரிந்து, அனைத்து ஆடல் கலை களையும் அருளியவனான நடராஜப் பெருமானின் புதல்வனே! அடியேன் நல்ல பேற்றினை அடைவதற்கு என் உடலோடு ஒட்டிய உள்ளத்தில் எழுந்தருளி, இப்பிறவியை உனக்கு அடிமையாகக் கொண்டு அருளும் (எ-று )

ராகம் : ஆனந்த பைரவி

பிறவியான சடத்தை யடைந்துனை பேசாநாட்களை
உறவினொடுற்றாரும் சதமென்றெண்ணி கழித்து
மறவியொடு மதமுங் கொண்டு மதிமயங்கியழியாது
துறவிகளும் தொழும் வள்ளிமணாளனே! காருமெனைபுவியிலே! 67


பிறவியான சடத்தை அடைந்து உனை பேசாத நாட்களை
உறவினொடு உற்றாரும் சதம் என்று எண்ணி கழித்து
மறவியொடு மதமுங் கொண்டு மதி மயங்கி அழியாது
துறவியொடு தொண்டருங் தொழும் வள்ளிமணாளனே! காரும் எனைபுவியிலே!


(க-ரை) துறவிகளும், தொண்டர்களும் தொழுகின்ற வள்ளிக்கு மண வாளனே! எதற்கும் உதவா இப்பிறப்பை அடைந்து, உனை பேசாத நாட்களை எல்லாம், தனக்கு உற்றவர்களும், உறவினர்களும் நிலையென்று நம்பி, அவர்களொடு கழித்து, பொறாமையும் ஆங்காரமுங் கொண்டு, அதனால் புத்தி மயங்கி அழிந்து போகாமல், இவ்வுலகினில் எனைக் காத்து அருள்வாய் (எ-று)

புவிக்குன் பாதங்களை யாதாரமாக வைத்திடரால்
தவிக்கு முயிர்களையாட்கொண்டு யிரட்சித்துக், கரங்களை
குவித்து வணங்குமடியார்க்கருளும் வள்ளிமணாளனே! யடியேன்
செவிக்குன்றன் திருப்புகழை பாய்ச்சிட யருளாய் பூரண மாகவே. 68


புவிக்கு உன் பாதங்களை ஆதாரமாக வைத்து இடரால்
தவிக்கும் உயிர்களை ஆட் கொண்டு இரட்சித்துக், கரங்களை
குவித்து வணங்கும் அடியார்க்கு அருளும் வள்ளி மணாளனே! அடியேன்
செவிக்கு உன்றன் திருப்புகழை பாய்ச்சிட அருளாய் பூரணமாகவே.


(க-ரை) இரு கரங்களைக் குவித்து வணங்கும் உன் அடியார்க்கு அருளும் வள்ளிக்கு மணவாளனே! இந்த உலகத்துக்கு உந்தன் திருப்பாதங்களையே ஆதாரமாக வைத்து, துன்பங்களால் தவிக்கும் சகல உயர்களையும் ஆட் கொண்டு காத்தும், அடியேன் செவிகளுக்கு உந்தன் திருப்புகழை முழுவதுமாய் பாய்ச்சி கேட்கும் பாக்யத்தையும் அருள்வாய் (எ-று)


பூரண வாரகும்பங்களை வைத்துனை பூசிக்க
ஆரணமேதுமறியேனேவள்ளிமணாளா! யடியேனையாட்கொள
காரணமேது சொலாய் கடையேன் பிழைபொறுக்க
வாரண மங்கையு மெச்சு முமக்கிது பெரிதோ? 69


பூரண வார கும்பங்களை வைத்து உனை பூசிக்க
ஆரணம் ஏதும் அறியேனே வள்ளிமணானே! அடியேனை ஆட்கொள
காரணம் ஏது சொலாய் கடையேன் பிழை பொறுக்க
வாரண மங்கையும் மெச்சும் உமக்கு இது பெரிதோ?


(க-ரை) முழுமை பெற்ற கும்பங்களை வைத்து உனை பூசிக்க வேதசாஸ் திரங்கள் ஒன்றும் தெரியாதவனாய் இருக்கிறேனே! அடியேனை ஆட் கொள்ள எந்தக் காரணமும் இல்லையா? சொல்வாய் வள்ளிக்கு மண வாளனே! சிறியவனாகிய என் பிழைகளை பொறுத்துக் காத்திட, தெய்வ யானையும் மெச்சும்படியான உமக்கு இது பெரிதாகுமோகூறாய் (எ-று )

பெரியதோர் கரியையுரித்தவன் குமரா! வள்ளிமணாளனே!
அரியதோர் மானிட பிறவியை பெற்று வெண்ணீற்றை
தரியாது நுதலிலே, நாவில் கூறாது நாமங்களையே, வினையேன்
மரித்தே போவேனோ? காவாய்யெமை பேத மிலாமலே. 70


பெரியது ஓர் கரியை உரித்தவன் குமரா! வள்ளிமணாளனே!
அரியது ஓர் மானிட பிறவியை பெற்று வெண்ணீற்றை
தரியாது நுதலிலே, நாவில் கூறாது நாமங்களையே, வினையேன்
மரித்தே போவேனோ? காவாய் எமை பேதமிலாமலே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பெரியதாக இருக்கின்ற ஒரு யானையின் தோலை உரித்து போர்த்திக் கொண்டவனாகிய சிவபெருமானின் புதல்வனே! மிகவும் அரிதாகிய இந்த மானிட பிறவியைப் பெற்று திருவெண்ணீற்றைத் தரித்துக் கொள்ளாமலும், உனது திருநாமங்களை நாவினால் கூறாமலும் வினைகளால் சூழ்ந்தவனாகிய அடியேன் இறந்தே போய் விடுவேனோ? அவ்வாறு ஆகாமல் என்னை வேறு பாடு இல்லாமல் காப்பாய் (எ-று)

பேதக விரோதமான பிரபஞ்ச வாழ்வில் மூழ்கி 
பாதகங்களே பலவாராய் புரிந்து பயனொன்றுங் காணாது 
சாதலுக்கே பிறப்பெய்தி நொந்தழியாது வள்ளிமணாளனே! 
போதகமே யருளாய் தீராய் யெந்தன் யேதங்களை பையவே! 71 

பேதக விரோதமான பிரபஞ்ச வாழ்வில் மூழ்கி 
பாதகங்களே பலவாராய் புரிந்து பயன் ஒன்றுங் காணாது 
சாதலுக்கே பிறப்பு எய்தி நொந்து அழியாது வள்ளிமணாளனே! 
போதகமே அருளாய் தீராய் எந்தன் ஏதங்களை பையவே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பலவிதமான மன வேறுபாடு களையுடைய இந்த உலக வாழ்வினில் மூழ்கி, பல கெடுதல்களையே செய்து அதனால் பயன் ஒன்றையும் அடையாது, இறப்பதற்கு என்றே இப்பிறப்பை எடுத்து, நொந்து அழிந்து போகாமல் இருக்க ஓர் உபதேசம் அருளி தீர்ப்பாய் எந்தன் குற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக! (எ-று)

பையரவு யணையிற்றுயிலும் பதுமநாபன் மருகா! வள்ளிமணாளனே!
கையைந்துடையோன் துணையால் குறப்பாவையையாட்கொண்டு
ஐயைந்தோடிரண்டொன்றுரைத்தானுக்கு குருவாகி பிரணவ மதை
நையவேயுரைத்த நகுமுகப்பெருமாளேயருளும் பொற்றாளையே! 72


பை அரவு அணையில் துயிலும் பதும நாபன் மருகா! வள்ளி மணாளனே!
கை ஐந்து உடையோன் துணையால் குறப்பாவையை ஆட்கொண்டு
ஐ ஐந்தோடு இரண்டு ஒன்று உரைத்தானுக்கு குருவாகி பிரணவம் அதை
நையவே உரைத்த நகுமுகப் பெருமாளே! அருளும் பொற் தாளையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! விஷப் பையை கொண்டுள்ள பாம் பாகிய ஆதிசேடன் மீது உறங்கும் பதுமநாபனாகிய திருமாலின் மரும கனே! ஐந்து திருக் கரங்களை (தும்பிக்கையை சேர்த்து) உடையவனாகிய விநாயகப் பெருமானின் துணையைக் கொண்டு குறப்பெண்ணாகிய வள்ளியை ஆட்கொண்டு இருபத்து எட்டு சிவ ஆகமங்களை உரைத்த வனாகிய சிவபெருமானுக்கே குருவாகி, பிரணவப் பொருள் அருமையாக உரைத்த புன்சிரிப்புடைய பெருமானே! உந்தன் பொன்னாகிய தாமரைப் பாதங்களை தருவாய் (எ-று )

ராகம் : சங்கரானந்த பிரியா

பொற்பத்தினை துதித்து போதியசொற்பதமேபெற வள்ளிமணாளனே!
நற்றவமும் ஞானமும் பத்தியும் நல்வாழ்வும் நயமுடன் தாராய்
கற்பக விநாயகன் கையிடையமர்ந்தோன் நுதலிலுதித்தோனே!
அற்பனாகிய யடியேனுய்ந்திட யுணர்த்தி யருளாய் சிவபோகமே! 73


பொற் பதத்தினை துதித்து போதிய சொற்பதத்தினை பெற்றிட வள்ளிமணாளனே!
நற்றவமும் ஞானமும் பத்தியும் நல்வாழ்வும் நயமுடன் தாராய்
கற்பக விநாயகன் கையிடை அமர்ந்தோன் நுதலில் உதித்தோனே!
அற்பன் ஆகிய அடியேன் உய்ந்திட உணர்த்தி அருளாய் சிவபோகமே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! உந்தன் பொன் போன்ற திருப் பாதங்களை வணங்கி உனை பாடுவதற்கு, போதுமான அளவு சொற்களும், அதற்குறிய பொருள் பெறுவதற்கு நல்ல தவமும், ஞானமும், பக்தியும் நல்ல வாழ்வும் தருவாய். கற்பக விநாயகர் திருக்கரங்களில் அமர்ந்துள் ளவனாகிய, சிவபெருமானின் நெற்றியில் தோன்றியவனே! இந்த அற்ப புத்தியை கொண்டவனாகிய அடியேன் நல்ல பேற்றினை அடைவதற்கு, சிவ உபதேசங்களையும், ஆகமங்களையும் உணர்த்தி அருள்வாய்' (எ-று )

போக கற்பக் கடவுட் பூருகமுடையோனைக் காத்த
நாக விடமே மிடறினிலடக்கியவன் மைந்தா! வள்ளிமணாளனே!
மேக வண்ண னும் மெச்சும் மருகா! யடியே னுயிர்க்கு
யோக சித்தியை கொடுத்து தடுத்தாட் கொள்வாய் மனதையே! 74


போக கற்பக் கடவுட் பூருகம் உடையோனைக் காத்த
நாக விடமே மிடறினில் அடக்கியவன் மைந்தா! வள்ளிமணாளனே!
மேக வண்ணனும் மெச்சும் மருகா! அடியேன் உயிர்க்கு
யோக சித்தியை கொடுத்து தடுத்து ஆட் கொள்வாய் மனதையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! விருப்பம் போல் போகங்களை தரக்கூடிய 'தெய்வ விருட்சம்'' எனப்படும் கற்பக மரத்தையுடைய வனாகிய இந்திரனை இரட்சித்த, பாம்பின் விஷத்தை போன்ற கொடிய ஆலகால விஷத்தை தன் கழுத்தினில் அடக்கிய சிவபெருமான் புதல்வனே! மேகத்தை போன்ற கருநீல வண்ணனாகிய திருமாலும் மெச்சும்படியான மருமகனே! அடியேன் உயிருக்கு யோக சித்திகளை கொடுத்து, என் மனதை தீய வழியில் செல்லாமல் தடுத்து ஆட்கொள் வாய் (எ-று)

மனக் கவலை யேதுமின்றி மதியைத் திருத்தி மண்ணினில்
உனக் கடிமையே புரிந்து யுடலுமுயிரு முருகிட
எனக் கென்றருள்வாய் வள்ளிமணாளா! யின்னமுமிறங்காயோ?
தனக் குவமையிலாதவனே! தருவாய் கடப்ப மாலையையே! 75


மனக் கவலை ஏதும் இன்றி மதியைத் திருத்தி மண்ணினில்
உனக்கு அடிமையே புரிந்து உடலும் உயிரும் உருகிட
எனக்கு என்று அருள்வாய் வள்ளி மணாளா! இன்னமும் இறங்காயோ?
தனக்கு உவமை இலாதவனே! தருவாய் கடப்ப மாலையையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! உனக்கு நிகராக உரைப்பதற்கு எதையும் கூறமுடியாதவனாக இருப்பவனே! கவலைகள் இல்லா மன துடன் என் புத்தியை திருத்தி இவ்வுலகினில் உனக்கு அடிமையே செய்து என் உடலும், உயிரும் உருகிட என்று அருள் புரிவாய்? இன்னமுங்கருணை காட்ட வில்லையே? உனது கடப்ப மாலையை அடியேனுக்கு தருவாய் (எ-று)

மாலையில் மாலையை வழங்கிட வள்ளிமணாளனே! நீயும் விரைவாய்
சோலையிலுலாவிடும் புரவியிலேறி வாரும் யானும்
ஆலையில் நலியுங் கரும்பாய் துரும்பாய் சிதையாதுந்தனை
வாலையில் வணங்கிட வளமிகு பார்வை பாரும் மின்னாருடனே! 76


மாலையில் மாலையை வழங்கிட வள்ளி மணாளனே! நீயும் விரைவாய்
சோலையில் உலாவிடும் புரவியில் ஏறி வாரும் யானும்
ஆலையில் நலியுங் கரும்பாய் துரும்பாய் சிதையாது உந்தனை
வாலையில் வணங்கிட வளமிகு பார்வையை பாரும் மின் ஆருடனே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! யான் ஆலையின் இட்டு பிழியும் கரும்பைப் போல் துரும்பாய் சிதைந்து போகாமல், உந்தனை வாலிபப் பருவத்திலேயே வணங்கிடவும், நீயும் மாலைப்பொழுதினில் மண மாலையை வழங்குவதற்கு, சோலைகளில் திரிந்து உலா வரும் மயிலினில் ஏறி வந்து உனது மின்னல் போன்ற, ஒளி மிக்க, செழிப்பு மிகுந்த பார்வையைப் பார்த்து அருளும். (எ-று)

மின்னார் செஞ்சடையில் மிளிரும் மதியைச் சூடியவன் மைந்தா!
பொன்னாலொளிரும் பூரணவடிவழகைக் காணும் பேற்றை
தன்னாலறியு முணர்வையுணர்த்தி வள்ளிமணாளனே! நீயும்
என்னாவியைத் தொடரும் வினைகளை வேலாற் விரட்டி முந்துமே! 77


மின்னார் செஞ்சடையில் மிளிரும் மதியைச் சூடியவன் மைந்தா!
பொன்னால் ஒளிரும் பூரண வடிவு அழகைக் காணும் பேற்றை
தன்னால் அறியும் உணர்வை உணர்த்தி வள்ளி மணாளனே! நீயும்
என் ஆவியைத் தொடரும் வினைகளை வேலாற் விரட்டியே முந்துமே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மின்னலைப் போன்ற பிரகாசிக்கக் கூடிய சிவந்த சடைமுடியில் ஒளி வீசக் கூடிய பிறைச் சந்திரனை அணிந்தவ னாகிய பரமேச்வரனின் புதல்வனே! உனது பொன் போன்ற ஒளி மிகுந்த முழு வடிவழகையுங் காணும் பேற்றை எனக்கு என்னாலேயே அறி வதற்கு வேண்டிய உணர்வுகளை (சிந்தனைகளை) உணர்த்தி, என் ஆவியைத் தொடரும் வினைகளை வேல் கொண்டு விரட்டித் தள்ளுவாய் (எ-று )

முந்து தமிழ் மாலைகளை முழுவதுமாய் பாடிட யானும்
வந்து புவனமதில் வடிவெடுத்து வெகு நாளாய்
உந்து மன்புமார்வமுங் கொண்டேன் வள்ளிமணாளனே!ஞானமுந்
தந்து நீயும் கருணையே டேற்பாயிடர்கள் மூளாமலே. 78


முந்து தமிழ் மாலைகளை முழுவதுமாய் பாடிட யானும்
வந்து புவனம் அதில் வடிவு எடுத்து வெகு நாளாய்
உந்தும் அன்பும் ஆர்வமுங் கொண்டேன் வள்ளி மணாளனே! ஞானமுந்
தந்து நீயும் கருணையோடு ஏற்பாய் இடர்கள் மூளாமலே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மொழிகளுக்குள்ளே மிகவும் பழமையானதாக விளங்குகின்ற தமிழ் மொழியில் பாமாலைகள் உமக்கு எவ்வளவு சூட்ட வேண்டும் என்ற இருக்கிறதோ, அவைகளை முழுவது மாய் பாடி சூட்டிட யானும் இவ்வுலகினில் பிறந்து வெகு நாட்களாய் எழுச்சிப் பெற்று, தள்ளக் கூடிய அன்பும், ஆர்வமும் கொண்டுள்ளேனே! நீயும் கருணையோடு என்னை ஏற்று ஞானமும் தந்து அடியேனை துன்பங்கள் மீண்டும் சேராத வாறு காத்து அருள்வாய் (எ-று )

ராகம் : கல்யாணி

மூளும் வினை சேர மும்மூன்று தொளையுடைய குரம்பையை
நாளும் பாதுகாத்தே நரையுந்திரையு மெய்தியப் பின்னர்
மாளும் யிம்மாய வாழ்க்கை தொடராது வள்ளிமணாளனே! நினதிரு
தாளும் சூடி தமியேனுக்கு பகர்வா யோர் சொற் மெய்யாகவே! 79


மூளும் வினை சேர மும்மூன்று தொளை உடைய குரம்பையை
நாளும் பாது காத்தே நரையுந் திரையும் எய்தியப் பின்னர்
மாளும் இம் மாய வாழ்க்கை தொடராது வள்ளி மணாளனே! நினதிரு
தாளும் சூடி தமியேனுக்கு பகர்வாய் ஓர் சொல் மெய்யாகவே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தோன்றக் கூடிய வினைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துள்ள ஒன்பது துவாரங்களை உடைய இந்த உடம்பை தினமும் பாதுகாத்து, நாளடைவில் வயது முதிர்ந்து, நரையும் வந்து சேர்ந்த பின்னர் மாண்டு போகிறது. இத்தகைய இந்த மாயம் நிறைந்த வாழ்க்கை இனியும் அடியேனைத் தொடராது உனதிரு பாதங்களை என்மேல் சூட்டி அடியேனுக்கு மெய்யான ஒரு உபதேசத்தைச் சொல்லி அருள்வாய் (எ-று)

மெய்க்கூணைத் தேடி மேதினியில் நெடுநாளாய் வள்ளிமணாளனே!
பொய்யாய்த் திரிந்து புகலிட மொன்றுங் காணாத டியேனை
செய்யாய்ச் சிறப்பான தோர் வாழ்வடைய செல்வக்குமரா! யுய்யவே
வைய்யாய் நின்னிருதாளை என்மேல் வளம் பொழி மேகமாகவே! 80


மெய்க்கு ஊணைத் தேடி மேதினியில் நெடுநாளாய் வள்ளி மணாளனே!
பொய்யாய்த் திரிந்து புகலிடம் ஒன்றுங் காணாத அடியேனை
செய்யாய்ச் சிறப்பானது ஓர் வாழ்வு அடைய செல்வக் குமரா!உய்யவே
வைய்யாய் நின் இரு தாளை என் மேல் வளம் பொழி மேகம் ஆகவே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! செல்வக் குமரனே! இந்த உடம்பை வளர்ப்பதற்கு உணவைத் தேடி, வெகுநாளாய் பொய்களை கூறி அலைந்து, அதனால் பாதுகாப்பு ஒன்றையும் காணாமல் போன அடியேனை சிறப்பு மிக்க ஒரு வாழ்வை அடையச் செய்து யான் நல்ல பேற்றினை அடை வதற்கு (எப்படி மேகமானது மழையைப் பொழிந்து வளமையும் செழுமையும் உண்டாக்குகிறதோ, அது போல் உனது இரு பாதங்களை என்மேல் வைத்து செழிப்படையச் செய்வாய் (எ-று)

மேகலை ஒளிரும் மேதகு மேனியாள் பெற்ற வள்ளிமணாளனே!
மாகலையாய் வந்த யசுரனை மாய்த்தருளியவன் மருகா!
ஏகலையாய் மாறும் யிரேசகமதை யொருநிலை படுத்திட
பாகலை ஞானச் சொற் பகர்வாயினி பரமன்மைந்தனே! 81


மேகலை ஒளிரும் மேதகு மேனியாள் பெற்ற வள்ளி மணாளனே!
மாகலையாய் வந்த அசுரனை மாய்த்து அருளியவன் மருகா!
ஏகலையாய் மாறும் இரேசகம் அதை ஒரு நிலை படுத்திட
பாகலை ஞானச் சொற் பகர்வாய் இனி பரமன் மைந்தனே!


(க-ரை) பரமேச்வரனின் புதல்வனே! தன் மார்பினில் ஒளி வீசக் கூடிய மேகலை என்கின்ற ஆபரணங்களை அணிந்துள்ள மேன்மை பொருந்திய மேனியின் அழகையுடைய உமையவள் பெற்ற வள்ளி மணவாளனே! அழுகுமிக்க பொன் மானாக வந்த மாரீசன் என்ற அசுரனை (இராமாய ணத்தில் பார்க்கவும்) அழித்து அவனுக்கு திருவருள் செய்தவனாகிய இராமபிரானின் மருமகனே! காற்றானது மூக்கின் வழியாக மாறி மாறி செல்வதை ஒரே வழியில் சென்று நிலையாக நிறுத்தும் யோக சித்தியை அளித்திடவும், உமக்குப் பாமாலைகள் புனைவதற்கு வேண்டிய கலைஞான சொற்களையும் அருள்வாய் (எ-று)

மைந்தரினிய மாதரும் வருவரோ மறலி வருந்நாளில்
நைந்துருகி நறுமலரால் வள்ளிமணாளனையர்ச்சித்து நாவால்
பைந்தமிழ் மாலைகள் பாடியாடி மகிழ்வாய் மனமே! அஃது
ஐந்தோடாய யாக்கையை யறுத்து பரகதிக்கு வழிமொழிந்திடுமே! 82


மைந்தர் இனிய மாதரும் வருவரோ மறலி வருந் நாளில்
நைந்து உருகி நறுமலரால் வள்ளி மணாளனை அர்ச்சித்து நாவால்
பைந் தமிழ் மாலைகள் பாடி ஆடி மகிழ்வாய் மனமே!
அஃது ஐந்தோடு ஆய் ஆக்கையை அறுத்து பரகதிக்கு வழி மொழிந்திடுமே.


(க-ரை) மனமே! யமன் வருகின்ற நாளினில், புதல்வர்களும், இன்பத்தை தரக்கூடிய பெண்களும் வருவார்களோ? வருவதற்குமுன் வள்ளி மணாளனை அன்பால் உருகி நல்ல மணம் வீசக் கூடிய பூக்களால் அருச்சனை செய்து, நாவால் பழைய செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாடி, ஆடி மகிழ் வாய். அது ஐந்து பொறிகளால் ஆகிய இந்த பிறவியை அறுத்து மேன் மையான பேற்றினை அடைவதற்கு ஒரு வழியைக் கூறி விடும். (எ-று)


மொழிய நிறங் கறுத்து முழுது மொடுங்கா முன்னரே
பழியுறு சொற்களும் பகையும் வினையுந் தொடராது செந்தழல்
விழியுங் கொண்டு காலனு மணுகாது வள்ளிமணாளனே! நீயும்
எழிலாய் மயிலேறி வேற் கொண் டேவியே மோது மே! 83


மொழிய நிறங் கறுத்து முழுதும் ஓடுங்கா முன்னரே
பழி உறு சொற்களும் பகையும் வினையுந் தொடராது செந்தழல்
விழியுங் கொண்டு காலனும் அணுகாது வள்ளிமணாளனே! நீயும்
எழிலாய் மயிலேறி வேல் கொண்டு ஏவியே மோதுமே
!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! எல்லோரும் சொல்லும்படியாக தோலின் நிறங் கறுத்து, சுருங்கி, ஒடுங்கா முன்னர், பழியைத் தரக்கூடிய வார்த்தைகளும், பகைமையும், வினைகளும், எனைத் தொடராமலும், சிவந்த நெருப்பினைப் போன்ற விழிகளையுடைய காலன் எனை அணுகாமலும், நீயும் அழகாக மயிலினில் ஏறி வேலாயுதத்தைக் கொண்டு வீசி அவனை மோதித் தள்ளுமே. (எ-று )

மோது மறலியொரு நாள் தேடியே வரும் போழ்து
ஏது மறியேனாகிய யென் பிழை பொறுத்தாங்கே
ஓது மறைகளினுட் பொருளை தெரிந்துய்ந்திட
மாதுமையாள் பெற்ற வள்ளிமணாளனே! களைவாய் துயரங்களே. 84


மோது மறலி ஒரு நாள் தேடியே வரும் போழ்து
ஏதும் அறியேன் ஆகிய என் பிழை பொறுத்து ஆங்கே
ஓது மறைகளின் உட் பொருளை தெரிந்து உய்ந்திட
மாது உமையாள் பெற்ற வள்ளி மணாளனே! களைவாய் துயரங்களே
.

(க-ரை) உமையெனும் மாது பெற்ற வள்ளி மணவாளனே! ஒரு நாள் யமன் என்னைத் தாக்கி அழிப்பதற்கு தேடி வரும் போது ஒன்றும் அறியா தவனாகிய என்னுடைய பிழைகளை பொறுத்து அங்கு ஓதக் கூடிய வேதங் களின் உட்பொருளை தெரிந்து கொள்ளவும் அதனால் நல்ல பேற்றினை அடைந்திடவும் என் துயரங்கள் எல்லாம் நீங்கிடவும் அருள்வாய் (எ-று)


ராகம் : காம்போதி

துயர மறுத்து நினது தூய தெரிசனமுங் காட்டிட
அயனுமன்று பதித்த வரையோலையை யயிலால் கிழித்திட
நயமுடனுமக்கே யடிமை கொண்டிட வள்ளிமணாளனே! ஈராறு
புயமொடு யேறுமயிலேறி வரவேணுமிம்மாயாயுலகினிலே! 85


துயரம் அறுத்து நினது தூய தெரிசனமுங் காட்டிட
அயனும் அன்று பதித்த வரை ஓலையை அயிலால் கிழித்திட
நயமுடன் உமக்கே அடிமை கொண்டிட வள்ளி மணாளனே! ஈராறு
புயமொடு ஏறுமயில் ஏறி வர வேணும் இம் மாயா உலகினிலே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இந்த மாயம் நிறைந்த உலகினில் என் துயரங்கள் எல்லாம் நீக்கி உனது தூய்மையான தரிசனத்தையுங் காட்டி பிரமன் அன்று எழுதிய ஓலையை கிழித்து மாற்றி அன்புடன் உன்பால் அடிமை கொண்டிடவும், பன்னிரண்டு தோள்களோடு, மயில் மீதினில் ஏறி வரவேண்டும் (எ-று)

மாயா சொரூபிணி பெற்ற மாசற்ற புதல்வா! வள்ளிமணாளனே!
ஓயாமல் நானுமுலகினிலுழைத் தொருபயனையுங் கானேனே
தாயாகி சேயெனை தாங்வகுதற்கு தயவுடனேவாருமே! நுதலிற்
தீயாகி யுதித்த தேசிகா! தென்பரங்குன்றுறை குயிலே! 86


மாயா சொரூபிணி பெற்ற மாசற்ற புதல்வா! வள்ளி மணாளனே!
ஓயாமல் நானும் உலகினில் உழைத்து ஒரு பயனையுங் கானேனே
தாயாகி சேய் எனை தாங்குவதற்கு தயவுடனே வாருமே! நுதலிற்
தீயாகி உதித்த தேசிகா! தென் பரங்குன்று உறை குயிலே!


(க-ரை) மாயங்களில் வல்லமை பொருந்திய ரூபங்களை பெற்றவள் ஆகிய பார்வதியாள் பெற்ற புதல்வனே! வள்ளிக்கு மணவாளனே! சிவ பெருமானின் நெற்றியில் தீச்சுடராகி தோன்றியவனே! தேசிகனே! திருப்பரங்குன்றம் என்னும் முதலாம் படை வீட்டில் அமர்ந்துள்ள குயிலைப் போன்று குரல் வளம் மிக்கவனே! நீ குழந்தையாகிய என்னை தாங்கி பிடிப்பதற்குத் தாயாகி கருணையோடு வந்தருளும் (எ-று )

குயிலொன்று குமரா! குகா! என்று கூவியழைக்கவே!
மயிலுந் நின்று மருளாகி பின் தெளிந்து தோகை விரித்தாட!
அயில் கொண்டு நீயுமவை நோக்கி யுடனாடி!
ஒயிலாக வருகவே வள்ளிமணாளனே! யுடலாகியயுதிரமுமுருகவே! 87

குயில் ஒன்று குமரா! குகா? என்று கூவி அழைக்கவே!
மயிலும் நின்று மருளாகிபின் தெளிந்து தோகை விரித்து ஆட!
அயில் கொண்டு நீயும் அவை நோக்கி உடன் ஆடி!
ஒயிலகாக வருகவே வள்ளி மணாளனே! உடல் ஆகிய உதிரமும் உருகவே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! குயில் ஒன்று குமரா! குகா! என்று கூவி அழைக்கவும், அது கண்டு மயிலானது நின்று வியந்து, மயங்கி, பின்னர் தெளிவு அடைந்து, தனது தோகையை விரித்து ஆடவும், நீயும் அவைகளைப் பார்த்து வேல் கொண்டு ஆடி மிக அழகாக வருவாய் அடியேன் உடல் ஆகிய உயிரும், உதிரமும் உருகிடவே (எ-று)

சீயுதிர குகையுடன் கூடிய கூரையுமழிந்து யினியோர்
தாயுதிரபையில் நிறைந்து மீண்டும் சென்ன மெடாது
வாயுதிரம் கக்கிட யசுரரை யழித்த வள்ளிமணாளனே! தொடரும்
நோயுதிர்ந்து நுமக் காளாகிட யருளாய் நுதற் தீயூறியவனே! 88


சீ உதிர குகையுடன் கூடிய கூரையும் அழிந்து இனி ஓர்
தாய் உதிர பையில் நிறைந்து மீண்டும் செனனம் எடாது
வாய் உதிரம் கக்கிட அசுரரை அழித்த வள்ளி மணாளனே! தொடரும்
நோய் உதிர்ந்து நுமக்கு ஆளாகிட அருளாய் நுதல் தீ ஊறியவனே!


(க-ரை) வாயினில் இரத்தம் கக்கும்படி அசரர்களை போரினில் வென்று மாய்த்த வள்ளிக்கு மணவாளனே! சிவனாரின் நெற்றியில் தீச்சுடராக ஊறித் தோன்றியவனே! 'சீ' என்று உமிழக் கூடிய இரத்தத்தோடும் தோலும் சேர்த்து அமைந்ததும் ஆன குகை போன்ற அமைப்புள்ள இவ்வுடல் அழிந்து, இனியும் ஒரு தாயின் இரத்தம் நிறைந்த கருப்பையின் உள்ளே சென்று மீண்டும் பிறவாது, இந்நோயைத் தீர்த்து உமக்கு ஆளாக்கி கொள்ள அருள்வாய் (எ-று)

தீயூதை தாத்ரி சலவெளி யொளியை செழுமையாய் சேர்த்த
காயூறி கனியாகி காய்ந்து வித்தாகி முளைக்கவே செயும்
வேயூறுந் தோளருக்குபதேசித்த வள்ளிமணாளனே! யெனைப்பற்றிய
நோயூறி நுண்ணறிவு யடங்கா முனுன்னருளை ஈயெந்தையே! 89

தீ ஊதை தாத்ரி சலவெளி ஒளியை செழுமையாய் சேர்த்த
காய் ஊறி கனியாகி காய்ந்து வித்தாகி முளைக்கவே செயும்
வேய் ஊறுந் தோளருக்கு உபதேசித்த வள்ளி மணாளனே! எனைப் பற்றிய
நோய் ஊறி நுண் அறிவு அடங்கா முன் உன் அருளை ஈ எந்தையே!


(க-ரை) நெருப்பு, காற்று, மண், நீர், சூரிய ஒளி இவைகளை ஆதாரமாக கொண்டு மிக அருமையாக ஒன்றாகச் சேர்த்து, அதன் பயனாக காய்களில் ஊறி பழமாகி பின் காய்ந்து விழுந்து, விதையாகி முளைப்பதற்கு திருவருள் செய்கின்ற மூங்கிலைப் போன்று உறுதி கொண்ட வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்த (அடியார்களை தானே நாடிச் சென்று அருள்புரியும் தன்மை) சிவபெருமானுக்கு குருவாகி உபதேசித்து அருளிய வள்ளிக்கு மணவாளனே! வினைகளின் தாக்கத்தால் யான் நோய்களில் ஊறி, என் அறிவு மழுங்கி, அடங்கி போவதற்கு முன்னர், அடியேனுக்கு தந்தையாக வந்து உன் அருளை தருவாய் (எ-று)

ஈயெறும்பு முதலாக யெண்ணாயிரங்கோடியுயிர்களுக்கும்
தாயென பரிந்து காத்திடும் தயாநிதியே! வள்ளிமணாளனே! யெனை
தீயெனும் வறுமை தாக்காது தெய்வ வடிவுந் திருவருளுந் தந்து
சேயெனை காவாய்ச்செந்தூரா! சேரவே யருளாய் நின்கையொடே! 90


ஈ எறும்பு முதலாக எண் ஆயிரங் கோடி உயிர்களுக்கும்
தாய் என பரிந்து காத்திடும் தயாநிதியே! வள்ளி மணாளனே! எனை
தீ எனும் வறுமை தாக்காது தெய்வ வடிவுந் திரு அருளுந் தந்து
சேய் எனை காவாய்ச் செந்தூரா ! சேரவே அருளாய் நின் கையொடே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஈ முதல் எறும்பு வரையிலான எட்டு ஆயிரங் கோடி உயிர்களுக்கும் தாயாக இருந்து பாது காத்து அவைகளுக்கு அருள் புரியும் தயாநிதியே! திருச்செந்தூர் எனும் இரண்டாம் படை வீட்டில் அமர்ந்தவனே! அடியேனை தீ போன்ற வறுமை தாக்காது, தெய்வத் தன்மை வாய்ந்த வடிவையும், திருவருளையும் தந்து குழந்தையா கிய என்னை காத்து உந்தன் அருகினில் சேருவதற்கு அருள்வாய் (எ-று )

ராகம் : சிந்து பைரவி

கையொத்து வாழுமிந்த பொய்யொத்த வாழ்வை நம்பி
வையொத்து இணங்கி வாழ்மின்காள்! கடைத்தேற வள்ளிமணாளனை
பையொத்த இதயந்தனிலிருத்தி யுருகி யின்புருவீர்! அஃது
ஐயொத்து வாழா தன்னலினடியை சேர்க்குமே மெய்யாகவே! 91


கை ஒத்து வாழும் இந்த பொய் ஒத்த வாழ்வை நம்பி
வை ஒத்து இணங்கி வாழ் மின்காள் ! கடைத்து ஏற வள்ளிமணாளனை
பை ஒத்த இதயங் தனில் இருத்தி உருகி இன்புறுவீர்! அஃது
ஐ ஒத்து வாழாது அன்னவின் அடியை சேர்க்குமே மெய்யாகவே!


(க-ரை) செய்ய தக்கது எது? செய்ய தகாதது எது? என்று தெளிந்து வாழக் கூடிய வாழ்வை விடுத்து பொய் வாழ்வு எனும் இவ்வுலகத்து வாழ்க்கை யோடு சேர்ந்து வாழ்பவர்களே! நீங்கள் இதிலிருந்து மீளுவதற்கும், நல்ல பேற்றினை அடைவதற்கும், வள்ளி மணாளனை பைபோன்ற இதயத்தில் வைத்து உருகி ஆனந்தம் கொள்வீர்கள். ஆதனால் அது சந்தேகம் இல்லாத ஒரு வாழ்வைக் கொடுத்து அவன் திருவடியை கொண்டு சேர்க்கும் உண்மையாகவே. (எ-று )

மெய் சார்வற்றே மேதினியில் மெத்தவும் நொந்திளைத்துப்
பொய் சார்வுற்ற பொருளை போதாதென்று தேடியே முடிவில்
உய் சார்வுற்ற பெருமானாகிய வள்ளிமணாளனை தேடாது வீணே
துய்த்தாரன்றோதொடர்வினையால் கட்டுண்டுபகலொடு இரவுமே! 92


மெய் சார்வு அற்றே மேதினியில் மெத்தவும் நொந்து இளைத்துப்
பொய் சார்வு உற்ற பொருளை போதாது என்று தேடியே முடிவில்
உய் சார்வு உற்ற பொருமான் ஆகிய வள்ளி மண்ணாளனை தேடாது வீணே
துய்த்தார் அன்றோ தொடர் வினையால் கட்டுண்டு பகலும் இரவுமே!

(க-ரை) உண்மையான புகலிடம் ஒன்று இல்லாமல் இப்பூமியில் மிகவும் நொந்து இளைந்து, இரவும் பகலும் தொடர்ந்த வினைகளால் கட்டுப்பட்டு பொய்யான புகலிடமாக திகழ்கின்ற இவ்வுலகப் பொருட்களை போதாது என்று தேடி, முடிவாக நல்ல பேற்றினை அடைவதற்கு உரிய புகலிடமாக திகழ்கின்ற வள்ளி மணாளனைத் தேடிச் சென்று வணங்காமல் வீணாக இருந்து காலத்தை கழித்து விட்டீர்கள் அன்றோ ! (எ - று)

இரவொடும் பகலே சேர்த் தெழுதிய நாட்கள் முடிவுற
வரவிடும் தூதுவர் வந்தெய்தா முன் வள்ளிமணாளனே! யெந்தன்
சிரமது வணங்கிட! மனமது நினைத்திட! நாவும் பாடிட!
கரமது குவித்திட! காவாய் இனியும் நலிந்து நாரா காமலே. 93

இரவொடும் பகலே சேர்த்து எழுதிய நாட்கள் முடிவுற 
வர விடும் தூதுவர் வந்து எய்தா முன் வள்ளி மணாளனே! எந்தன் 
சிரம் அது வணங்கிட மனம் அது நினைத்திட/ நாவும் பாடிட! 
கரம் அது குவித்திட! காவாய் இனியும் நலிந்து நார் ஆகாமலே. 

(க-ரை) பிரமன் இரவும் பகலும் சேர்த்து இவ்வளவு நாட்கள் தான் நீ வாழ்வாய் என்று எழுதிய நாட்கள் முடிந்து போக, பின் யமதூதுவர் வந்து
சேர்வர் அவ்வாறு வருவதற்கு முன்னரே யான் நாரைப் போல் சிதைந்து போகாமல், வள்ளி மணாளனே! எந்தன் தலையானது உன்னை வணங்கிடவும், மனமானது உன்னை நினைந்திடவும், நாவானது உன்னைப் பாடிடவும், கைகள் உனைக் குவித்து வணங்கிடவும், அடியேனை காத்து அருள்வாய் (எ-று )

நாராலே! மனமெனும் பூவாலே! நாளும் தொழுது வள்ளிமணாளனை
நீராலே! நிட்டையுடன் தொண்டு செய்வாரோ டிணங்கியே
சாராதே போயின் சருவிய சாத்திர வேதங்கள் பயின்றாலும்
வாராதே வரைஞானமும், கல்வியும் மெய்பொருளும் அரிதாமே. 94


நாராலே! மனம் எனும் பூவாலே! நாளும் தொழுது வள்ளி மணாளனை
நீராலே! நிட்டை உடன் தொண்டு செய்வாரோடு இணங்கியே
சாராதே போயின் சருவிய சாத்திர வேதங்கள் பயின்றாலும்
வாராதே வரை ஞானமும், கல்வியும் மெய் பொருளும் அரிதாமே.

(க-ரை) வள்ளி மணாளனே! மனம் என்கின்ற நாரிலே பலவிதமான பூக்களைக் கொண்டு தினமும் அருச்சித்து, பின் நீர்க் கொண்டு நியமத் துடன் அபிஷேகித்து, தொண்டுகள் செய்யும் அடியவரோடு சேர்ந்து, அவர்களோடு ஒட்டிய தொண்டுகள் செய்யாமல் போனால், சாத்திரங் களும், நியமங்களும் வேதங்களும் எவ்வளவு பயிற்சி பெற்று இருந் தாலும் அதனால் எவ்வித ஞானமும் வராது மெய் பொருளாகிய இறைவனை அடைவதற்கும், அதற்குறிய கல்வி ஞானத்தையும் பெற முடியாதவைகளாகப் போய் விடும். (எ-று)

அரிமருகோனே! யயிலோனே அறுமுகனே! வள்ளிமணாளனே! எனத்
திரியிட்டு தீபமேற்றி சிந்தையில் தியானித்து மலர்களை
சொரியவே! யுன்றன் திருவடிக்கு நீயும் கருணையோடேற்பாய்!
பரிமேலழகிய பெருமாளே! பரிவோடு நீக்காயென் இருளையே. 95


அரிமருகோனே! அயிலோனே! அறுமுகனே! வள்ளி மணாளனே! எனத்
திரி இட்டு தீபம் ஏற்றி சிந்தையில் தியானித்து மலர்களை
சொரியவே ! உன்றன் திருவடிக்கு நீயும் கருணையோடு ஏற்பாய்
பரிமேல் அழகிய பெருமாளே! பரிவோடு நீக்காய் என் இருளையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மயிலாகிய குதிரைமேல் அழகாக வரு பவனே! திருமாலின் மருமகனே! தேவர்களின் தலைவனே! வேலாயுதத்தை உடையவனே! ஆறுமுகங்களை கொண்டவனே! என்று
திரியிட்டு, தீபம் ஏற்றி, சிந்தையில் தியானித்து உந்தன் திருவடிகளுக்கு மலர்களை தூவிடவே. நீயும் கருணையோடு ஏற்று பரிவாக அடியேன் வாழ்வில் சூழ்ந்துள்ள இருளை நீக்குவாய். (எ-று)

இரு நோய் மலத்தை சிவவொளியால் மிரட்டி வேறாக்கி
உருநோய் யாவும் உடலிற்றீண்டாது வள்ளி மணாளனே! இனியோர்
கருநோயணுகாது யுன்றன் கழற்கே யாளாக்கிட
திருவாவினன்குடி வளர் சேவகனே! திருவாய் உரையுமே! 96

இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி வேறு ஆக்கி
உரு நோய் யாவும் உடலில் தீண்டாது வள்ளி மணாளனே! இனி ஓர்
கருநோய் அணுகாது உன்றன் கழற்கே ஆள் ஆக்கிட
திரு ஆவினன் குடி வளர் சேவகனே! திருவாய் உரையுமே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திரு ஆவினன் குடியில் வளர்கின்ற சேவகனே! பிறப்பு இறப்பு ஆகிய இரண்டு நோய்களையும் ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மூன்று மலங்களையும், 'சிவதேஜஸ்'' என் கின்ற ஒளியால் மிரட்டித் துரத்தி, வேறு படுத்தியும், அதோடு உடல் நோய்கள் யாவும் சேராமலும் இனியோர் கருவினில் புகும் நோயும் விலகிடவும் சிறப்பாக ஒரு சொல்லை உபதேசித்து, என்னை உந்தன் திருவடிக்கே ஆளாக்கி கொள்வாய் (எ-று )

ராகம் : சுபந்து வராளி

உரையுஞ் சென்று நாவும் வறண்டுயிரும் பிரியுமுன்
கரையுஞ் சேர்ந்திடயருளாய் வள்ளிமணாளனே! பற்றிய மாய
திரையும் விலகிட பாராயே ரகத்திறைவா! யுன்றன்
விரைமலர்ப் பாதங்களை தாராய் வெகு அலங்காரமாகவே! 97


உரையுஞ் சென்று நாவும் வறண்டு உயிரும் பிரியும் முன்
கரையஞ் சேர்ந்திட அருளாய் வள்ளிமணாளனே! பற்றிய மாய
திரையும் விலகிட பாராய் ஏரகத்து இறைவா! உன்றன்
விரை மலர்ப் பாதங்களை தாராய் வெகு அலங்காரம் ஆகவே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருஏரகம் என்கிற சுவாமி மலைப் பதியில் இறைவனாக இருப்பவனே! யான் பேசக் கூடிய பேச்சும் நின்று, நாவும் வற்றி, உயிரும் பிரிவதற்கு முன்னர், எனை அடைந்துள்ள இந்த மாயை எனும் திரையை நீக்கி, பாராய் உந்தன் விழிகளால், முக்தியெனும் கரையினை சேருவதற்குத் தருவாய் உந்தன் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஈரம் மிகுந்த திருவடிகளை. (எ-று)

அலங்கார முடிகிரண கிருபாகரா! பலபுட்ப பரிமளவாசா!
துலங்கா நாவையுந் திருப்புகழ் தேனாற்றுலங்கவேச் செய்து
கலங்காயுள்ளமுங் கருணையோடருளி வள்ளிமணாளனே! சகல
தலங்காணும் பாக்யம் தருவாய் மூலாதாரமாகவே! 98


அலங்கார முடி கிரண கிருபாகரா! பலபுட்ப பரிமளவாசா!
துலங்கா நாவையுந் திருப்புகழ் தேனால் துலங்கவே செய்து
கலங்கா உள்ளமுங் கருணையோடு அருளி வள்ளிமணாளனே!
சகல தலங்காணும் பாக்யம் தருவாய் மூல ஆதாரம் ஆகவே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மிகவும் சொலிக்கக் கூடிய அலங்கார திருமுடியை உடைய கிருபாகரனே! பலவிதமான பூக்களையும், சுகந்த வாசங்களையும் அணிந்து, திருத்தலங்களில் வாழ்பவனே! சொற்கள் சிறப் பாக வராத எனது நாவையும், உனது திருப்பகழ் எனும் தேன் கொண்டு ஒலிக்கச் செய்து, அடியேனுக்கு எதற்கும் கலங்காத உள்ளமும், மூல ஆதாரப் பொருளாய் இருக்கக்கூடிய உனது சகலஸ்தலங்களையும் தரிசிக்கும் பாக்யமும் பெறுவதற்கு கருணையோடு அருள் புரிவாய் (எ-று)

மூலாதாரமொடு மும்மலங்களை முறியடித்து வள்ளிமணாளனை
தோலாதாரமொடு வேய்ந்த கூரையுள்ளிருத்தி யென்றும்
வேலாதாரமொடு வினைகளை போக்கி விருப்புடன் நாவெனும்
நூலாதாரமொடு புனைமாலை கூட்டும்! சித்திகள் நாலிரண்டையுமே! 99


மூல ஆதாரமொடு மும் மலங்களை முறி அடித்து வள்ளி மணாளனை
தோல் ஆதாரமொடு வேய்ந்த கூரை உள் இருத்தி என்றும்
வேல் ஆதாரமொடு வினைகளை போக்கி விருப்புடன் நாவு எனும்
நூல் ஆதாரமொடு புனைமாலை கூட்டும்! சித்திகள் நால் இரண்டையமே!


(க-ரை) எல்லாவற்றிர்க்கும் ஆதியாயும், ஆதாரமாகவும் இருக்கக்கூடிய சிவ பெருமானின் திருவருளால், ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் விலக்கி, தோலை ஆதாரமாக கொண்டு கூரையாக வேய்ந்த இவ்வுடல் எனும் வீட்டினுள்ளே வள்ளி மணாளனை இருத்தி, என்றும் அவனது வேலாயுதத்தை ஆதாரமாகக் துணைக்கொண்டு, தொடரும் வினைகளைப் போக்கி, விருப்பமுடன், நாவு எனும் நூலின் ஆதாரமொடு தொடுக்ககூடிய பாமாலைகள், கொண்டு சேர்க்குமே எட்டு சித்திகளையும் அடைவதற்கு (எ-று)

நாலிரண்டு திசையிலும் நவிலுகின்றபதிகளனைத்திலுந் தண்டை
காலிரண்டையும் பதித்த வள்ளிமணாளனே! வினையேனைகாத்திட
வேலினோடு குறவஞ்சியுந் தெய்வகுஞ்சரியுஞ் சூழ வாருமே!
பீலினோடாடும் பரிமேலழகா! ஈடேற்றுவாய் எலுப்புருவையே. 100


நால் இரண்டு திசையிலும் நவிலுகின்ற பதிகள் அனைத்திலுந் தண்டை
கால் இரண்டையும் பதித்த வள்ளி மணாளனே! வினையேனை காத்திட
வேலினோடு குற வஞ்சியுந் தெய்வ குஞ்சரியுஞ் சூழ வாருமே!
பீலினோடு ஆடும் பரிமேல் அழகா! ஈடேற்றுவாய் எலுப்பு உருவையே.


(க-ரை) எட்டு திசைகளிலும் சொல்லக்கூடிய ஸ்தலங்கள் அனைத்திலும் திருவடிகள் இரண்டையும் பதித்து வாழும் வள்ளி மணவாளனே! அழ கான தோகைகளோடு ஆடக்கூடிய மயில் மேல் அமர்ந்த அழகனே! குறப் பெண்ணாகிய வள்ளியுடனும், தெய்வப்பெண்ணாகிய தேவசேனையு டனும், வேலாயுதமுடனும், சூழ வந்து, வினைகளால் சூழ்ந்த எலும்பு களால் ஆன உடலை பெற்ற அடியேனை காத்து ஈடேற்றுவாய் (எ-று) 

எலுப்பு நாடிகளொடு இழைத்த தசையுதிரம் கூடிய குடில்
வலுத்து நாளடைவில் முதிர்ந்து தளர்ந்து இறந்து பிறந்து
அலுத்தே போனது வள்ளிமணாளனே! இனியாகிலும் சத்தி வேலைச்
செலுத்தி யிவ்வுயிரை யேற்பாய் சேராது ஒர் தோலெலும்பிலே. 101


எலுப்பு நாடிகளொடு இழைத்த தசை உதிரம் கூடிய குடில்
வலுத்து நாள் அடைவில் முதிர்ந்து தளர்ந்து இறந்து பிறந்து
அலுத்தே போனதே வள்ளி மணாளனே! இனி ஆகிலும் சத்தி வேலைச்
செலுத்தி இவ்உயிரை ஏற்பாய் சேராது ஓர் தோல் எலும்பிலே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! எலும்புகளும், நரம்புகளும், இரத் தத்தோடு தசைகளும் சேர்ந்துள்ள இந்த உடலாகிய வீடு வலுவடைந்து, நாளடைவில் முற்றி, தளர்ச்சி அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, இப்படி அலுத்தும், சலிப்பு அடைந்து விட்டது, இனியாகிலும் இவ்வுயிர் வேறு ஒரு தோலொடு கூடிய உடம்பில் சென்று சேராமல், உமது சக்தி வேலாயுதத்தை செலுத்தி, இவ்வுயிரை ஏற்றுக் கொள்வாய். (எ-று )

தோலெலும்பொடு தொடங்கிய வாழ்க்கை யுலகிற்றுவளாது
பாலெனதூய்மையும் பளிங்கென பிரகாசமுங்கொள வள்ளிமணாளனே!
சேலென கண்ணாள்! குறமங்கையை சேர்ந்து கலாப் புரவியில்
வேலென கண்ணாள்! வாரண மங்கையுடனாடி வாருமே! யலையலையாகவே! 102


தோல் எலும்பொடு தொடங்கிய வாழ்க்கை உலகில் துவளாது
பால் என தூய்மையும் பளிங்கு என பிரகாசமும் கொள் வள்ளி மணாளனே!
சேல் என கண்ணாள்! குற மங்கையை சேர்ந்து கலாப புரவியில்
வேல் என கண்ணாள் ! வாரணமங்கை உடன் ஆடி வாருமே! அலை அலையாகவே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தோலாலும், எலும்பாலும், ஆனஉட லொடு தொடங்கிய இந்த வாழ்க்கை உலகினில் வாடிப் போகாமல் பாலைப் போன்று தூய்மையும், பளிங்கை போன்று பிரகாசமும் கொள் வதற்கு, மீனைப் போன்ற கண்களையுடைய குறப் பெண்ணாகிய வள்ளியை அணைந்தும், வேலைப் போன்ற கண்களையுடைய தேவசேனை என்ற தேவர்கள் பெண்ணோடும், வண்ண மயில் மீது அமர்ந்து, அலை அலையாக ஆடி வருவாய்! (எ-று )

ராகம் : மனோலயம்

அலைகடல் நிகராகிய யவுணர் சேனையை யழித்த வள்ளிமணாளனே!
இலையொடு பூவுங் காயுங் கனியும் மாறிடவேயருளும்
வலைகொடு வீசிய வீதிவிடங்கருக்குபதேசித்த விசாகா!
தொலையவே துன்பங்கள் துரிதமாயருள வாரும் வேலொடுமே! 103


அலைகடல் நிகர் ஆகிய அவுணர்கள் சேனையை அழித்த வள்ளிமணாளனே!
இலையொடு பூவுங் காயுங் கனியும் மாறிடவே அருளும்
வலை கொடு வீசிய வீதி விடங்கருக்கு உபதேசித்த விசாகா!
தொலையவே துன்பங்கள் துரிதமாய் அருள் வாரும் வேலொடுமே!


(க-ரை) கடலுக்கு நிகராக பெருக்கெடுத்து வரக்கூடிய அசுரர் சேனைகளை அழித்த வள்ளி மணவாளனே! இவ்வுலகில் தாவரங்கள் இலையோடும், பூவோடும், காயோடும், கனியோடும் காலம் தவறாது மாறி மாறி விளைவதற்கு அருளக் கூடிய, உமையம்மையை மணம் புரிவதற்காக கடலில் வலைக் கொண்டு வீசி திருவிளையாடல் புரிந்த வீதி விடங்கர் என திருநாமம் பெற்ற சிவபெருமானுக்கு உபதேசித்த விசாகனே! அடியேன் துன்பங்கள் விரைவாக தொலைந்து போவதற்கு வேலாயுதத்தை கொண்டு வாருமே (எ-று )

வேலொத்து சூரனை வென்ற வள்ளிமணாளனே! யுனதிரு
காலொத்து யென்றும் நீங்காது வாழும் வாழ்வைத் தருவாய்
நூலொத்த நுண்ணிடையாள் பெற்ற நேயா! பருகவே யருளாய்
ஆலொத்த திருப்புகழெனுந் தேனிற் கலந்த பாலோடுமே! 104


வேல் ஒத்து சூரனை வென்ற வள்ளி மணாளனே!
உனது இரு கால் ஒத்து என்றும் நீங்காது வாழும் வாழ்வைத் தருவாய்
நூல் ஒத்த நுண் இடையாள் பெற்ற நேயா! பருகவே அருளாய்
ஆல் ஒத்த திருப்புகழ் எனுந் தேனிற் கலந்த பாலோடுமே!


(க-ரை) வேலாயுதத்தைத் தாங்கி சூரனை வெற்றிக் கொண்ட வள்ளி மணவாளனே! நூலுக்கு இணையான மெலிந்த இடையையுடைய வளாகிய பார்வதியாளுக்குப் பிரியமானவனே! கருப்பஞ்சாருக்கு இணையான உமது திருப்புகழ் எனும் தேனை பாலோடு கலந்து பருகவும் உனது இரு காலினை அடுத்து என்றும் நீங்காதிருக்கும் வாழ்வையும் சேர்த்து அருள்வாய் (எ-று)

பாலோ! தேனோ! பழச்சுவையோ! கரும்பின் பாகோவென
மேலோரும் வாய் குழறி துதித்து நிற்கும் வள்ளி மணாளனே!
ஏலோ! ஏலேலோ! வெனயாயலோட்டிய மானையாட்கொண்ட
மாலோன் மருகா! தருகவே கடப்ப மாலையோடு முல்லையுமே! 105


பாலோ! தேனோ! பழச் சுவையோ! கரும்பின் பாகோ! என
மேலோரும் வாய் குழறி துதித்து நிற்கும் வள்ளி மணாளனே!
ஏலோ! ஏலேலோ! என ஆயல் ஓட்டிய மானை ஆட் கொண்ட
மாலோன் மருகா! தருகவே கடப்ப மாலையோடு முல்லையுமே!


(க-ரை) இது என்ன பாலோ தோனோ , பழச்சுவையோ! கரும்பின் பாகோ! என்று தேவர்கள் எல்லோரும் வாய்குழறி அதிசயித்துத் துதித்து நிற்கும்படியான வள்ளி மணவாளனே! திருமாலுக்கு மருமகனே! ''ஏலோ ஏல்ஏலோ'' என்று ஆயல் ஓட்டிய வள்ளி என்கிற பெண் மானை ஆட்கொண்டவனே! உமது கடப்பமலர் மாலையும், முல்லை மலர் மாலையும் அடியேனுக்கு தருவாய் (எ-று)

முல்லைக்கு நிகரான முத்துமணியாரமணிந்த வள்ளிமணாளனை
எல்லையிலா பேரன்பாலிராப்பகலுஞ் சிந்தையிலிருத்திட
தொல்லைகளென் செயுந் தொடரும் துரிசுகளென் செயும்! யெந்நாளும்
இல்லையே யிடுக்கண், சேராது வெகுளியுங் கோபவஞ்சமுமே. 106


முல்லைக்கு நிகர் ஆன முத்துமணி ஆரம் அணிந்த வள்ளிமணாளனை
எல்லை இலா பேரன்பால் இராப் பகலுஞ் சிந்தையில் இருத்திட
தொல்லைகள் என் செயும் தொடரும் துரிசுகள் என் செயும் ! எந்நாளும்
இல்லையே இடுக்கண் , சேராது வெகுளியுங் கோபமும் வஞ்சமுமே.


(க-ரை) முல்லை மலருக்கு இணையான முத்துக்களை கோர்த்த மாலையை அணிந்தவனாகிய வள்ளி மணவாளனை அளவிட முடியாத பேரன்பால் இரவும், பகலும், உள்ளத்தில் இருத்தி தொழுதிட, வரும் தொல்லைகள் என் செயும்? தொடரும் துயரங்கள் என் செயும்? எந்த நாளும் துன்பம் இல்லையே! வஞ்சம், கோபம், வெகுளி போன்றவைகள் அணுகாது (எ-று)

வஞ்சங் கொண்டுறவாடு வோரை யிணங்காது வள்ளிமணாளனை
கொஞ்சு தமிழால் பாடி பரவிட நினைவாய் மனமே!
வெஞ்சினமும் மதமும் விலகிடவே யவனிரு தாளில்
தஞ்சமடைய பெறுவாய்! மேலானதோர் வானோருலகையே! 107


வஞ்சங் கொண்டு உறவாடுவோரை இணங்காது வள்ளிமணாளனை
கொஞ்சு தமிழால் பாடி பரவிட நினைவாய் மனமே!
வெஞ் சினமும் மதமும் விலகிடவே அவன் இரு தாளில்
தஞ்சம் அடைந்தால் பெறுவாய்! மேலானது ஓர் வானோர் உலகையே!


(க-ரை) மனமே! வஞ்சனை கொண்டு உறவு கொள்வார்களைச் சேராது வள்ளி மணவாளனை, கொஞ்சும் தமிழ் மொழியால் பாடித் தொழுதிட நினைவாய் கோபமும், ஆங்காரமும் விலக்கி அவனது இரு பாதங்களில் தஞ்சம் புகுந்தால், நீ பெறுவாய் மேலானதாகிய ஒரு வானவர் உலகத்தையே (எ-று )

வானோர் வழுத்துனது பாதமலர்களை சூட்டுவாய் வள்ளிமணாளனே!
ஏனோர் வழியுங் காணாது யலைகிறேனே யெமக்கியம்பாய்
நானோர் யேதுமறியா மூடன் யென்னையுங் கருணையோடேற்பாய்
மானோர் கையிலேந்தியவன் மைந்தா! மாற்றும் என் விதியையே. 108


வான் ஓர் வழுத்து உனது பாத மலர்களை சூட்டுவாய் வள்ளி மணாளனே!
ஏன் ஓர் வழியுங் காணாது அலைகிறேனே எமக்கு இயம்பாய்
நான் ஓர் ஏதும் அறியா மூடன் என்னையுங் கருணையோடு ஏற்பாய்
மான் ஓர் கையில் ஏந்தியவன் மைந்தா! மாற்றும் என் விதியையே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தேவர்கள் எல்லோரும் துதிக்கக்கூடிய உனது திருவடிகளை அடியேனுக்க சூட்டுவாய்! எந்த வழியும் காணாமல் அலைகிறேனே! அது எதனால் என்பதை எனக்கு கூறுவாய்! நான் ஒரு ஏதும் அறியாத மூடன்! என்னையுங் கருணையுடன் ஏற்றுக் கொள்வாய், மானை கையில் ஏந்தியவனாகிய சிவபெருமானின் புதல்வனே! என்னுடைய விதியை மாற்றி அருள் புரியும் (எ-று)

ராகம் : தோடி

விதிபோலு பிறவித்துயரென யோய்ந்து வீழாதுவள்ளிமணாளனே!
கதியென்றிருப்போர்க்கு வேலும் மயிலும் துணையாகும்! அஃது
சதிகாரரை சடுதியில் சாடுமே! வீடுமே வெவ்வினைகள் யாவையும்!
பதியுமே ஞானத்தை! புரியுமே போற்றிடும் பற்பல வீரங்களையே! 109


விதி போலும் பிறவித் துயர் என ஓய்ந்து வீழாது வள்ளிமணாளனே!
கதி என்று இருப்போர்க்கு வேலும் மயிலும் துணையாகும்! அஃது
சதிகாரரை சடுதியில் சாடுமே! வீடுமே வெவ்வினைகள் யாவையும்!
பதியமே ஞானத்தை ! புரியமே போற்றிடும் பற்பல வீரங்களையே!

.
(க-ரை) இப்பிறவித் துயரம் விதியினால் ஏற்பட்டது என்று ஓய்ந்து போகாமல், வள்ளிமணாளனையே கதி என்று இருப்பவர்க்கு , அங்கு வேலும், மயிலும் துணையாக நிற்கும். அது சதிகாரரையும், பகைவரையும் விரைவாக அழித்து விடும் தொடர்ந்த வினைகள் எல்லாவற்றையும் வேறாக்கி விடும், ஞானத்தை புத்தியில் பதிய செய்யும். போற்றி புகழக் கூடிய பலவிதமான வீரச் செயல்களை செய்திடும் (எ-று )

வீரமதனூலை விரும்பி ஓதியுணர்வழியாது வள்ளிமணாளனின்
ஈரமிகு பாதங்களையெந்நேரமுமெண்ணி பரவிய அருணகிரியின்
ஆரமிகு சந்தங்களை கொண்ட யரிய திருப்புகழ் பாக்களை
வாரமினிதவறாது ஓதுவீர்! வெல்வீர்! மாரனின் வெஞ்சிலையையே! 110


வீர மதன் நூலை விரும்பி ஓதி உணர்வு அழியாது வள்ளிமணாளனின்
ஈரம் மிகு பாதங்களை எந் நேரமும் எண்ணி பரவிய அருணகிரியின்
ஆரம் மிகு சந்தங்களை கொண்ட அரிய திருப்புகழ் பாக்களை
வாரம் இனி தவருது ஓதுவீர்! வெல்வீர்! மாரனின்வெஞ்சிலையையே.

(க-ரை) காமக் கலைகளில் வல்லவனான மன்மதனுடைய நூலை ஓதி அதனால் உணர்வுகள் அழிந்து போகாமல் வள்ளி மணாளனது ஈரங் கொண்ட திருப்பாதங்களை எந்த நேரமும் நினைத்துத் துதித்துப் பாடிய அருணகிரி நாதரின் பலவிதமான சந்த மாலைகளை கொண்ட அரிய திருப்புகழ் பாடல்களை, இனி தவறாமல் பாடுவீர்! அதனால் வெல்வீர் மன்மதனின் காம பாணங்களை (எ-று ) 

வெஞ்சரோருகமதில் வெண்மதியாய் விளையாடிய வள்ளிமணாளனே!
தஞ்சமோ யெனக்குன்னிரு பாதமோயறியேனே! கருணையுடன்
கொஞ்சமோ நினதருட் பார்வையை! பார்க்கினும் வருமோயிடர்
அஞ்சுமோ! யிவ்வுயிருமுடலும் கூறாய் வேடற்றெய்வமே! 111


வெஞ்சரோருகம் அதில் வெண்மதியாய் தவழ்ந்து விளையாடிய வள்ளி மணாளனே!
தஞ்சமோ எனக்கு உன் இரு பாதமோ அறியேனே! கருணையுடன்
கொஞ்சமோ நினது அருட் பார்வையை பார்கினும் வருமோ! இடர்
அஞ்சுமோ! இவ் உயிரும் உடலும் கூறாய் வேடர் தெய்வமே!

(க-ரை) விரும்பதக்க தாமரை மலர்களில் வெண்மையாக ஒளியை வீசும் சந்திரனைப் போன்று குழந்தையாய் தவழ்ந்து விளையாடிய வள்ளி மணவாளனே! அடியேன் உனது இரு பாதங்களில் தஞ்சம் அடை வேனோ? அறிந்திலனே! கருணையுடன் கொஞ்சமாகிலும் உனது அருள் பார்வையை பார்த்தால் எனக்குத் துயர் வருமோ? - வேடர்களின் தெய்வமே! இவ்வுயிரும் உடலும் அச்சங்கொள்ளுமோ! கூறாய் (எ-று)

வேடர் செழுந்தினைக்காத்த வேடிச்சியை மணந்த வள்ளிமணாளனே!
தேடற்கரிதாகிய நின்றிருவடி தரிசனம் பெற்றுய்ந்திடவும்
பாடற்கரிதாகிய நின்திருப்புகழைப் பாடி பரவசமெய்திடவும்
கூடற்பெருமான் குழை செவியிலுபதேசித்தவா! யருளுமிக்குழவிக்குமே! 112

வேடர் செழுந்தினைக் காத்த வேடிச்சியை மணந்த வள்ளிமணாளனே!
தேடர்க்கு அரிது ஆகிய நின் திருவடி தரிசனம் பெற்று உய்ந்திடவும்
பாடர்க்கு அரிது ஆகிய நின் திருப்புகழைப் பாடி பரவசம் எய்திடவும்
கூடற்பெருமான் குழைசெவியில் உபதேசித்தவா! அருளும் இக்குழவிக்குமே!


(க-ரை) செழுமையாக வளர்ந்துள்ள வேடர்களின் தினைபுனமதை காத்த வேடிச்சியாகிய வள்ளியை மணம் புரிந்த வள்ளி மணவாளனே!
நான் மாடக் கூடல் என்று புகழ்பெற்ற மதுரையம்பதியில் அருள் பாலிக்கும் சிவபெருமானின் குழை எனும் ஆபரணம் அணிந்த செவியில் பிரணவ பொருள் உபதேசித்தவனே! தேடுவதற்கு அரிதாகிய உனது திருவடி தரிசனம் பெற்று நல்ல பேற்றினை அடைந்திடவும், பாடுவதற்கு அரிதா கிய உன் திருப்புகழைப்பாடி பரவசங் கொள்ளவும் குழந்தையாகிய அடியேனுக்கு திருவருளைப் புரியும் (எ-று )

குழவியுந் தாயுமன்பாற் குறிபறிந்து குழைவாற் போற்
அழலுருவாகிய யண்ணலின் மைந்தா! வள்ளிமணாளனே! யெந்தன்
பழவினைகளை பார்தறுப்பாய் பழமுதிர் சோலையில் குமரா! யுந்தன்
கழலிணைகளை யெமக்குத் தாராய்! தொடரும் பழியோடிடவே! 113


குழவியந் தாயம் அன்பால் குறிப்பு அறிந்து குழைவாற் போல்
அழல் உருவாகிய அண்ணலின் மைந்தா! வள்ளிமணாளனே! எந்தன்
பழ வினைகளை பார்த்து அறுப்பாய் பழமுதிர்சோலையில் குமரா உந்தன்
கழல் இணைகளை எமக்குத் தாராய்! தொடரும் பழி ஓடிடவே!

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருவண்ணாமலையில் சோதி சொரூபமாக நின்ற சிவ பெருமானின் புதல்வனே! பழமுதிர் சோலை எனும் பதியில் வாழும் குமரனே! தாயும் குழந்தையும் அன்பால் ஒருவரை ஒருவர் குறிப்பு அறிந்து குழைந்து கொஞ்சுவது போல் அடியேனை தொடரும் பழய வினைகளும் பழிகளும் அறுந்து ஓடி போக நீ குறிப்பு அறிந்து உந்தன் இரு திருவடிகளைக் கருணையுடன் தருவாய் (எ-று)

பழிப்பவர் வாழ்த்துவரெனபலவாறாக யிவ்வுலகினிற் வள்ளிமணாளனே!
அழியும் யிவ்வுடற் கொண்டு யலைகின்றனரே! முத்திபேறடைய
வழியுங் காணாது வாழ்நாளைப் போக்கி பிறப்புக்கேதுவாகிய
இழிதொழிலே புரிந்திருவேளையும் புலம்பி அழுதழுகின்றனரே. 114


பழிப்பவர் வாழ்த்துவர் என பலவாறாக இவ் உலகினில் வள்ளிமணாளனே!
அழியும் இவ் உடல் கொண்டு அலைகின்றனரே! முக்திபேறு அடைய
வழியுங் காணாது வாழ் நாளைப் போக்கி பிறப்புக்கு ஏது ஆகிய
இழி தொழிலே புரிந்து இருவேளையும் புலம்பி அழுது அழுகின்றனரே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பழிப்பவர்களும் வாழ்த்துபவர்களும் என்று பலவாராய் இவ்வுலகினில் அழியும் இவ்வுடல் கொண்டு அலை கின்றனரே! பிறப்புக்கு காரணமான இழிவான செயல்களை செய்து முக்தி பேற்றை அடைவதற்குறிய வழியைத் தேடாமல் வாழ் நாளை வீணாகக் கழித்து இரண்டு வேளையும் (இரவும், பகலும்) புலம்பி அழுகின்றார்களே! (எ-று)

ராகம் : தேஷ்

அழுது முன்னடியினையன்பால் சிந்தித்துருகி கைகூப்பி
தொழுதுந் தூய செய்கையால் தொண்டு புரிந்து வள்ளிமணாளனே!
பழுது சிறிதேனுமிலாது னையே பாவித்திருப்போரை
முழுது மாட்கொண்டு கருணையை பொழிய வாரும் விழைந்து! 115


அழுதும் உன் அடியினை அன்பால் சிந்தித்து உருகி கைகூப்பி
தொழுதுந் தூய செய் கையால் தொண்டு புரிந்து வள்ளிமணாளனே!
பழுது சிறிதேனும் இலாது உனையே பாவித்து இருப்போரை
முழுதும் ஆட் கொண்டு கருணையை பொழிய வாரும் விழைந்து!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! உனது திருவடிகளை அழுதும் உருகி சிந்தித்தும் கை கூப்பித் தொழுதும், தூய செயல்களால் தொண்டுகள் பல புரிந்தும் குற்றம் என்பது சிறிதும் இல்லாது உனையே நினைந்து இருப்பவர்களை முழுவதுமாய் ஆட்கொண்டு உனது கருணையை வாரி வழங்கிட விரைவாக வாருமே! (எ-று)

விழையு மனிதரையு முநிக்கணங்களையு நாடியே தேடிச் சென்று
இழையுந் தண்டையுஞ் சிலம்புமணிந்த விரைமலர் பாதமருளும்
குழையணிந்தவன் குமரா! வள்ளிமணாளனே! குறைதீர்தடியேன்
பிழை பொறுத்தருளாய்! நின்சீதள பாத களபமதையே! 116

விழையும் மனிதரையும் முறிக் கணங்களையும் நாடியே தேடிச் சென்று
இழையுந் தண்டையுஞ் சிலம்பும் அணிந்த விரை மலர் பாதம் அருளும்
குழை அணிந்தவன் குமரா! வள்ளிமணாளனே! குறை தீர்த்து அடியேன்
பிழை பொறுத்து அருளாய்! நின் சீதள பாத களபம் அதையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! செவியில் குழை எனும் ஆபரணம் அணிந்துள்ள சிவபெருமானுடைய புதல்வனே! உன் மீது அன்பு கொண்ட
மனிதரையும், முனிவர்களையும், சிவகணங்களையும் தேடிச் சென்று, அவர்களுக்கு ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து ஒலிக்கும் தண்டையும், சிலம்பும் அணிந்த உனது ஈரமுள்ள திருப்பாதங்களை அருளுவது போல, அடியேன் பிழைகளை பொறுத்து என் குறைகளை தீர்த்து, உனது குளிர்ச்சி மிகுந்த திருப்பாதங்களில் அணிந்துள்ள மணம் மிகுந்த சந்தனமதை தருவாய் (எ-று)

களப் மொழுகிய திருமேனியினழகோடு திருவெண்ணீறணிந்த
இளங்குமரா! வள்ளிமணாளனே! அமரோரை காத்திட குமிழ்நகையோ
டளவிலாயாற்றலுடன் வேலை கையில் தாங்கி யசுரன்
தளமுமுறிய கடாவியதைவியத்ததோ! நின்கடம்பின் அளியுமே! 117


களபம் ஒழுகிய திருமேனியின் அழகோடு திருவெண்ணீறு அணிந்த
இளங்குமரா ! வள்ளிமணாளனே! அமரோரை காத்திட குமிழ் நகையோடு
அளவிலா ஆற்றல் உடன் வேலை கையில் தாங்கி அசுரன்
தளமும் முறிய கடாவியதை வியத்ததோ ! நின் கடம்பின் அளியுமே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மணம் மிகுந்த சந்தனம் ஒழுகும் திருமேனியின் அழகோடு திருவெண்ணீறும் சேர்த்து அணியும் இளங்குமரனே! தேவர்களைக் காத்திட புண்சிரிப்போடு , வேலாயுத்தை கையில் தாங்கி, அளவிட முடியாத பேராற்றலுடன் அசுரர்களுடைய ஆயுதம் எல்லாம் அழித்ததை உனது கடப்பமலர் மாலையிலுள்ள வண்டும் வியந்து பார்க்கிறதோ! (எ-று )

அளியு சுழலுமொரானந்த வேளையில் வள்ளி தெய்வயானையுடன்
ஒளிரும் சுடர் வேலினொடொயிலாய் மயிலேறி வாரும்! கற்பக
களிரும் காக்க யுனையே தொழுதழுதேன் வள்ளிமணாளனே!
துளிரு தீவினைகள் றொடராது துணையே புரியும் நாளுமே. 118


அளியும் சுழலும் ஒரு ஆனந்த வேளையில் வள்ளி தெய்வயானையுடன்
ஒளிரும் சுடர் வேலினொடு ஒயிலாய் மயிலேறி வாரும்! கற்பக
களிரும் காக்க உனையே தொழுது அழுதேன் வள்ளிமணாளனே!
துளிரும் தீவினைகள் தொடராது துணையே புரியும் நாளுமே.

(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கற்பக விநாயக பெருமான் காத்திட் உனையே தொழுது அழுகின்றேனே! துளிர்விட்டு பெருகக் கூடிய
தீவினைகள் தொடாராது அடியேனுக்கு தினமும் துணையாக இருக்க வண்டுகள் சுழன்று பாடக் கூடிய ஒரு ஆனந்த மயமான வேளையில், வள்ளி தெய்வயானையுடன், ஒளி வீசக் கூடிய வேலோடு அழகாக மயில் மீது ஏறி வரவேண்டும் என்தன் அருகே. (எ-று)

நாளும் நற்றாமமெடுத்து நற்றாள் தொழுது வள்ளிமணாளனே!
மாளும் யிவ்வுடற் கொண்டு மாறாது தொண்டே புரிந்து
மீளும் படியோர் போதகச்சொற் பகர வருவாய்! தவிராய்
மூளும் வினையால் மூண்ட மோதும் சூலையும் ஈளையுமே. 119


நாளும் நல் தாமம் எடுத்து நல் தாள் தொழுது வள்ளிமணாளனே!
மாளும் இவ் உடல் கொண்டு மாறாது தொண்டே புரிந்து
மீளும் படி ஓர் போதகச் சொல் பகர வருவாய்! தவிராய்
மூளும் வினையால் மூண்ட மோதும் சூலையும் ஈளையுமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தினமும் நல்ல உனது திருப்பாதங்களை தொழுது நல்ல மலர்களை எடுத்து, மாண்டு போகக் கூடிய இவ்வுடலாற் உமக்குத் தவறாமல் தொண்டுகள் செய்திடவும், வினையால் மோதிக் கொண்டு வரும் சூலை நோய் எனும் வயிற்று வலியும், ஈளை சம்பந்தமான நோய்களும் எனை அணுகாமல் நீக்கி இப்பிறவிலிருந்து விடுதலை பெறும்படியான ஒரு உபதேச சொல்லை கூற வருவாய். (எ-று)

ஈளை முதலாய பிணிகள் யிணைந்த யுடலைப் பேணி
நாளை நடப்பதறியாது வள்ளிமணாளனின் நல்லயிரு
தாளை வணங்காது போவாயோ? மனமே! நீயும் யெந்த
வேளையும் வேலை வணங்கிருப்பாய்! கள்ள மகற்றியே. 120


ஈளை முதலாய பிணிகள் இணைந்த உடலை பேணி
நாளை நடப்பது அறியாது வள்ளிமணாளனின் நல்ல இரு
தாளை வணங்காது போவாயோ? மனமே! நீயும் எந்த
வேளையும் வேலை வணங்கி இருப்பாய்! கள்ளம் அகற்றியே.


(க-ரை) மனமே! ஈளை முதலான நோய்ப் பிணிகள் சேர்ந்த இந்த உடலை பாதுகாத்து நாளை என்ன நடக்கும் என்பதை அறியாத நீ, வள்ளிமணாள னின் நல்ல நன்மை தரக்கூடிய இருபாதங்களை வணங்காமல் போவாயோ? நீயும் எந்த நேரமும் முருகன் வேலாயுதத்தை நினைந்து வணங்கி இருப்பாய் பொய்கள் இல்லாமலே அதனால் நல்ல பேறு அடைவாய் (எ-று )

ராகம் : பைரவி

கள்ளகுவாற்பையாகிய மனதை ஒருநிலைப்படுத்தி வள்ளிமணாளனே!
தெள்ள தெளிவுற யுனையே புகுத்தி தொழுதழுது
அள்ள குறையா யன்பாலாங்கே யானந்தங் காணயாட்
கொள்ளவே வாருமைய்யா! தவிராய் யினியோர் பிறப்பையே! 121


கள்ள குவாற்பை ஆாகிய மனதை ஒருநிலை படுத்தி வள்ளிமணாளனே!
தெள்ள தெளிவு உற உனையே புகுத்தி தொழுது அழுது
அள்ள குறையா அன்பால் ஆங்கே ஆனந்தங் காண ஆட்
கொள்ளவே வாரும் ஐயா! தவிராய் இனி ஓர் பிறப்பையே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கள்ளத்தனம் (சூது, வாது, பொய், போன்றவைகள்) மிகுந்த ஒரு பையைப் போன்ற இந்த மனதை ஒரே நிலையாக பக்குவப் படுத்தி, தெளிவு பெற்று, அதில் உன்னை இருத்தி அழுது தொழுது, அங்கே அள்ளக் குறையாத அன்பால் பேரானந்தங் கொண்டு உனைக் காணவும், இப் பிறவியை நீக்கவும், அடியேனை ஆட் கொள்ளவும் வருவாய் ஐயனே! (எ-று )

பிறவியலையாற்றிற் புகுதாதபடி பேற்றினை பெற வள்ளிமணாளனே!
அறமு மகத்தின் தூய்மையு மடியாரொடு கூடுஞ் செயலுந்
திறமுந் திருவடியினழகை பாடும் பணியு மென்றும்
மறவா மதிநிலையும் பெற்றிடயருளாய்! ஞானமும் அறிவுமே! 122


பிறவி அலை ஆற்றில் புகுதாத படி பேற்றினை பெற்றிட வள்ளிமணாளனே!
அறமும் அகத்தின் தூய்மையும் அடியாரொடு கூடுஞ் செயலுந்
திறமுந் திருவடியின் அழகை பாடும் பணியும் என்றும்
மறவா மதிநிலையும் பெற்றிட அருளாய்! ஞானமும் அறிவுமே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கடல் (அ) ஆற்றில் வரும் அலைகள் மீண்டும் மீண்டும் வருவது போல இப்பிறவி எனும் அலை மீண்டும் மீண்டும் வந்து சேராதபடி, நல்ல பேற்றினை அடைவதற்கு, நல்ல தரும் சிந்தனையும், உள்ளத்தின் தூய்மையும் அடியாரொடு சேர்ந்து இருக்கும் செயலும், தொண்டுகள் புரியும் திறமையும், உமது திருவடியின் அழகை பாடும் தொழிலும் என்றும் மறவாத புத்தி கூர்மையும் இவையெலாம் பெறுவதற்கு உரிய ஞானமும், அறிவும் தருவாய் (எ-று)

அறிவழிந்து ஆணவ மலத்தோடு திரிந்துழன்று வள்ளிமணாளனே!
நெறியழிந்து நிதானமிழந்து வகையழிந்தைம்
பொறியழிந்து போகாதுனையே போற்றித் துதித்திட யென்
குறியறிந்து நீயும் வரமே யருளாய் ஆறுமுகவோனே! 123


அறிவு அழிந்து ஆணவ மலத்தோடு திரிந்து உழன்று வள்ளிமணாளனே!
நெறி அழிந்து நிதானம் இழந்து வகை அழிந்து ஐம்
பொறி அழிந்து போகாது உனையே போற்றித் துதித்திட என்
குறி அறிந்து நீயும் வரமே அருளாய் ஆறுமுகவோனே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஆணவ மலத்தோடு அறிவு அழிந்து, தரும் நெறிகள் எல்லாம் அழிந்து, திரிந்து அலைந்து, நிதானம் இழந்து, வாழும் வகையும் அழிந்து, ஐந்து பொறிகளும் தன் செயல்பாடுகளில் இருந்து அழிந்து போகாமல் உனைப் போற்றி துதித்து வளமான வாழ்வை அடைவதற்கு, அடியேன் குறிப்பை அறிந்து கருணையோடு வரம் தருவாய் (எ-று)

ஆறுமுக மான பொருளை யநுதினமு மருள்வாய் வள்ளிமணாளனே!
மாறும் மாயாவுலகினில் மயங்கி தடுமாறி யூனோடு
ஊறும் பிணியுந்துயரமுங் கொண்டு யழிவேனோ?யறியேனே!
ஏறுமயில் வாகனா! தீராயென்னோடுறையுங் குறை களையே. 124


ஆறுமுகம் ஆன பொருளை அநுதினமும் அருளயாய் வள்ளி மணாளனே!
மாறும் மாயா உலகினில் மயங்கி தடுமாறி ஊனோடு
ஊறும் பிணியுந் துயரமுங் கொண்டு அழிவேனோ? அறியேனே!
ஏறு மயில் வாகனா! தீராய் என்னோடு உறையுங் குறைகளையே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தினமும் மாறி கொண்டு வரும் இந்த மாயைகள் நிறைந்த உலகினில் மயங்கி தடுமாற்றங் கண்டு இந்த உடலோடு சேர்ந்த நோய்களோடு துயரமுங் கொண்டுயான் அழிந்து விடு வேனோ? ஆண் மயில் மீது ஏறி வரும் மயில் வாகனனே! ஒன்றும் அறி யாமல் இருக்கிறேனே! என்னோடு சேர்ந்துள்ள குறைகள் யாவையும் தீர்த்து அருள்வாய் (எ-று )

குறைவதின்றி கூறிய குண நலன்களையடைந்து மாய
திறையு மகன்றிட தெளிந்து திருவடிக்கே தொண்டுகள் புரிந்திட
கறை பொருந்திய காலர் கைபடாது கருணையோடு காத்திட
மறைபொருளானவனே! வள்ளிமணாளனே! வாரும் அற்றைக்கே! 125


குறைவது இன்றி கூறிய குண நலன்களை அடைந்து மாய
திறையும் அகன்றிட தெளிந்து திருவடிக்கே தொண்டுகள் புரிந்திட
கறை பொருந்திய காலர் கைபடாது கருணையோடு காத்திட
மறையின் பொருளானவனே! வள்ளி மணாளனே! வாருமே அற்றைக்கே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! வேதங்களின் சாரமாய் இருப்பவனே! உலகம் எனும் மாய திறையில் மூடிக் கிடக்கும் யான் குறைவு என்பது இல்லாமல் சொல்லக்கூடிய குண நலன்களை தெளிவுபட அடைந்து, உனது திருவடிக்குத் தொண்டுகள் புரிந்திடவும், யமன் கைவசப்படாமல் இருக்கவும், கருணையோடு என்னை காத்து அருள் புரிவாய் (எ-று )

அற்றைக் கலரெடுத்தருமையாய் மாலை தொடுக்கும் 
பற்றையேப் பெற்று பொற் சரணமேச் சாற்றி வள்ளிமணாளனே! 
கற்றைச் சடையார் பங்கிலுறையுங் கமலாம்பிகையின் மைந்தனே! 
எற்றைக்கும் யுமக்கு தொண்டே புரிய யருளாயெனக்குமே! 126

அற்றைக்கு அலர் எடுத்து அருமையாய் மாலை தொடுக்கும்
பற்றையேப் பெற்று பொற் சரணமேச் சாற்றி வள்ளிமணாளனே!
கற்றைச் சடையார் பங்கில் உறையுங் கமலாம்பிகையின் மைந்தனே!
எற்றைக்கும் உமக்கு தொண்டே புரிய அருளாய் எனக்குமே.


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கற்றையாக சடாமுடியை பெற்றுள்ள சிவபெருமான் இடப் பாகத்தில் தாமரை மலருக்கு நிகராக இருக்க கூடிய 'கமலாம்பிகை' என்ற திருநாமம் உடைய பார்வதியாள் புதல்வனே! தினம் தினம் புதிய மலர்கள் எடுத்து அருமையாக மாலைகள் தொடுத்து உனது பொன் போன்ற பாதங்களுக்கு சூடக்கூடிய ஆசையைக் கொடுத்து, என்றைக்கும் உமக்குத் தொண்டுகள் புரிந்திட அடியேனுக்கும் அருள்வாய். 
(எ-று )

ராகம் : மத்யமாவதி 

எனக்கென யாவும் பெற்றிரப்பவர்க்கு சற்றாகிலு மீந்திடவும்
மனத்தினில் மாசுகளையகற்றி நல்மதியைப் பெற்றிடவுந்தினைப்
புனத்தினில் விருத்தனாய்! குறத்தியைமணந்த வள்ளிமணாளனே!
உனக்காளாகும் பேரானந்தத்தோடு நல்காயென்றும் ஆனாதே! 127


எனக்கு என யாவும் பெற்று இரப்பவர்க்கு சற்று ஆகிலும் ஈந்து இடவும்
மனத்தினில் மாசுகளை அகற்றி நல் மதியைப் பெற்றிடவுந் தினைப்
புனத்தினில் விருத்தனாய்! குறத்தியை மணந்த வள்ளிமணாளனே!
உனக்கு ஆள் ஆகும் பேர் ஆனந்தத்தோடு நல்காய் என்றும் ஆனாதே!


(க-ரை) தினைப் புனத்தில் வயோதிக வேடங் கொண்டு சென்று குறத் தியாகிய வள்ளியை மணந்த வள்ளி மணவாளனே! எனக்கு என்று தேவையானவைகள் யாவையும் பெற்று, அதில் வேண்டுபவர்களுக்கும் சற்று கொடுத்து, மனதினில் குற்றங்களை நீக்கி, நல்ல புத்தியை பெற்று என்றும் நீங்குவதற்கு அரிதான பேரானந்தத்தோடு உமக்கு ஆளாகும் பேற்றை தருவாய். (எ-று)

ஆனாத ஞான புத்தியினை வினையேனுக்கு விரித்தளிக்கவும்
தானாக யுனது திருவடியை தினஞ் சிந்தித்து பாடவும்
மானாக துள்ளித் திரிந்தவள்ளிக்கு மணவாளனே! யமரர்
கோனானயுனது காட்சியை யருளாய் திருப்புகழ் தேனுடனே! 128


ஆனாத ஞான புத்தியினை வினையேனுக்கு விரித்து அளிக்கவும்
தானாக உனது திருவடியை தினஞ் சிந்தித்து பாடவும்
மானாக துள்ளித் திரிந்த வள்ளிக்கு மணவாளனே! அமரர்
கோனான உனது காட்சியை அருளாய் திருப்புகழ் தேனுடனே!


(க-ரை) மானைப் போன்று தினைப் புனத்தில் துள்ளி ஓடி திரிகின்ற வள்ளிக்கு மணவாளனே! என்றும் நீங்குவதற்கு அரிதாகிய ஞான புத்தியினை வினையால் சூழ்ந்துள்ள அடியேனுக்க விரிவாக உபதேசித்து அதன் பயனாய் உனது திருவடியை உனது திருவருளால் சிந்தித்து பாடவும், தேவர்களின் தலைவனான உனது தரிசனத்தை பெறவும், உனது திருப்புகழ் எனும் தேனைப் பருகவும் அடியேனுக்கு அருள்வாய். (எ-று)

தேனுந்து முக்கனிகளோடு கன்னலுஞ் சேர்த்து மேனியில் நித்தம்
தானுந்து மாவின் பாலொடு யநுதினமுமாடி மகிழும்
வானுந்து தாரகை களிடையே திங்களாய்த் திகழும் வள்ளிமணாளனே!
நானுந்தன் யடிமையாய் தொழுதிட யருளுக யுருகிடும் ஊனே. 129

தேன் உந்து முக் கனிகளோடு கன்னலுஞ் சேர்த்து மேனியில் நித்தம்
தான் உந்தும் ஆவின் பாலொடு அநுதினமும் ஆடி மகிழும்
வான் உந்து தாரகைகள் இடையே திங்களாய் திகழும் வள்ளி மணாளனே!
நான் உந்தன் அடிமையாய் தொழுதிட அருளுக உருகிடும் ஊனே.

(க-ரை) பசுவின் மடியின் தானாகவே பெருக்ககூடிய பாலினோடு, தேனை பெருக்குகின்ற மூன்று பழங்களையும் (மா, பலா, வாழை), கற்கண்டையுஞ் சேர்த்து தினமும் அபிஷேகங் கொண்டு இன்புறும் வான்வெளியில் பெருகக்கூடிய நட்சத்திரங்களின் நடுவே திகழும் சந்திரனை போன்ற வள்ளி மணவாளனே! நான் உந்தன் அடிமையாய், எனது உடலும் உயிரும் உருகி தொழுதிட அருள்வாய். (எ-று)

ஊனே யொடுங்கி யொளியுங் குன்றி முதுகும் வளைந்து
கூனேயாகி கோலுங் கொண்டு திரியுந் நாளில்
மானே நிகராள் வள்ளி மணவாளா! துணையாய் வருவாய்
நானே யுந்தன் நாமஞ் செப்பத் தீராயிருவினையே. 130


ஊனே ஓடுங்கி ஒளியுங் குன்றி முதுகும் வளைந்து
கூானே ஆகி கோலுங் கொண்டு திரியுங் நாளில்
மானே நிகராள் வள்ளி மணவாளா! துணையாய் வருவாய்
நானே உந்தன் நாமஞ் செப்பத் தீராய் இரு வினையே.


(க-ரை) மானுக்கு நிகராக துள்ளி நடை பயிலும் வள்ளிக்கு மணவாளனே! எனது உடலும் சுருங்கி பார்வையும் மங்கி, முதுகும் வளைந்து, கூனாகி, கையில் கோலை கொண்டு திரியும் அந்த நாளில் நான் உனது நாமங்களை கூறுவதற்கு துணையாக இருந்து என் இரு வினைகளையும் தீர்ப்பாய் (எ-று )

வினை திரளுமொரு விதியின் வயப்பட்டு மாளாது
உனை நினைந்துய்ந்திட யருளாய் வள்ளிமணாளனே! ஆண்
பனையுங் குலைகள் ஈன! யதிசய திருமறை யோதியவ!
எனையறிந்திட துணை புரிந்திட வாராய் வானோருடனே! 131


வினை திரளும் ஒரு விதியின் வயப் பட்டு மாளாது
உனை நினைந்து உய்ந்திட அருளாய் வள்ளிமணாளனே!
ஆண் பனையுங் குளைகள் ஈன! அதிசய திருமறை ஓதியவ!
எனை அறிந்திட துணை புரிந்திட வாராய் வானோர் உடனே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருவோத்தூர் (செய்யாறு) என்கின்ற சிவஸ்தலத்தில், திருஞானசம்பந்த பெருமானாக, ஆண் பனை மரம் பெண் பனை மரமாக மாறி குலைகளை தள்ளுவதற்கு, அதிசய தமிழ் வேதமாகிய தேவாரத்தை பாடியவனே! யான் வினைகளால் திரண்ட விதியின் வசப்பட்டு மாண்டு போகாது, உன்னை நினைந்து நல்ல பேற்றினை அடைவதற்கும், என்னை அறிந்து கொள்வதற்கும், நீ தேவர்களோடு சேர்ந்து அடியேனுக்கு துணை புரிவதற்கு வருவாய். (எ-று )

வானோர் வழுத்துனது செந்தாமரை பாதங்களில் சிந்தையை
தேனோடு பாலுங் கலந்தாற் போற் யொன்றாது வள்ளிமணாளனே!
ஏனோ நிலையாப்பொருளை யவனியில் நிதமே காத்து
ஊனோடு முயிரோடமழிவேனோ தாருமுனதருளை அன்பாகவே! 132


வானோர் வழுத்து உனது செந்தாமரை பாதங்களில் சிந்தையை
தேனோடு பாலுங் கலந்தாற் போல் ஒன்ருது வள்ளிமணாளனே!
ஏனோ நிலையாப் பொருளை அவனியில் நிதமே காத்து
ஊனோடும் உயிரோடும் அழிவேனோ தாரும் உனது அருளை அன்பாகவே!


(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தேவர்கள் எல்லோரும் தொழுது வணங்கக்கூடிய, உனது செந்தாமரை போன்ற திருப்பாதங்களில் எனது சிந்தையை, தேனோடு , பால் கலந்தாற் போல இணைய விடாமல், ஏனோ, நிலையில்லாத், இவ்வுடலையும் இவ்வுலக பொருட்களையும், தினமும் காத்து உடலோடும், உயிரோடும் அழிந்து விடுவேனோ? அவ்வாறு ஆகாது, உனது திருவருளை அன்போடு சேர்த்து தருவாய். (எ-று )

நூற்பயன்

அன்பால் வள்ளிமணாளனை விரிந்தயிவ்வுலகினில் மறவாது நினைந்து
ஒன்றோடொன்றாக யிணைத்து ஆரணியடியார்க்கடியவன் கூறிய
சொன் மாலைகள் நாலொடு நாலெட்டும் ஈராறெட்டும் நவிலுவார்
இன்முகத்தோடு யெல்லா நலனும் பெற்றுயின்யுற்றிருப்பாரே!

அன்பால் வள்ளிமணாளனை விரிந்த இவ் உலகினில் மறவாது நினைந்து
ஒன்றோடு ஒன்றாக இணைந்து ஆரணி அடியார்க்கு அடியவன் கூறிய
சொன் மாலைகள் நாலொடு நால் எட்டும் ஈராறு எட்டும் நவிலுவார்
இன் முகத்தோடு எல்லா நலனும் பெற்று இன்புற்று இருப்பாரே!

(க-ரை) விரிவு அடைந்துள்ள இவ்வுலகினில், வள்ளி மணாளனை அன்பால், மறவாமல் நினைந்து, ஒன்றோடு ஒன்றாகச் சேர்த்து, ஆரணி அடியார்க்கு அடியவன் கூறிய இந்த சொல்லால் ஆன ஆட்சர மாலைகள் 4+(4x8) + (2x6x8)=132 - ம் சொல்லுபவர்கள், அவனது திருவருளால், புன்னகை தவழும் முகத்தோடு, எல்லாவிதமான நலன்களையும் பெற்று அடைந்து இருப்பார்கள். (எ-று)

திருசிற்றம்பலம்

சுபம்














Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam