Author



Author Shri. S. Kuppuswamy Ayya.



குருநாதர் - திருப்புகழ் செம்மல் - துரைசாமி நாயனார் சுவாமிகள்.
1st - Gurunadhar - Thirupugaz Semmal - Duraiswamy Nayanar Swamigal


குருநாதர் - கந்தர் அலங்கார பிரியர் - வள்ளிமலை தண்டபாணி சுவாமிகள்.
2nd - Gurunadhar - Kandhar Alangara Piriyar , Vallimalai Dhandapani Swamigal.




ஆசிரியர் பெயர் : திரு. சா. குப்புசாமி.
மனைவியர் பெயர்: திருமதி.  கு. கிருஷ்ணவேணி அம்மாள்.

தந்தையார் பெயர் : திரு. சாரங்கபாணி முதலியார்.
தாயார் பெயர் : திருமதி. குப்பபம்மாள்.

பிறந்த ஊர் :  ஆரணி,   திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
பிறந்த தேதி :  1954 ஜய வருடம், புரட்டாசி மதம் 15 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.  ஆங்கில தேதி -  01/10/1954. 
  
கல்வி : 10 வகுப்பு. S.S.L.C
தொழில் :  இயந்திர பணியாளர். (ஓய்வு)
வசிக்குமிடம் : பெங்களூர்.
தொடர்புக்கு :  kuppuswamy519@gmail.com,
+91 9019970021,  +91 9844135872



ஆசிரியர் வரலாறு

முன்னுரை :

எல்லா வல்ல ஆதியும் அந்தமும் இல்லா பரம்பொருளாகிய,
சிவபெருமானுடைய படைப்பில் இப்பூவுலகில் அன்று முதல்
இன்று வரை நம்மிடை எத்தனையோ அடியார் பெருமக்களும்
பக்தர்களும், தோன்றியும், வாழ்ந்தும், மறைந்தும் அவர்கள் செய்த
செயல்பாடுகளால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில், தங்கள் செய்கையாலும், தொண்டுகளாலும், பக்தியாலும், தாம் அடைந்த அரிய அனுபவங்களை பாடல்களாவும், செய்யுள்களாகவும், கவிதைகளாகவும் புனைந்து அவற்றை இறைவனுக்கு சமர்பித்தும், இப்பூவுலக மக்கள் அனைவரும் ஓதியும் உணர்த்தும், அவ்வழி சென்று இறைவனை அடையும் பொருட்டு அவைகளை நமக்கு தந்து சென்றுள்ளர்கள்.

அத்தகையோர் வரிசையில் ஆரணி அடியார்க்கடியவனாகிய சா. குப்புசாமி என்கின்ற அடியேனும் ஆற்றிய, அடியேனால் முடிந்த சிறிய சிவதொண்டுகளும், அனுபவங்களும் திருமுருகப்பெருமான் திருவருளாலும், அடியேனுடைய குருநாதர்களின் அருளாசியாலும் கிடைக்க பெற்ற செய்யுள்களை தொகுத்து இப்பூவுலக மக்கள் அனைவரும் படித்து பயனடையும்படியும், அதன் மூலம் தம் வாழ்க்கையில் வந்த இனி வரக்கூடிய பல இடர்களையும் களைந்து நற்தொண்டுகள் ஆற்றி சகல செல்வ மிக்க பெருவாழ்வோடும், இகபர சௌபாக்கியங்களோடும் வாழ்ந்து இறைவனடி சேருமாறு, இங்கே பின் வருமாறு தொகுத்து அளித்து அதை உங்கள் அனைவரும்முன் பணிவன்போடு சமர்பிக்கறேன். இதில் குற்றம் குறைகள் ஏதாகிலும் தென்பட்டால், அடியேனை மன்னித்து அருளாசி வழங்குமாறு மிகவும் தாழ்மையுடைன் கேட்டு கொள்கிறேன்.

பிறப்பு :

நம் பாரத தேசத்தில், தமிழகத்தில் வடகிழக்கு மாவட்டத்தில் ஆரணி என்ற ஊரில் வாழ்ந்து வந்த திரு.சாரங்கபாணி முதலியார், திருமதி. குப்பபம்மாள் என்னும் தம்பதியருக்கு 5 குழந்தைகள் பிறந்து ஒவ்வொன்றாக ஐந்தும் இறந்து விட, பின்னர் அவ்வூருக்கு அருகில் உள்ள புதுகாமூர் அருள்மிகு பெரியநாயகியுடனுறை புத்ரகாமேச்சுரரை அவ்வம்மையார் வேண்டி 48 நாட்கள் விரதம் இருந்து அதன் பயனாக 6-வதாக ஐய வருஷம், புரட்டாசி மாதம் 15- ஆம் தேதி (01/10/1954) வெள்ளிகிழமை, விசாக நட்சத்திரம் 1- ஆம் பாதத்தில் அடியேன் பிறந்தேன்.

வளர்ப்பு:

அதன் பிறகு 1959-இல் அடியேனுடைய பெற்றோர்கள், தொழில் காரணமாக அண்டை மாநிலமான அன்றைய மைசூர் மாநிலம் (தற்போது கர்நாடக மாநிலம்) பெங்களூரு என்ற ஊருக்கு குடி பெயர்ந்தார்கள், அங்கு அடியேனுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்தார்கள், அடியேன் பயன்ற பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை, ஆங்கிலம், கன்னடம் மட்டும் தான் படிக்கச் முடிந்தது. அதன் பிறகு 6 ஆம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை தமிழ், ஹிந்தி, ஆகிய மொழிகளையும் சேர்த்து பயின்றேன். இவ்வாறாக அடியேனுடைய 17 வது வயது வரை படித்து 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றேன்.

ஆன்மிக தொடர்பு:

இவ்வாறு அடியேன் 3-ஆம் வகுப்பு பயலும்போது, 1962-ல் அடியேனுடைய வீட்டில், வானொலி பெட்டியில் இலங்கை அலைவரிசையில், தினமும் காலை 6 மணிக்கு பக்தி பாடல்கள் ஒளிபரப்பு ஆகும் அந்த நிகழ்சியில் "முத்தைத்தரு" என்ற பாடல் அடிகடி ஒலிபரப்பு ஆகும். பாடலை கேட்டு அடியேன் ஈர்க்கப்பட்டு எவ்வாறாயனும் அப்பாடலை கற்கவேண்டும் என்ற பேராவலால் எனது தந்தையாரிடம் அதுபற்றி கேட்டேன். அவரும் அப்பாடல் அருணகிரிநாதர் என்ற திரைப்படத்தில் வருவதாகவும், அதை பயிற்றுவிப்பார் இங்குயாரும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்கிறான் என்று கூறினார். பிறகு 6 மாத காலமாக அது பற்றி விசாரித்தும் தேடியும் வந்தார் பின் ஒரு நாள் நாங்கள் வசித்து வந்த அதே வீதியில் ஒரு வீட்டிற்க்கு அடியேனுடைய முதல் குருநாதராகிய திரு A.துரைசாமி நாயனார் சுவாமிகள் குடி வந்தார். அவர் பார்பதற்கு சிவமயமாக தோற்றம்மளித்ததால், எனது தந்தையார் அவரை விசாரித்து அடியேனுடைய ஆவலை கூறினார்.

அவரும் முதலில் உங்கள் மகனை ஒரு திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு அழைத்து வாருங்கள் பேசுகிறேன் என்று கூறி அனுப்பி வைத்தார். அதன்படியே சென்றபோது அவரும் விசாரித்து விட்டு, அடியேன்னுடைய ஆர்வத்தை பார்த்து விட்டு, இப்பாடல் திரு அருணகிரிநாத சுவாமிகள் இயற்றிய திருப்புகழ் என்ற நூலில் இருக்கிறது. நீ ஆர்வத்தோடு பிழை இல்லாமல் கற்பதாக இருந்தால் நான் பயிற்றுவிக்கிறேன் என்று கூறி அனுப்பிவைத்தார்.

அன்று முதல் அவரை குருநாதராக ஏற்றுகொண்டு தினமும் பள்ளி முடித்தவுடன், அவர் இல்லத்திற்கு வந்து திருப்புகழை கற்க ஆரம்பித்தேன்.

அவரும் "எல்லாரும் ஞானத்தெளிஞ்சரே கேளிர் சொல்" என்ற விருத்தத்தை ஆரம்பித்து "கைத்தல நிறைகனி" முதல் சுமார் 80-திருப்புகழ் பாடல்களை பயிற்றுவித்தார்.

அதன்பிறகு அடியேன் மேலும் பல திருப்புகழ்களை மிகவும் ஆர்வத்தோடு கற்று அவர் முன் பாடி காட்டுவேன். அவரும் பிழை இருந்தால் திருத்துவார். இவ்வாறாக 12- ஆண்டுகள் குருகுல வாசம் செய்து அவரிட்ட பணிகளை மேற்கொண்டு, அவரோடு இணைந்து தினமும் திருப்புகழ் பாடி வந்தேன்.

இவ்வாறு இருக்கும் வேலையில் 1972-ஆம் ஆண்டு அடியேன் குருநாதாராகிய திரு. துரைசாமி நாயனார் சுவாமிகள் இல்லத்திற்கு, ஹார்மோனிய வித்வான் திரு. தர்மலிங்கம் அவர்களால் திரு.வள்ளிமலை தண்டபாணி சுவாமிகள் எனும் ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பிறகு அச்சிவனடியார் அடியேன் குருநாதர் வீட்டிற்கு அடிகடி வந்து போகலானார், குருநாதரும் அடியேனும் திருப்புகழை தினமும் ஆர்வத்தோடு பாடுவதை பார்த்து, அச்சிவனடியார் அடியேனுக்கு, கந்தர் அலாகாரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி போன்ற அருணகிரிநாதர் நூல்களும், தேவாரம் திருவாசகம், திருமந்திரம், பெரியபுரணம் போன்ற திருமுறைகளும் பயிற்றுவிதார். நானும் அவரை எனது 2-வது குருவாக ஏற்றுக்கொண்டு இவைகளை எல்லாம் பயின்று வந்தேன்.

இவருடைய வரலாற்று குறிப்பு தனியாக இப்பக்கத்தின் கீழே எழுதப்பட்டுள்ளது. 

இல்லற ஈடுபாடு :

அடியேனுக்கு திருமணம் செய்வதற்கு வேண்டி, எனது பெற்றோர்கள் ஏற்பாடு செய்யலானார்கள். ஆனால் அடியேன் இல்லத்தில் ஈடுபட விருப்பமில்லாது. திருப்புகழும், திருமுறைகளுமே எனது மூச்சாக கொண்டு வாழ வேண்டும் என்று மறுத்து வந்தேன். அதற்கு இல்லற வாழ்வு ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் எனது பெற்றோர்கள் அடியேனுடைய குருநாதர்கள் 2-பேரிடம் முறையிட்டு சம்மதிக்கும்படி வேண்டினர்.

அதற்கு எனது இரு குருமார்களும் இல்லத்தில் ஈடுபடுவதுதான் சாலச் சிறந்தது என்று திருமுறைகளை மேற்கோள் காட்டி விளக்கினார்கள். பெரியபுராணத்தில் நாயன்மார்கள் இல்லத்தில் இருந்து கொண்டேதான் இறைபணியை மேற்கொண்டு சிவசாயுச்சிய பதவியை அடைந்தனர், திருஞானசம்பந்தர், வைதீக நெறியை நிலைநாட்டுவதற்கு வேண்டி இறுதியில் திருமணம் புரிந்தே இறைவனுள் ஐக்கியமானார் என்றும், இறைவனே எங்கும் எதிலும் ஆணும் பெண்ணுமாக காட்சி தருவதாகவும், சகல சிவத்தலங்களிலும் சுவாமியும், அம்பாளுமாகவே வேறு வேறு பெயர்களில் காட்சி தருவதாகவும், இல்லறத்தில் இருந்து கொண்டே இறைதொண்டை மேற்கொள்ளும்படி உபதேசித்தார்கள்.

அதன் பிறகு குருமார்களின் சொற்படி 1977 ஆண்டு ஆவணித் திங்கள் 30 ஆம் தேதி, தமிழ் நாட்டில், ஆற்காடு வட்டம், திமிரி என்ற ஊரைச் சேர்த்த தந்தைவழி தமக்கையின் பேத்தி N கிருஷ்ணவேணி என்ற பெண்மணியை திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டேன்

அதன் பிறகும் இல்லறத்தில் இருந்துகொண்டே அடியேன் சிவதொண்டையும், திருப்புகழ், திருமுறைகள் பாடுவதையும் உயிர்மூச்சாககொண்டும் இல்வாழ்க்கைக்கு தேவையான பொருளை பெறுவதற்கு வேண்டி, தொழிற்சாலைகளில் பணிபுரிந்தும் வாழ்ந்து வந்தேன். இவ்வாறாக 20 ஆண்டுகள் கழித்து விட்டன. அடியேனுக்கு இறைவன் திருவருளால், 17-3-1979-இல் ஒரு பெண் குழந்தை (ரேணுகா தேவி) மற்றும் 19-9-1981-இல் ஒரு பெண் குழந்தை (அருளம்பிகை) என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து அவர்கள் கல்வி கற்று கொண்டு இருந்தார்கள்.

ஆன்மீக அனுபவங்கள்

ஆன்மீக அனுபவம்: (1)

அதன் பிறகு ஒரு நாள் (15-8-1997) வெள்ளிகிழமை அன்று நம்முடன் பணி புரியும் நண்பர், திரு வெங்கடாசலம் என்பவர் அழைப்பின்படி மாலை ஸ்ரீ வரலஷ்மி பூசைக்கு செல்ல நேர்ந்தது. பூஜைகள் முடிந்த பிறகு, பிரசாதம் உட்கொண்டு எனது இல்லம் திரும்புவதற்கு வேண்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தோம். அப்போது மணி இரவு 8.00 இருக்கும். அச்சமயம் திரு. வெங்கடாசலம் என்ற நண்பரோடு பழகிய வேறு ஒரு நண்பர் (பெயர் வடிவேல்) அறிமுகப்படுத்தப்பட்டார். வெங்கடாசலம் அவர்கள் வந்தவரிடம், என்னை சுட்டி காட்டி, இவர் முருக பக்தர் திருப்புகழ் தேவாரம் எல்லாம் முறையாக பாடக் கூடியவர் என்று கூறி அறிமுகப்படுத்தினார். வந்தவர் அப்படியா, இவரை நான் பலகாலமாக பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். இவர் பாடும் பழனி திருப்புகழ்களை கேட்டு கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக சிவனார் மனங்குளிர, அபகார நிந்தைப்பட்டு, வசனமிக வேற்றி, கருவினுருவாகி வந்து, அவனிதனிலே பிறந்து, தலைவலி காமாலை, நாதவிந்து கலாதி ஆகிய திருப்புகழ்களை நான் அடிக்கடி கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறி புன்னகைத்தார். பிறகு அவருடைய இல்லம் அப்பகுதியில்தான் இருப்பதாகவும் தமது இல்லத்திற்கு வந்து போகும் படியும் அழைத்தார். அவ்வேளையில் மேகம் இருண்டு மழை தூரல் ஆரம்பிக்கவே, அடியேன் செல்ல வேண்டிய பேருந்தும் வந்துவிட்டது. உடனே நானும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அவர் இல்லத்திற்கு வருவதாக கூறி விடைப்பெற்று கொண்டேன்.

பின்னர் அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை (17-8-1997) அன்று அடியேனும் திரு. வெங்கடாசலமும் அவர் இல்லத்திற்கு சென்றோம். அங்கு அவர் மனைவி மட்டும் இருந்தார். அவ்வம்மையாரை கேட்டதற்கு தம் கணவர், ஒரு திருமணத்திற்கு செல்வதற்காக (14-8-1997) வியாழக்கிழமை அன்றே திண்டுக்கல் என்ற ஊருக்கு சென்றிருப்பதாகவும், அவர் மறுபடியும் (18-8-1997) திங்கள் கிழமை அன்று வீடு திரும்புவதாகவும் கூறினார். நாங்கள் அதிசயித்து, அவ்வம்மையாரிடம் மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் திரும்பி விட்டோம்.

அதன் பிறகு அடுத்து வந்த செவ்வாய்க்கிழமை மாலை (19-8-1997) அன்று அவர் இல்லத்திற்கு நாங்கள் இருவரும் சென்றோம். அங்கே அந்த நண்பர் (வடிவேல்) எங்களை வரவேற்று உபசரித்து பேசும் போது, நாங்கள் முன்னே நடந்த விவரங்களை கூறி கேட்டபோது, அதற்கு அவர், நீங்கள் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி அளவில், பழநிமலையில் மேலே சந்நிதானத்தில் இருந்ததாகவும், இங்கே இல்லை என்றும் கூறினார். அதுமட்டும் அல்லாது தமக்கு எந்த ஒரு திருப்புகழும் தெரியாது என்றும் கூறி விட்டார். பிறகு அவரோடு சற்று நேரம் பழநிமலையைப் பற்றி உரையாடி விட்டு வீடு திரும்பினோம். திரு. வெங்கடாசலம் மட்டும் மிகவும் வியப்படைந்தார். அடியேன் மட்டும், வந்தது பழநி முருகப்பெருமானே என்று உணர்ந்து உருகி அவர் கூறிய திருப்புகழ் பாக்களை பாடி தொழுது மகிழ்ந்தேன்.

ஆன்மீக அனுபவம்: (2)

அதன் பிறகு அடியேனோடு வேலை பார்த்து வந்த மற்றொரு நண்பர் திரு. ஜெயகிருஷ்ணன் என்பவரின் பெண் திருமணம் (22-1-1999) வெள்ளிக்கிழமை, வேலூர் அருள்மிகு ஜலகண்டேச்சுரர் திருக்கோயிலில் நடந்தது.

அந்த திருமணத்திற்காக அடியேன் வேலூர் சென்று விட்டு அன்று அங்கே தங்கி மறுநாள் (23-1-1999) சனிக்கிழமை மதியம் 3.00 மணியளவில் பெங்களூர் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்று பயணச் சீட்டு எடுத்து பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது எனது 2-வது குருநாதர் திரு. தண்டபாணி சுவாமிகளின் ஞாபகம் வந்தது. அவர் அப்போது வேலூர் அருகே காங்கேய நல்லூர் என்ற ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார் அதை அறிந்து, அவரை சென்று பார்த்து விட்டு சென்று விடலாமே என்று எண்ணி, பயணச் சீட்டை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டு காங்கேயநல்லூருக்கு சென்றேன். அங்கே சுவாமிகள் ஒரு கட்டில் மேலே சுருண்டு படுத்து இருந்தார். அடியேன் அவரை பார்த்து சுவாமி, சுவாமி என்று அழைத்தேன். அவரும் கண் விழித்து அடியேனை சற்று நேரம் உற்று பார்த்தார், பிறகு யார் பெங்களூர் குப்புசாமியா? வாப்பா, உட்கார் என்று கையை உயர்த்தி காட்டினார். நானும் புரிந்து கொண்டு அவரை தூக்கி உட்கார வைத்தேன். அந்த வீட்டு அம்மையார் அப்போது சுவாமி பேசியே 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. அந்த ஆகாரமும் ஏற்று கொள்ளாமல் படுத்து இருக்கிறார் என்று கூறினார்.

அடியேன் கொண்டு சென்ற பழங்களில் ஒன்றை சாறு பிழிந்து எடுத்து வரச்செய்து, அடியேன் கைகளாலேயே அவருடைய வாயில் பருக கொடுத்தேன். ஒரு அரை டம்பளர் ஆரஞ்சு சாறு பருகினார். அதன் பிறகு அடியேனை விசாரித்து விட்டு "ஆவிக்கு மோசம் வருமாறு" என்ற திருத்தணி கந்தர் அலங்காரத்தையும், "குறைவதின்றி மிக்க" என்ற திருப்புகழும் பாடச் செய்து விபூதி அளித்தார் அப்பாடல் பொது திருப்புகழில் வரும்.

"மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைத்து நிற்க மயிலில் வந்து முக்தி தரவேணும்"

என்ற அடியை 2-3 முறை பாடச் சொன்னார். அப்போது மணி மாலை 5.00 மணி ஆகி விட்டதால், அடியேன் விடை பெற எண்ணி, சுவாமி அடியேனுக்கு விடை கொடுங்கள் பெங்களூர் செல்வதற்கு என்று கூறினேன்.

அவரும் மீண்டும் ஒரு முறை விபூதி கொடுத்த அப்படியே, ஆகட்டும் என்று கூறி, "எனக்கும் நேரம் ஆகி விட்டது" என்று கூறி உற்று பார்த்தார். அதன் பொருள் அடியேனுக்கு பிறகுதான் தெரிய வந்தது.

நான் பொங்களூர் திரும்பி பிறகு, மறுநாள் காலை 10 மணி அளவில் ராமலிங்கம் என்ற அன்பர் விட்டில் இருந்து அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. திரு. தண்டபாணி சுவாமிகள் முதல் நாள் மாலை 6 மணிக்கு இறைவனோடு இரண்டர கலந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அடியேன் மிகவும் மனவருத்த பட்டு அவருக்காக திருப்புகழ் தேவாரம் பாடி முருகபெருமானை வேண்டிக்கொண்டேன் .

பிறகு ஏறக்குறைய 5 ஆண்டுகள் கழிந்த பின்னர் 22/4/2004 - ஆம் ஆண்டு "பங்குனி உத்தரம்" அன்று இரவு 1.30 மணிக்கு மேல் திரு.தண்டபாணி சுவாமிகள் அடியேன் கனவில் தோன்றி "திருத்தணி முருகன்" மேல் 108-"அருள்மாலைகளை" பாடவும் என்று மொழிந்தார் அடியேன் எனக்கு “ஒன்றும் தெரியாது” என்று கூறிய போது அவரும் ஆசிர்வதித்து "நீபமாலை" எனறு தொடங்கும்  விநாயக பெருமான் காப்புச் செய்யுளை அடியெடுத்து கொடுத்தார். அது முதல் கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடசதுர்த்தி நடராஜர் அபிஷேகம் போன்ற நாட்களில் இரவு 2 அல்லது 3 மணிக்கு மேல் பல மாலைகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.

இத்திருத்தொண்டு அடியேன் குருமார்களாகிய ஆகிய திண்டிவனம் திருப்புகழ் செம்மல் திரு. துரைசாமி நாயனார் சுவாமிகள் திருவருளாலும் கந்தர் அலங்கார பிரியார் திரு. தண்டபாணி சுவாமிகள் திருவருளாலும் பனுவல் பாயிரம் ஈய வல்ல புலவோனாகிய, திருமுருகப் பெருமான் திருவருளாலும் இன்றுவரை தொடர்ந்து நடத்து கொண்டே இருக்கிறது. ஆன்மீக அனுபவம் - (3)

அதன் பிறகு (22-1-2008) செவ்வாய் கிழமை தைப்பூசத்திருநாள்று , பெங்களூர், ஆனந்த நகர் T.S நாராயணன் (திருப்புகழ் ) அன்பர் வீட்டுக்கு திருப்புகழ் பாடும் நிகழ்ச்சிக்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். நடுவில் வந்த ஒரு பேருந்து நிறுத்தத்தில், ஒரு முதியவர் (பார்ப்பதற்கு சிவனடியார் போல் தோற்றமளித்தார்) போருந்தில் ஏறி எனது பக்கத்தில் அமர்ந்தார். பிறகு என்னை கீழும் மேலும் உற்று நோக்கி விசாரித்தார்.

அப்போது தனது பையில் வைத்திருந்த ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்து இதில் "சுவாமிமலை இருக்கிறது" பார்க்கவும், நான் மறுபடியும் சந்திக்கிறேன் என்று கூறி அடுத்து வந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டார். அவரை மறுபடியும் சந்திக்கவே இல்லை அந்த காகித்தை பிரித்து பார்த்த போது அதில் "தேனை வடித்து " என்ற "சுவாமிமலை" திருப்புகழ் எழுதப்பட்டு இருந்தது. அடியேன் இது "திருமுருகப்பெருமான் " திருவிளையாடல் என்று எண்ணி, அப்பாடலை பாடி மகிழ்ந்தேன் . ஆன்மீக அனுபவம் :- (4)

அதன் பிறகு (21.3.2008) வெள்ளிக்கிழமை, பௌர்ணமி பங்குனி உத்திரம் அன்று வள்ளிமலைக்கு சென்றிருந்தேன். அன்று இரவு அங்கே தங்கி இருந்து போது, இரவு சுமார் 2-மணிக்கு மேல், "வள்ளிமணாளன் அட்சர மாலை" க்குரிய, "பள்ளியிலுறையும் பிள்ளைாய்" எனும் விநாயகர் காப்புச் செய்யுள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஒவ்வொரு கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு 2-00 மணிக்குமேல், 5 முதல் 10 செய்யுள்கள் வரை திருவள்ளிமணாளன் திருவருளால் அருளப்பெற்று (26.4.2009) புதன்கிழமை, மறுபடியும் பங்குனி உத்திரம் அன்று முடிவு பெற்றது.

சரியாக 1-வருடத்தில் நூற்பயன் செய்யுள் சேர்ந்து, 133 செய்யுட்கள் முருகன் அருளால் அருளப்பட்டது. இச்செய்யுட்கள் ஒவ்வொன்றும், அகர வரிசையில் உள்ள ஏதாவது ஒரு திருப்புகழில் ஆரம்பித்து அதே அகர வரிசையிலுள்ள மற்றொரு திருப்புகழில் முடியும் "அந்தாதி" வகை செய்யுட்களாக அமைந்து இருக்கும். அதுவல்லாது ஒவ்வொரு செய்யுள்களிலும் ஏதாவது ஒரு வரியில், "வள்ளி மணாளன்" என்ற திருநாமம் அமைந்துள்ளது.

அடியேன் முருகப்பெருமான் திருவருளால், இச்செய்யுட்களுக்கெல்லாம் கருத்துரையும் எழுதி இருக்கிறேன். இந்த "வள்ளிமணாளன் அட்சர மாலை" புத்தகமாக வெளியிடுவதற்கு துபாயிலுள்ள முருகபக்தர் ஒருவர் சுவாமிநாதன் என்ற பெயர் கொண்டவர் பண உதவி செய்துள்ளார். அலைபேசி மூலம் தொடர்பு கொண்டாரே ஒழிய நேரில் பார்த்ததே இல்லை. இதுவும் திருமுருகன் திருவருளே.

ஆன்மீக அனுபவம்:- (5)

அதன் பிறகு (20.6.2009) சனி பிரதோஷம் அன்று தீர்த்த மலைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள இராமதீர்த்தம், குமாரதீர்த்தம் கௌரி தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் முதலான தீர்த்தங்களின் நீராடி, அருள்மிகு வடிவாம்பிகையுடனுறையும் தீர்த்தகிரீஸ்வர பெருமானை தரிசித்து விட்டு அன்று இரவு அங்கேயே தங்கினேன். இரவு 1.00 மணிக்கு மேல் அந்த தீர்த்தகிரீஸ்வர பெருமான் திருவளால், "அழியாத ஞானமொடு" என்ற ஒரு பதிகம் ஆரம்பித்து "நன்றாக நமையாளும்" எனும் பல சுருதி வரை, 11- பாக்கள் கொண்ட "தீர்த்தகிரீச்சுர மாலை" ஒரே இரவில் அருளப்பட்டது. அந்த 11- பாக்களுக்கும் அடியேன் கருத்துரை எழுதி பாடி மகிழ்ந்தேன். அதன் பிறகு, புதுகாமூர் புத்ரகாமேச்சுரர் மாலை, திண்டிவனம் சுந்தர நடராசேச்சுரர் மாலை, அத்திமுகம் ஐராவதேச்சுரர் மாலை, பேரிகை திருவட்டீச்சுரர் மாலை, வேலூர் சலகண்டேச்சுரர் மாலை, விரிஞ்சிபுரம் மார்கபந்தேச்சுரர் மாலை, கந்தகோட்டம் கனக மாலை, பழநியங்கிரி வேலன் பவழ மாலை போன்ற பாக்களால் புனைந்த மாலைகள், ஒவ்வொரு கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் குருநாதர்கள் அருளாலும், திரு முருகப்பெருமான் திருவருளாலும் அருளப்பட்டது. இவை அனைத்திற்கும் அடியேன் கருத்துரை எழுதியுள்ளேன்.

ஆன்மீக அனுபவம் - (6)

2013-ல் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் என்கின்ற ஊருக்கு மேற்கே, 14-K.M தொலைவிலுள்ள, குடிவெங்கா என்ற கிராமத்திற்கு அருகில், அகஸ்தியா இண்டர்நேஷ்னல் பவுண்டேஷன் என்கின்ற அறிவியல் கல்லூரில் அடியேன் வேலை பார்த்து கொண்டு இருந்தேன், அச்சமயம் அங்கு என்னொடு வேலை பார்க்கும், சிவா என்கின்ற தச்சு வேலை பார்ப்பவர் வீட்டில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கு அடியேனை அழைத்தார். நானும் ஒப்புக்கொண்டு அன்றய தினம் (25 2-2013) திங்கள் கிழமை, பெளர்ணமி அன்று மாசி மகம் மதியம் 3-1/2 - மணி அளவிற்கு நாங்கள் இருவரும், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். சுமார் 5- கி.மீ தூரம் சென்ற பிறகு, அந்த இரு சக்கர வாகனம் பழுது அடைந்து விட்டது. சுமார் 4-00 மணி இருக்கும்.

எங்கு பார்த்தாலும் இரண்டு பக்கமும், தக்காளி, வெண்டை, பாகல், அவரை போன்ற தோட்டங்கள் தான் தென்பட்டது. அங்கு மல்லிகை பூ நறுமணம் வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்த அடியேன் அந்த தச்சரிடம் சிவா , இங்கு எங்காவது மல்லிகை பூ தோட்டம் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவர் இங்கு இங்கு சுற்றியுள்ள ஊர்களில் அத்தகைய மல்லிகை தோட்டம் கிடையாது என்று கூறினார். அது மட்டுமல்ல நீங்கள் சொல்லும் மல்லிகை பூ வாசனை என்னால் உணரமுடியவில்லை என்று சொன்னார்.

பிறகு அந்த இரு சக்கர வாகனத்தை சரி செய்ய முயற்சி மேற்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வெய்யில் அதிகமாக காணப்படவே அடியேன் , சிவாவிடம் கூறிவிட்டு, அருகில் தெரிந்த ஒரு ஆலமரத்து நிழலில் சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்தில், ஒரு வயது முதிர்ந்தவர் தலையில் ஒரு மூட்டையுடன் அங்கு வந்து அதே மரத்தடியில் அமர்ந்தார்.

அவர் பார்பதற்கு வெண்தாடியுடன் வெள்ளை நிற வேட்டியும் மேலே ஒரு வெள்ளை துண்டும் அணிந்திருந்தார் தோலில் ஒரு பை மாட்டிக் கொண்டிருந்தார், காலில் மிதியடி இல்லை. நெற்றியில் மட்டும் விபூதி தரித்திருந்தார். கழுத்தில் ஒரே ருத்ராட்சம் மட்டும் இருந்தது.

அவர் என்னிடம் பேச்சுக் கொடுத்து தெலுங்கில் உரையாடினார். தான் "ஸ்ரீ சைலத்தில் " இருந்து வருவதாகவும், இப்போது "வேப்பனஹள்ளி" என்ற ஊருக்கு செல்லுவதாகவும் கூறினார். பிறகு தான் கொண்டு வந்த மூட்டையிலிருந்து 2 மாங்காய்கள் என்னிடம் கொடுத்து விட்டு விடை பெற்று சென்று விட்டார். பிறகு நானும் இருசக்கர வாகனம் நின்ற இடத்திற்கு வந்த போது, அந்த தச்சர் “இந்த வாகனம் பழுது பார்க்க முடியவில்லை.இதை பட்டறைக்குதான் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி சாலையில் வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தார் சுமார் அரை மணி நேரங்கழித்து, அதே பெரியவர் ஒரு இரு சக்கர வாகனத்தின் ஏறி அங்கே வந்தார். வந்தவர் வண்டியை சிவாவிடம் கொடுத்து விட்டு, இந்த வண்டியில் நீங்கள். இருவரும் செல்லுங்கள் நான் பழுதடைந்த வண்டியை எடுத்துச் சென்று சரி செய்து மறுநாள் காலை நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கே வந்து கொடுத்து விட்டு எனது வண்டியை வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி, நாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விலாசத்தை அறிந்து கொண்டு சென்று விட்டார். எங்களுக்கு ஒரே அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது முன்பின் தெரியாத ஒருவர் சற்றுமுன் அறிமுகமாகி, இத்தகைய உதவி செய்வதற்கு இயலாத ஒன்று ஆயிற்றே இருந்தாலும் அடியேன் இது எம்பெருமானுடைய திருவருள் என்று உணர்ந்து, தச்சருக்கு கூறினேன். அதன் பின்னர் இருவரும் அவர் கொடுத்த வண்டியில் பயணித்து அந்த தச்சர் இல்லம் சென்று சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் 7.30 மணி அளவில் குப்பம் இரயில் நிலையத்திற்கு வந்து விட்டோம். அதன் பிறகு சிவாவை அனுப்பிவிட்டு நான் மட்டும் பெங்களுர் திரும்பி விட்டேன் .

மறுநாள் காலை அடியேன் வருவதற்கு முன்னரே, அந்த தச்சருடைய இரு சக்கர வண்டி சரி செய்யப்பட்டு, அதே பெரியவர் கொண்டு வந்து கல்லூரியின் நுழைவு வாயிலில் காத்து கொண்டிருந்தார். நானும் சிவாவும் 10-மணியளவில் வந்தோம். எங்களை பார்த்து வண்டி சரி செய்தாகி விட்டது எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார். எங்களுக்கு மிகவும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் போய் விட்டது.

பிறகு அவருக்கு மிக மிக நன்றி கூறி வணங்கி, பழரசமோ, தேநீரோ அருந்துங்கள் என்று கூறி பணம் பெற்று கொள்ளும்படி வேண்டினோம் அவர் எதுவுமே வேண்டாம் என்று சொல்லி சென்று விட்டார். போகும் போது என்னை பார்த்து புன்னகைத்து உன்னை மறுபடியும் சந்திக்கிறேன் என்று மட்டும் கூறினார். பின்னர் அவர் கொடுத்த 2- மாங்காய்களை வீட்டில் பழுக்க வைத்தேன் . பழுத்த பிறகு அதை இறைவனுக்கு நைவேதியம் செய்து சாப்பிட்ட போது அது மிக அதிகமான சுவையோடும் மணமோடும் இருந்தது.

அதன் பின்னர் ஒரு மூன்று மாதங்கள் கழித்து அதே ஊரில், அதே பெரியவர் மீண்டும் குப்பம் இரயில் நிலையதிற்கு அருகில் மாலை 5-மணி அளவில் அடியேன் எதிரே வந்து கொண்டிருந்தார் நானும் அவரை பார்த்து அவர் பாதங்களை வணங்கிய போது, அவரும் நான் கொடுத்த மாங்காய்கள் இரண்டும் பழுத்தனவா என்று கேட்டார். பிறகு புன்னகையோடு பார்த்தார்.

அடியேன் அவரை பார்த்து எங்கிருந்து வருகிறீர் என்று கேட்ட போது, அவர் "ஸ்ரீசைலத்தில்" இருந்து வருகிறேன். வேப்பனபள்ளிக்கு போய் கொண்டிருக்கிறேன் என்று கூறி மிதியடி இல்லாமல், அதே தோற்றத்தோடு சென்று விட்டார்.

மறுபடியும் ஒரு மூன்று மாதங்கள் கழித்து, அதே ஊரில், அதே பெரியவர், அதே சாலையில், மாலை நேரத்தில் குப்பம் இரயில் நிலையம் அருகில் எதிரே வந்த கொண்டிருந்தார். நான் அவரை பார்த்து அவர் பாதங்களை வணங்கி நலம் விசாரித்தேன். அவரும் அதே தோற்றத்தோடு அதே புன்னகையோடு, நான் "வேப்பன பள்ளியிலிருந்து" வருகிறேன். "ஸ்ரீசைவம்" போய் கொண்டிருக்கிறேன். 2 மாங்காய்கள் கொடுத்தேன் அது பழுத்ததா என்று மறுபடியும் அதே கேள்வியை கேட்டார். நானும் அதிசயித்து ஆம் பழுத்தது. சாப்பிட்டேன் மிக அதிகமாக சுவையும், மணமும் கொண்டதாக இருந்தது. அதற்கு அவர் எதுவும் , "ஆரம்பத்தில் சுவைக்கும் போக போக கசக்கும்" என்று சுட்சுமமாக கூறி விட்டு சென்று விட்டார். அவரை நான் ஸ்ரீசைலம் எப்படி செல்கிறீர்கள் என்று வினவிய போது, அவர் அளித்த பதில் என்னை மிகவும் அதிசயத்தில் ஆழ்த்தியது. அவர் வெறுங்காலாலே நடந்தே செல்வதாக கூறினார்.

அதன் பிறகு அடியேன் , இது என்ன ஆச்சிரியம், அந்த பெரியவர் அடிக்கடி தோன்றி, தாம் ஸ்ரீசைலம் செல்வதாகவும் வேப்பனபள்ளியில் இருந்து வருவதாகவும் கூறுகிறாரே ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கஸ்தலம் ஆனால் இந்த வேப்பனஹள்ளி எங்கு இருக்கிறது, அப்படி என்ன தான் அங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. அதுபற்றி விசாரித்த போது, அது தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக ஆந்திர எல்லை பகுதியில், இருப்பதாகவும் தெரிய வந்தது. அச்சிவஸ்தலம் பூமிக்கு அடியில் இருப்பதாகவும், சிறிய துவாரம் மூலம் ஒவ்வொரு வராகதான் உள்ளே சென்று தரிசிக்க முடியும், சுவாமி "அருள்மிகு விசுவநாதேச்சுரர்" அம்பாள் "அருள்மிகு விசாலாட்சி" என்பது தெரிய வந்தது அடியேனுக்கு மேலும் ஆவல் கூடவே, எப்படியாவது அங்கு சென்று வர வேண்டும் என்று எண்ணினேன் .

பிறகு ஒரு "சிவராத்திரி அன்று (27-2-2014) மஹாசிவராத்திரி மற்றும், பிரதோஷம் கூடிய சுபதினத்தில் அதே கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு அருகிலுள்ள மருதேரி என்ற கிராமத்தை சோர்ந்த தேவமுருகன் என்ற நண்பரை அழைத்து கொண்டு, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு அத்திருக்கோயிலை அடைந்தோம். அங்கு நேரில் சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது, அது ஒரு குகை கோயில் என்று உள்ளே பூமிக்கடியில் அருள்மிகு விசாலாட்சியுடனுறை ஸ்ரீ விசுவநாதேச்சுரரை இருவரும் தரிசித்தோம். சுவாமிக்கு பின்புறம் யாரோ ஒரு சித்தருடைய சமாதி தென்பட்டது, அதுபற்றி விசாரித்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சித்தர் அங்கு வந்து தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூசித்து வந்துள்ளதாக தெரிந்தது.

அதன் பிறகு இருவரும் கிருஷ்ணகிரி போருந்துநிலையம் வந்து விட்டோம், தேவமுருகன் அவர் ஊருக்கு சென்று விட்டார், அடியேன் பெங்களுர் திரும்பினேன். அன்று இரவு அடியேன் கனவில் முன்பு குப்பத்தில் அடிக்கடி தோன்றிய அதே பெரியவர், அதே தோற்றத்தோடு தோன்றி ஆசீர்வதித்து அன்று பகலில் தரிசித்த "விசுவநாதேச்சுரர்" பெருமான் மேலே பாமாலை சூட்டும்படி அருள் செய்தார். அதன்படி மறுநாள் (28.2.2014) வெள்ளிக்கிழமை இரவு 2-30 மணிக்கு மேல் "விசுவநாதர் மாலை" என்ற பதிகத்தில் 11-பாக்களும் ஒரே இரவில் அருளப்பட்டது. "தொண்டு செய்வார்கள் தம் " என்று ஆரம்பித்து, "காலத்தால் செழிப்புடைய" என்ற பல சுருதி பாடல் வரை 11 - பாக்களுக்கு அடியேன் உரையும் எழுதி, பதிகத்தை பாடி மகிழ்ந்தேன். இதனால் அடியேன் அறிந்தது, முன்பு அடியேன் கல்லூரியில் வேலைபார்த்து கொண்டிருந்த போது வந்து உதவி செய்த பெரியவர் மற்றும் அடிக்கடி குப்பம் சாலையில் தோன்றிய பெரியவரும் அடிக்கடி வேப்பனபள்ளி செல்வதாக கூறிய பெரியவரும், கனவில் தோன்றிய பெரியவரும், சமாதி அடைந்த பெரியவரும் ஒருவரே ஆகும். அந்த "விசுவநாத பெருமான் " தம்மேல் பாடல் புனைய வேண்டும் என்று, அப்பெரியவர் மூலம் திருவருள் செய்துள்ளார் என்று தான் நினைக்க வேண்டும்.

ஆன்மீக அனுபவம்(7)

பிறகு சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அதே ஆவலநத்தம் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கும், அருள்மிகு விசுவநாதேச்சுரர் பெருமானும் (7-3-2016) நானும், பாண்டு என்கின்ற பொன்னுரங்கம், மற்றும் மனோகர் என்பவர்களோடு தரிசிக்க சென்றிருந்தோம், அன்று மஹா சிவராத்ரி தினம் சிவபெருமானையும், அம்பாள் மற்றும் வலதுபுறமுள்ள முருகப்பெருமானையும் தரிசித்து விட்டு வீடு திரும்பினோம். அன்று இரவு அப்பெருமான் மேல் "சடையொடுயோர்" என்ற லிங்காட்சர மாலை அருள்ப்பட்டது. அதை (sivamurugumalai.blogspot.com) என்ற இணையதளத்தில் பார்க்கவும். ஆன்மீக அனுபவம்:- (7)

ஒரு முறை (25-12-2015) வெள்ளிக்கிழமை நடராஜர் அபிஷேகம், அன்று அடியேன் பிறந்த ஊராக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்ற ஊருக்கு சென்று அங்கே புதுகாமூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரியநாயகியுடனுறையும் திரு புத்ரகாமேச்சுர பெருமானை தரிசித்து விட்டு, அன்று இரவு அங்கேயே தங்கி இருந்தேன். சுமார் 2.30 மணி அளவில் விடியும் தருணத்தில் அந்த புத்ரகாமேச்சுரர் திருவருளால் "தார்பொழி சீர்" லிங்காட்சர மாலை முதன் முதலாக அருளப்பட்டது.

அதன் பிறகு அதே (21-1-2016) வியாழ்க்கிழமை பிரதோஷம் அன்று இரவு 2.00 மணிக்குமேல், அதே புத்ரகாமேச்சுரர் மேல் "கருவினுளுங் கானுமுயிரனைத்தினுளுங்" என்கின்ற "புத்ரகாமேச்சுரர் மாலை" என்ற பதிகத்தின் முதற் பாடல் ஆரம்பமாகி "கொடிதானயாலமதை" என்ற பல சுருதி பாடலோடு மொத்தம் 11-பாக்கள் அப்பெருமான் திருவருளால் அருளப்பட்டது. அதன் பிறகு அப்பதிகத்தை பண்ணமைத்து பாடி மகிழ்ந்தேன். இப்பதிகம் பொங்களூரில் இருக்கு போது அருளப்பட்டது அதேப்போல் "லிங்காட்சர மாலையும் " இங்குதான் ஆரம்பமானது இவை அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆன்மீக அனுபவம்(8)

அதன் பிறகு (21-6-2017) புதன்கிழமை பிரதோஷம், கிருத்திகை, வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பொன்னை என்று ஊருக்கும், வள்ளிமலை என்ற ஊருக்கும் நடுவிலுள்ள "ஈசன்மலை" என்கின்ற சிவதலத்திற்கு, பெங்களூரிலுள்ள பாண்டு என்கின்ற பொன்னுரங்கம், மற்றும் மனோகர் என்பரோடு சேர்த்து தரிசிப்பதற்காக சென்றிருந்தேன்.

நாங்கள் இரவு சுமார் 9-மணிக்கு புறப்பட்டு விடியற்காலை 4-30 மணி அளவில் ஈசன் மாலை சென்று அடைந்தோம், அங்கு எங்களுக்கு அறிமுகமாகி, எங்களோடு பேசி விசாரித்து விட்டு எங்களுக்குகாக வேண்டி வெந்நீர் வைத்து குளிப்பதற்காக கொடுத்தார். பிறகு குளித்து விட்டு, முதன் முதலாக சுப்பிரமணிய பெருமான் திருக்கோயிலுக்கு சென்று, அங்கே எழுந்தருளி இருக்கும் "சங்கடஹர விநாயக " பெருமானை தரிசித்து “கைதல நிறைகனி" என்ற திருப்புகழை பாடியபின் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய பெருமானை தரிசித்து, "கைதலநிறைகனி" என்ற திருப்புகழை பாடிய பின் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பரமணிய பெருமானை தரிசித்து, முத்தைத்தரு, திமிரவுததி, சிவனார்மனங்குளிர நிலையா பொருளை, ஈனமிகுத்துளபிறவி போன்ற திருப்புகழை பாடிய மகிழ்ந்தேன். விடிந்த பிறகு மலை மேலே எழுந்தருளி இருக்கும் "சிவகிரிநாதேச்சுரர்" பெருமானை சென்று தரிசித்தும் சிவகிரி தீர்த்தம், சரவண பொய்கை ஆகிய தீர்த்தங்களை தரிசித்தும் அன்று இரவு அங்கே தங்கினேன். அன்று இரவு 2.30 மணியளவில், அந்த "சிவகிரிநாதேச்சுரர்" மேல் "அவனிலோர் என்ற லிங்காட்சிர மாலைக்குரிய செய்யுளை அப்பெருமான் திருவருளால் அருளப்பட்டது. அதன் பிறகு (9-7-2017) முதல் ஒவ்வொரு பௌர்ணமியும் (19-4 2019)வரை 23- பௌர்ணமி ஈசனை தரிசிக்க ஈசன் மலைக்கு சென்று வந்நேன். அச்சமயம் இரவில், ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இரவில் 2- மணிக்குமேல், "சிவகிரி சிங்கார வேலன் மாலை (108) சிவகிரி நாதேச்சுரர் மாலை (11) ஆகிய பாக்கள் சிவகிரி நாதேச்சுரர் திருவருளாலும், ஸ்ரீ முருகப்பெருமான் திருவருளாலும் இரண்டு குருமார்களின் திருவருளாலும் அருளப்பட்டது.

இவ்வாறாக ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சென்று வரும்போது, அருண் என்பவரும், ஜெயகுமார் (மின்பொறியாளர்) ஆகிய இருவரும், ஈசன் மலையில் அறிமுகம் ஆனார்கள். அங்கே அடியேன் பாடுகின்ற திருப்புகழ், தேவாரம், அலங்காரம், திருவாசகம் ஆகியவைகளை கேட்டு, அவர்களில் ஒருவராகிய அருண் என்பவர் தாம் ஒரு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கட்டி இருப்பதாதவும் நீங்கள் சிவன் விநாயகர் முருகன் மேல் மட்டும் பாடுகிறீர்கள், ஏன் அம்பாள் மேல் எந்த பாடவில்லை என்று வினவினார். அடியேன் வணங்கும் "அங்களாபரமேஸ்வரி" மேல் பாடல் புனைந்து பாடும்படி கோரினார். அதற்கு அடியேன் அவரிடம், ஜயா இது எல்லாம் அந்த சிவபெருமான் திருவருளாலும், ஸ்ரீ முருகப் பெருமான் திருவருளாலும் நடக்க கூடியவை. இறைவனுடைய சித்தம் அதுவாக இருந்தால், இந்த அம்பாளே திருவருள் புரிவாள் என்று கூறினேன். அவரும் மாலை 5.00 மணி அளவில் விடைபெற்று சென்றார்.

அதன் பிறகு வந்த கார்த்திகை மாதம், பௌர்ணமி (03.12.2017) அன்று இரவு 2-மணிக்கு மேல், அதே ஈசன் மலையில் "அங்களாம்மன் அந்தாதி" "பூரண கும்பத்தில் பொலிவுற்றிடும் பவானியை" என்ற செய்யுள் ஆரம்பமாகி (02.01.2018) செவ்வாய்கிழமை பௌர்ணமி அன்று, "பொங்கரவு சூடும் புற்று கோயில்" என்ற 100-வது செய்யுளோடு அந்த அம்பாள் திருவருளால் ஒரே மாதத்திற்குள் தினமும் 4(அ) 5 பாடல்கள் வீதம் அருளப்பட்டது. இதையும் இணையத்தில் பார்க்கலாம்.

ஆன்மீக அனுபவம் (9)

அதன் பிறகு (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை வள்ளி மலைக்கு செல்ல நேர்ந்தது, அங்கு "கண்ணகி அம்மாள்" எனும் வள்ளிமலை முருகனுக்கு பல தெண்டுகள் செய்தவர் அங்கே இருப்பதாக கேள்வியுற்று அவரை தரிசிப்பதற்காக சென்று இருந்தேன். அவரை தரிசித்துவிட்டு, மாலை 5 மணியளவில் புறப்பட்டு ஈசன் மலைக்கு வந்து விட்டேன். அன்று இரவு ஈசன் மலையில் தங்கி இருந்தபோது அங்கே மலைமேல் "சரவண பொய்கைக்கு " அருகில் சமாதி நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவரான "ஸ்ரீ காளப்ப சுவாமிகள் " என்ற சித்தர், இரவு 2-மணிக்கும் மேல் அடியே கனவில் தோன்றி, அங்கே முருகனுடைய சந்நிதிக்கு எதிராக உள்ள ஒரு குன்றின் மேல் உட்கார்ந்து கொண்டு, அடியேனை பார்த்து,

 "ஆலமுண்டோன் சித்தருள் அடியேன் காளப்பனும்
ஞாலம் புகழ் ஈசன் மலையில் நற்றொண்டுகளாற்றி
மூலமாம் யோக நிட்டையில் மூழ்கி மாறிடுங்
காலத்தின் வழியே கலந்து நிலை பெற்றேனே"


என்று கூறி புன்னகைத்தார், பிறகு அடியேன் அவர் திருப்பாதங்களை வணங்கி அவர் கொடுத்த திருநீற்றை வாங்கி கொண்டேன். பிறகு அவரும் மறைந்து விட்டார். உடனே, அப்போதே அவர் கூறிய செய்யுளை எழுதி வைத்தேன். இதுவும் ஈசனுடைய திருவருளால் தான் நடந்தது என்று நினைத்து சிவகிரிநாதரையும், ஸ்ரீ முருகப் பெருமானையும், குருமார்களையும் வணங்கினேன்.

ஆன்மீக அனுபவம் (10)

அதன்பின் ஒரு முறை ஜெயகுமார் என்பவர் தம்முடைய ஊர் ஆரணிக்கு அருகிலுள்ள தேவிகாபுரம் என்றும், அங்கு எழுந்தருளி இருக்கும் அருள்மிகு பெரியநாயகியுடனுறை திருகனக்கிரீச்சுரர் திருக்கோயிலுக்கு வரும்படி அழைத்தார். அதன்படி (27.07.2018) வெள்ளிக்கிழமை, பௌர்ணமி சந்திர கிரஹணம் அன்று மறுநாள் காலை ஜெயகுமாரும் நானும் தேவிகாபுரம் செல்வதற்கு புறப்பட்டோம். பௌர்ணமி முதல் நாளே அடியேன் ஈசன் மலைக்கு வந்து விட்டேன். சந்திர கிரஹணம் முடிந்தபிறகு காலை குளித்து இருவரும் 7-மணி அளவில் பேருந்தில் பயணமானோம். காலை 10 1௦-1/2 மணி அளவில் தேவிகாபுரம் சென்று விட்டோம். கீழே பெரியநாயகி அம்மன் சந்திதியை தரிசித்து விட்டு மலை மேலே எழுந்தருளி இருக்கும் "திரு கனக்கிரீச்சுரரை" 11-1/2 மணியளவில் தரிசிக்க படியேறி சென்றோம். மேலே இராஜகோபுர நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்தது. திருக்கோயில் பிராகாரம் முழுவதும் சந்திர கிரஹணத்தின் காரணமாக தண்ணீரால் கழுவி சுத்தம் செய்திருந்தார்கள்.

அங்கே வேறுயாரும் தென்படவில்லை. பிறகு ஒரு முதியவர் மேலே வந்தார். அவரிடம் விசாரித்த போது, நேற்று இரவு சந்திரகிரஹணம், ஆதலால் அர்ச்சகர் சூரிய உதயத்திற்கு முன்னரே வந்து சூரியன் உதித்தவுடன், சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்துவிட்டு 9-மணிக்கே நடை சாத்திவிட்டு சென்றுவிட்டார் என்று கூறினார். அவரும் கீழே இறங்கி சென்று விட்டார். பிறகு நானும் செல்லலாம் என்று கூறிய போது ஜெயகுமார் அவர்கள், ஐயா வந்துவிட்டோம். இறைவனை தரிசிக்க முடியாவிட்டாலும், நுழைவு வாயில் முன் அமர்ந்து தேவாரமாவது பாடி விட்டு செல்லலாமே என்று கூறினார். நாங்கள் இருவரும் அங்கே அமர்ந்து “பண்ணினேர் மொழியாள்” என்று திருநாவுக்கரசர் தேவாரமும் "பொன்னார் மேனியனே" என்ற சுந்திரமூர்த்தி சுவாமிகள் தேவராமும், "இடரினும் தளரினும் " என்ற திருஞானசம்பந்தர் தேவாரமும், மாணிக்கவாசகரின் சிவபுராணமும் பாடி விட்டு புறப்பட்டோம். பிறகு ஜெயகுமார் அவர்கள் திருக்கோயிலில் வேலை செய்பவர்

ஒருவரை விசாரித்த போது (அலைபேசி மூலம்) அர்ச்சகர் காலையிலேயே அபிஷேகம் முடித்துவிட்டு அவர் 10-மணியளவில் காஞ்சிபுரம் சென்றுள்ளதாகவும், எப்போது வருவார் என்பது தெரியாது என்று கூறினார். பிறகு புறப்படும் நேரத்தில் சுமார் 12-1/2 மணி இருக்கும், அங்கு ஒரு இளம்வயது அர்ச்சகர் வந்து திருக்கோயிலை திறந்து உள்ளே சென்று, இங்கே வந்து பாடுங்கள் என்று கருவறை அருகே அழைத்தார். நாங்கள் இருவரும் உள்ளே சென்று "காதலாகி கசிந்து" என்று திருஞானசம்பந்தர் தேவாரமும், "சொற்றிளை வேதியன்" என்ற திருநாவுக்கரசர் தேவாரமும், "நெய்யும் பாலும்" என்ற சுந்தார் தேவாரமும் பாடினேன். புாடிகொண்டிருக்கும் போது வந்த அந்த இளம் வயது அர்ச்கர் சுவாமிக்கு அலங்காரங்களை களைந்து, வெந்நீரால் அபிஷேகம் செய்து திருநீற்று காப்பு சாத்தி, தீபாராதனை செய்து எங்களுக்கு காட்டினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்து ஈசன் நம்மை கைவிட வில்லை, தரிசனம் தந்து விட்டார் என்று கூறி, பிராகாரம் சுற்றி வரலாம் என்று சென்றோம் சுற்றி விட்டு வந்து பார்க்கும் போது, அந்த இளம் வயது அர்ச்சகர் காணவில்லை. சரியாக பார்த்த போது எங்கும் தென்படவில்லை நடைசாத்தப்பட்டு இருந்தது பிறகு கீழே இறங்கி பெரியநாயகி அம்மன் சந்நிதியில் வந்து விசாரித்த போது அத்திருக்கோயிலின் அர்ச்சகர் ஒரு முதியவர் என்றும் அவர் காலை 9 மணிக்கே அபிஷேகம் முடித்து நடைசாத்தி விட்டு சென்று விட்டார். மறுபடியும் மாலை 4-00 மணிக்கு தான் நடை திறப்பார்கள். இதற்கு நடுவில் எக்காரணம் கொண்டு நடை திறக்கப்படமாட்டது என்று கூறினர். எங்களுக்கு ஒரே ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் போய் விட்டது. பிறகு அங்கு ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டு , ஈசனின் திருவருளை வியந்தபடியே ஈசன் மலைக்கு திரும்பி விட்டோம். அடியேன் மட்டும் இது ஈசனின் திருவருளை வந்த இளம் வயது அர்ச்சகர் ஈசனே என்று உணர்ந்தேன். அதுமட்டும் அல்ல, கருவறைக்கு அழைத்து தேவாரம் பாடச் சொன்னார் மூடிய வாசலில் “பண்ணினேர் மொழியாள்” என்ற தேவாரம் பாடிய பிறகு தானே அந்த அர்ச்சகர் வந்து நடை திறந்து உள்ளே அழைத்தார். இதை எல்லாம் பார்க்கும்போது, வந்தது ஈசனே என்று உணர்ந்து மெய் சிலிர்த்து விட்டேன்.

ஆன்மீக அனுபவம் (11)

அதன் பிறகு பெங்களுரில், (30-07-2018) திங்கள்கிழமை பாண்டு என்கின்ற பொன்னுரங்கம் ஈசன் மலையில் சிவகிரிநாதர் திருமேனி சிறியதாக இருக்கிறது என்றும், பெரியதிருவுருமாக செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று அடியேனிடம் கூறினார். நானும் பார்க்கலாம் ஈசன் அருளால் அத்தகைய ஒருவர் கிடைப்பார் என்று கூறினேன். இப்படி கூறிய பிறகு அன்று மாலையே அடியேன் வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தேன். சுமார் 6 மணியளவில் 238- எண்ணுள்ள பேருந்து வந்து நின்றது அதிலிருந்து ஒருவர் இறங்கி அடியேனுக்கு நேராக வந்து, வணக்கம் ஐயா என்ன இங்கே நின்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று விசாரித்தார் அடியேன் வந்தவரை உற்று பார்த்தேன்.

அவர் யார் என்று அடியேனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆதை பார்த்து வந்தவர் தான் பல ஆண்டுகளுக்கு முன்னால், பெங்களுரில் (Doudle Road) உள்ள இடத்தில் சிறு தொழிற்சாலை ஒன்று நடத்தி வந்ததாகவும், அப்போது நான் அவரிடம் அத்தொழிற்சாலையில் மாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வேலை செய்ததாகவும், தன்னுடைய பெயர் பழநி என்று கூறினார்.

பிறகு அடியேனுக்கு ஞாபகம் வந்து, அவரை பார்த்து ஏனப்பா நீ செய்தது சரிதானா? 2003-ல் உன்னிடம் மூன்று மாதமாக வேலை செய்தேனே. அதற்குரிய ஊதியத்தை கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டாயே என்று கேட்டேன். அதற்கு இல்லை நான் அவ்வாறு செய்யவேண்டும் என்று எண்ணியது இல்லை. அச்சமயம் சூழ்நிலை அவ்வாறு அமைந்து விட்டது. இப்போது கொடுத்து விடுகிறேன் என்று கூறி வாருங்கள் தேநீர் அருந்தலாம் என்று அழைத்து கொண்டு போனார். பிறகு தேநீர் அருந்திவிட்டு இன்று திங்கள் கிழமை, காலை மறுநாள் புதன்கிழமை கொடுத்துவிடுகிறேன் என்று கூறி ஒரு அலை பேசி எண்ணை கொடுத்து விட்டு சென்றார். பிறகு நான் மறுபடியும் அந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு, இந்த பணம் வந்தால், ஈசன் மலைக்கு சிவலிங்கம் செய்து கொடுத்து விடலாம் என்று எண்ணி, ஈசனை வேண்டிக்கொண்டேன். பிறகு வீடு திரும்பி விட்டேன்.

அடியேன் 2003-ல் என்னுடைய 2 பெண் குழந்தைகளுக்குரிய கல்லூரி படிப்புசெலவிற்காக பணம் பற்றாகுறை ஏற்பட்டது. இச்சமயம் பெங்களூர் காமாட்சி பாளையம் என்று இடத்தில் ஒரு தொழிற்சாலையில் தினமும் காலை 6.00 மணி

முதல் மதியம் 2.30 மணி வரை மிதிவண்டி மூலம் சென்று வேலை பார்த்து வந்தேன். மாத வருமானம் ரூ.6,000/- மட்டும் தான் அது குழந்தைகளின் படிப்புக்கும், குடும்ப செலவுக்கும் போதவில்லை ஏன் நாம் மதியம் 3.00 மணிக்கு மேல் வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்க கூடாது என்று யோசித்து, அதன்படி பெங்களூர் சாந்தி நகரிலுள்ள பழநி என்பவரின் தொழிற்சாலைக்கு , மாலை 4.00 மணி முதல் இரசு 11.00 மணி வரை வேலை பார்த்து வந்தேன் . மிதிவண்டி மூலம்தான் பொய் வந்து கொண்டு இருந்தேன் இது நடந்தது (15.03.2003-ல்) மாதம் ரூ.8,000/- தருவதாக கூறிய முதலாளி பழநி முதன் மாதம் 15-தேதி முடிந்த பிறகும் தரவில்லை . கேட்டதற்கு அடுத்த மாதம் சேர்த்து தருவதாக கூறினார். பிறகு 2-வது மாதமும் 2 தேதி ஆயிற்று கொடுக்கவில்லை. வர வேண்டிய பணம் வரவில்லை என்று கூறி அனுப்பி வைத்தார், மறுநாள் எப்போதும் போல் மாலை 4.00 மணிக்கு வேலைக்கு சென்ற போது, அங்கே என்னை திகைக்க வைத்தது, அந்த தொழிற்சாலை காலி செய்யப்பட்டு இருந்தது. அங்கு இருந்த இயந்திரங்கள் ஒன்று கூட இல்லை. எல்லாம் எடுத்து சென்று விட்டு இருந்தார். அக்கம் பக்கம் விசாரித்த போது, அவர்கள் தெரியவில்லை இரவோடு இரவாக காலி செய்திருக்கலாம் என்றனர். நானும் செய்வது அறியாமல் வீடு திரும்பினேன். பிறகு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோதும், அவரைபற்றி எத்த தகவலும் இல்லை என்ற சென்றவர் தான் மறுபடியும் இப்போது தானாகவே தேடி வந்து உங்களுடைய பணத்தை ரூ.24,000/- கொடுத்து விடுகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

அவர் கூறியபடியே புதன்கிழமையும் வந்தது. அவர் மட்டும் வரவில்லை ,இரவு வரை பார்த்தேன், பின் அலைபேசியில் தொடர்புகொண்ட போது, அவர் பதில் அளிக்கவில்லை. மறுநாள் வியாழக்கிழமை காலை பெங்களூர் ஹவுசிங்போர்டுக்கு அருகில் உள்ள பேருந்து நிலைத்திற்கு 7.00 மணிக்கு வரும்படி அன்று இரவு தொலைபேசியில் தெரிவித்தார். நானும் அதன் படியே வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அங்கு சென்றேன் அவரை காணவில்லை. நான் அங்கேயே காத்து கொண்டு இருந்தேன். நான் நம்பிக்கை இழந்து விட்ட சூழ்நிலையில், சரியாக 8.00 மணிக்கு அவர் அங்கே வந்து சேர்ந்தார், மன்னிக்கவும் தாமதமாகிவிட்டது என்று கூறி ரூ.24,000/-மும் அங்கேயே கொடுத்து விட்டார். பிறகு சிற்றுண்டிக்கு அழைத்து சென்று சாப்பிடச் செய்தார். பிறகு விடை பெற்று சென்றார். ஈசனை நான் வேண்டி கொண்டபடியே அந்த பணம் கிடைக்கப்பெற்றதால் அது சிவகிரி நாதருக்குரிய பணம் என்றும் மேற்கொண்டு அத்திருப்பணிக்குழு வேண்டி விசாரிக்கலானேன்.

அதன்படியே பாண்டு என்கின்ற பொன்னுரங்கம் மூலம் கன்னியாகுமாரிக்கு அருகிலுள்ள மைலாடி என்று ஊரில் ஸ்தபதி சரவணன் என்பவரிடம் பேசி சிவலிங்கமும், நந்தியும் உருவாக்கு ரூ.4,500/- பேசி 06.01.2018-ல் முன் பணம் ரூ.10,000/- நானும் பொன்னுரங்கமும் நேரில் சென்று கொடுத்தோம். பிறகு 1- மாதங் கழித்து ரூ.35,000/- 15.02.2018-ல் அடியேன் மட்டும் நேரில் சென்று கொடுத்தேன். இத்திருப்பணியில், பழநிசாமி எனும் சிவனடியார் ரூ.500/- கொடுத்துள்ளார். சிவலிங்கமும், நந்தியும் முடிவடைந்து 4-வருட காலமாக ஈசன் மலையில் பிரிதிஷ்டை செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. திருக்கோயில் நிர்வாகம் விரைவாக செய்து விடுகிறோம் என்று கூறி வருகிறார்கள். இவ்வாறாக ஈசன் அருளால் வராது என்று நினைத்த பணம், ரூ.24,000/- 14 ஆண்டுகள் கழித்து வந்தது, இதை நினைக்கும் போது ஈசன் என்றுமே உழைத்தற்கு ஊதியம் தராமல் இருக்கமாட்டான் என்பது திடமாக புலனாகிறது.

ஆன்மீக அனுபவம் (12)

சுமார் 4- வருடங்கள் கழித்து, (18.03.2022) பிலவ ஸ்ரீ பங்குனி மாதம், 4-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை "பங்குனி உத்திர திருநாளன்று, கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹனுமந்த நகரிலுள்ள பொன் மலை என்ற திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு திரு குமாரஸ்வாமி தரிசிப்பதற்காக சுமார் 10-மணியளவில் அடியேன் சென்றிருந்தேன். கீழே அடிவாரத்திலுள்ள பஞ்சமுக விநாயக பெருமானை தரிசித்து வணங்கி விட்டு, மேலே சென்று முருகனை கண்டு வணங்கி விட்டு கீழே இறங்கி வரும் போது, வெய்யில் அதிகமாக இருப்பதால், இராஜ கோபுரத்திற்கு இடது பக்கத்திலுள்ள பூங்காவில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

அப்போது அங்கே (50-வயது மதிக்கதக்க) ஒருவர் கையில் ஒரு பிரசாத பையுடன் வந்து என் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினார். ஆவரை பார்த்தால், நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம், அணிந்து கழுத்தில் "ருத்ராட்ஷமும்" தரித்து இருந்தார். அவர் சற்று நேரம் அந்த மலையில் நடக்கும் திருவிழாக்களைப் பற்றி பேசி விட்டு, பின் தமது உறவினர், ஒருவர் மேலே சன்னதியில் இருப்பதாகவும், அவர் தன்னை தேடிக் கொண்டு வேறு பக்கம் போய் விடாதிருக்க அவரை அழைத்து வந்து விடுகிறேன். அதுவரை இந்த பிரசாத பை தாங்கள் வைத்து இருங்கள் என்று என்னிடம் கொடுத்து விட்டுச்சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. நான் மறுபடியும் திருக்கோயிலுள்ளே சென்று தேடிப்பார்த்தேன். அவர் எங்கும் தென்படவில்லை. மீண்டும் அதே பூங்காவில் அதே

இடத்தில் வந்து சுமார் 1-மணி நேரம் வரை அமர்ந்து இருந்தேன். அவர் வரவே இல்லை. அதன் பிறகு அந்த பிரசாத பையில் என்ன இருக்கிறது என்று பார்த்த போது, அதில் அரைமுடி தேங்காய் சாமந்திபூ, 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு விபூதி பொட்டலம் சிறியது, ஒரு எழுதிய காகிதம் மடித்து வைத்தது ஆகியவை இருந்தன. அடியேன் அந்த காகிதத்தை பிரித்து படித்து போது அதில் "குமரகிரி திருப்புகழ்" என்று எழுத பட்டு இருந்தது. அடியேன் மிகவும் அதிசயமும் ஆச்சரியமும் பட்டு அவற்றை வீட்டுக்கு எழுத்துச் சென்று பூசை அறையில் வைத்து, (முருகன் திருப்பாதங்களில்) வைத்து வணங்கி பாடினேன். திரு. முருகப் பெருமானுடைய திருவருளை என்னவென்று போற்றி புகழ்வது தெரியவில்லை.















குருநாதர் - திருப்புகழ் செம்மல் - துரைசாமி நாயனார் சுவாமிகள் வரலாற்று சுருக்கம்.



ஓம் சிவசற்குரு நாதர் துணை.
விநாயகர் காப்பு 
நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்துருக
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர் 
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே. 
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய். 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

எல்லாம் வல்ல திரு மயிலாசல முருகப் பெருமானை சற்குருவாகவும், அவனது கருணா கடாட்சமதை பரிபூரணமாக பெற்றவரும் திருப்புகழை அதற்குறிய சந்தமோடும், தாள வகையோடும் இசையோடும் கற்று தெளிந்த திருப்புகழ் செம்மலாகவும், இசை ஞானமிக்கவரும், சோதிட சிகாமணியாகவும் அடியேனுக்கு குருநாதராகவும் திகழ்ந்த மேன்மைமிகு, திருவருட்செல்வர் ஆலகிராமம் அ. துறைசாமி நாயனார் அவர்களின் திருத்தொண்டின் திறத்தையும் அவர் ஆற்றிய சிவபணிகளின் செயல்களையும், அவருடைய மாணாக்கர்களில் ஒருவனாகிய ஆரணி அடியார்க்கடியவன் என்கின்ற சா. குப்புசாமியாகிய இச் சிறியேன் எடுத்து இயம்ப கடமை பட்டவனாக இருக்கிறேன்.

உயர்திரு குருநாதர் அவர்கள், தமிழகத்தில் திண்டிவனம் தாலுக்கா மயிலம் அடுத்துள்ள ஆலகிராமம் என்ற சிறிய கிராமத்தில், திரு.அண்ணாமலை நாயனார், முனியம்மாள் தம்பதியருக்கு 1927-ல் முத்த மகனாக பிறந்து, சிறு வயது முதலே மயிலம் முருகப் பெருமான் மீது அதீத பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் அவர் கல்வி கற்பதற்கு மயிலம் வர வேண்டி இருந்தது. நடந்தே சென்றுதான் 6-ஆம் வகுப்பு வரை  கல்வி கற்றுள்ளார். அவர் தினமும் பள்ளிக்கு செல்வதற்கு முன் நேராக மயிலம் திருக்கோயில் திருப்படியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டுதான் பள்ளிக்கு செல்வார்கள்.

பள்ளிக்கு செல்வார். இவ்வாறாக இருக்கும்போது, குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சிலநாள் சென்றபின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மற்றொரு உறவினர் மூலமாக, மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்ட மினர்வா மில்ஸ் (Minerva Mills Ltd) என்ற நிறுவனத்தில் 1952-ல் வேலைக்கு சேர்ந்து நிரந்தர பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

அவர் 5-ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தையாரிடம் ஜோதிடமும், திருப்புகழ், தேவாரம் பயின்றுள்ளார். அப்போதே அவர் திருப்புகழில் மிகவும் ஆர்வமுள்ளவராக திகழ்ந்தார். அதை பார்த்த தந்தையார் அவருக்கு பல திருப்புகழ் பாக்களை பயிற்றுவித்துள்ளார். இவ்வாறாக அவர் பெங்களூர் வந்த பிறகும் திருபுகழையும் தேவாரத்தையும் தொடர்ந்து பயின்று கொண்டே இருந்தார். அவர் மிகவும் விரும்பி பாடும் திருபுகழ் மயிலம் திருப்புகழாகிய "கொலை கொண்ட போர்விழி" இந்த திருப்புகழ்தான் அவரை திருப்புகழ் மேல் அபார பற்றை ஏற்படுத்தியுள்ளது. அது தவிர, கந்த புராணம்,சிவபுராணம், பெரிய புராணம் திருவிளையாடல் புராணம், தேவாரம், திருவாசகம். கந்தர் அநூபூதி. கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, போன்ற நூல்களையும் கற்றுள்ளார். ஆதன் பிறகு பெங்களூரில் 1955-ல் சுப்புலக்ஷ்மி என்று பெண்மணியாரை திருமணம் செய்து இல்லறத்தில் எடுபட்டுள்ளர்.

இவர்களுக்கு சிறது காலம் சென்ற பிறகு 1958-ல் முதல் குழந்தை பிறந்து 3-வது நாளே இறந்து விட்டது. அதன்பிறகு 1961-ல் இரண்டாவது குழந்தை பிறந்து அதுவும் 1 - வாரத்தில் இறந்து விட்டது.
அதன் பிறகு அவரது துணைவியார் நோய் வாய்ப்பட்டு மிகவும் நலிந்து விட்டார். அச்சமயம் அவரது துணைவியாருக்கு வேரொருவர் உதவியில்லாது, இவரே எல்லா வீட்டு பணிகளை செய்து கொண்டும் வேலைக்கும் போய் கொண்டும் 3-ஆண்டுகள் வரை படாத கஷ்டப்பட்டுள்ளார்.

3
அச்சமயம் சிறிதும் மனங் கோணாமல் திருப்புகழை தவறாது பாடி வந்துள்ளார். அவருடைய விடா முயற்சி, திருப்புகழ் மேல் அவர் வைத்துள்ள பற்று, அவரது துணைவியாரை குணமாக்கி  வாழ வைத்துள்ளது. அதன் பிறகு தமக்கு குழந்தைப்பேறு இறைவனால்
அளிக்க படவில்லை என்று உணர்ந்து தெளிந்து, தமது இல்லத்தையே ஒரு கோயிலாக மாற்றி தீவிர சிவத் தொண்டிலும், திருப்புகழ் பாராயணத்திலும் முழுமையாக ஈடுபட்டு வந்தார். ஒவ்வொரு நாளும் ஆத்ம பூசை என்று ஒன்றை கடைபிடித்து
-அதை தினமும் தவறாது முடிக்காமல் எங்கும் செல்லமாட்டார். அவர் தினமும் பாராயணஞ் செய்யகூடிய ஆத்ம பூசையில் இடம் பெறகூடிய துதிப்பாக்கள் பின்வருமாறு:-

(1) நெஞ்சக்கனகல்லு
ஆடும் பரிவேல்
உருவாய் அருவாய்
ஆதரமிலேன்
எந்தாயு எனக்கு
தூசா மணியும்

    (கந்தர் அநூபூதி பாடல்களில் எதாவது ஒன்று.)

(2)

நாள் என்செயும்
விழிக்கு துணை
ஆவிக்கு மோசம்
காவி கமல கழலுடன்
கொள்ளி தலையில்
மைவருங் கண்டத்தர்

      (கந்தர் அலங்காரம் பாடல்களில் ஏதாவது ஒன்று.)

(3) சஷ்டிகவசம் - திருச்செந்தூர்
(4) சிவபுராணம் - திருவாசகம்

(5) தேவாரம்   

வேயுறு தோளி பங்கன்
மறையுடையாய்
அவ்வினைக்கு இவ்வினை 
மண்ணில் நல்ல வண்ணம்
   
     (திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களில் ஒன்று)
 .
(6) சொற்றுணை வேதியன் 
தலையே நீ வணங்காய் 
கற்றவர்கள் உண்ணுங்
    
     (திருநாவுகரசர் தேவாரப் பாடல்களில் ஒன்று)

(7) மீளாவடிமை 
பொன்னார் மேனியனே 
பொடியார் மேனியனே

       (சுந்தரர் தேவாரப் பாடல்களில் ஒன்று) 

(8) இருமலும் ரோக 
உனைத்தினம் 
திமிரவுததி.
விந்ததினூறி.
அகரமும் ஆகி.
செகமாயை யுற்ற
      
         (திருப்புகழ் பாடல்களில் ஏதாவது ஒன்று).

(9) பருத்தமுலை - வேல்வகுப்பு.


(10) தண்டையணி வெண்டையங் - திருப்புகழ்
திருவடியுந் தண்டையும் - கந்தர் அலங்காரம்.
ஆறிரு தடந்தோள் வாழ்க -  கந்த புராணம்.

இந்த 12- துதிப்பாக்களும் முடியும் வரை ஒரு தட்டில் விபூதியை பரப்பி ஆதில் அறுகோண சக்கரம் எழுதி அதில் கற்பூரம் ஏற்றி மேற்சொன்ன ஆத்ம பூசை முடியும் வரை பிரகாசிக்க செய்வார் குறைந்தது 45- நிமிடம் வரை இப்பூசையை செய்து முடிப்பார்.

இவ்வாறு திருத்தொண்டு செய்து வரும் நாளில், 1965-ல் அடியேனுக்கு எனது தந்தையார் மூலமாக அறிமுகமாகி 12 ஆண்டுகள் குருகுல வாசம் செய்து, அவருக்கு கொண்டு செய்து, திருப்புகழ், தேவாரம், திருவாசகம் கந்தர் அனுபூதி, ஜோதிடம் ஆகியவைகளை கற்று வந்தேன்.

அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் ஆடிகிருத்திகையில் திருத்தணிக்கு தேன் காவடி எடுத்து சென்று வருவார். யானும் 12 - வருடம் வரை அவரோடு சென்று வந்துள்ளேன்.
அதுவல்லாது ஒரு 3- வருடம் மயிலம் திருக்கோயிலில், பங்குனி உத்திர நாளில் அன்னதானம் செய்து வந்தார் அடியேனும் அதில் கலந்து கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு வருடமும் திருவாதிரை நடராஜர் அபிஷேகத்திற்கு சிதம்பரம் சென்று வருவார் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா,  பழநி பங்குனி உத்திர திருவிழா, திருச்செந்தூர் கந்தர் சஷ்டி விழா போன்ற திருவிழாக்களுக்கு சென்று வருவார்.
அடியேன் அவரோடு சென்று வருவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. காரணம் அடியேன் பள்ளியில் கல்வி பயின்று வந்ததால் அதை விடுத்து செல்ல முடிய வில்லை.
ஆடிகிருத்திகை அல்லாது மற்ற கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் பேங்களூர் ஹனுமந்தபுரம் குமாரசுவாமி கோயில், விஸ்வேஸ்புரத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், ஷேஷாதிபுரம் சுப்பிரமணியசுவாமி கோயில், அலசூர் ஆனந்தமுருகன் கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு சென்று திருப்புகழ் பாடி வருவார். அடியேனும் சென்று அவரோடு திருப்புகழ் பாடி வருவேன்.

மேலும் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியில் ஏதாவது ஓரு சிவன் கோயிலுக்கு சென்று வருவார் அடியேனும் உடன் சென்றுள்ளேன். மார்கழி மாதத்தில் திரு நடராஜபெருமான் திருவுருவ படம் தாங்கி திருவெம்பாவை, தேவாரம், திருப்புகழ் ஆகிய பாக்களை பாடியவாறும், கன்னடத்தில் புரந்தரதாசர் கீர்த்தனைகளை பாடிக் கொண்டும் வீதிவுலா வருவார். அச்சமயம் பல பக்தர்களோடு அடியேனும் இருந்து தொண்டு செய்துள்ளேன்.

இவ்வாறாக 1983- வரை திருத்தொண்டுகள் செய்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
பிறகு தமக்கு கிடைத்த ஓய்வூதியம் முழுவதும் எடுத்துக் கொண்டு, தமது துணைவியாரோடு தமிழகத்தில் திண்டிவளம் என்ற ஊரில், மரக்காணம் செல்லும் சாலையில், இந்திராநகர் என்ற இடத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரியுடன் உறையும் சுந்தர நடராஜ பெருமானுக்கு 
திருக்கோயில் கட்டி முடிந்து, அதில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், மஹா விஷ்ணு, பிரம்மா, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, துர்கை சனீஸ்வரர், சண்டிகேச்சுரர் ஆகிய பரிவார மூர்த்திகளை அமைத்து வழிபட்டு வந்தார்.
தமக்கு கிடைத்த ஓய்வூதியத்தை தமக்கும் துணைவியாருக்கும் வைத்துக் கொள்ளாமல் இறைப்பணிக்கே செலவிட்டார்.
அவர் திண்டிவனம் சென்ற பிறகு அடியேன் ஒரு சில திருவிழா| நாட்களுக்கு மட்டும்தான் செல்ல முடிந்தது. 
பணியில் இருந்ததால் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை.

அத்திருக்கோயிலில் திருமண தடங்கல் உள்ளவர்களுக்காக வேண்டி “வள்ளி கல்யாண மகோற்சவம்" என்ற விழாவை ஒவ்வொரு மாசி மாதத்திலும் நடத்தி அவர்கள் பயன் பெற முருகனை வேண்டினார்.
அங்கு ஆசிரமம் அழைத்து ஆடிகிருத்திகை தைபூசம், கந்தர் சஷ்டி, நவராத்திசி விழா, மார்கழியில் திருவெம்பாவை விழா போன்ற விழாக்களையும் விமரிசையாக நடத்துவார். 
ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் தேவாரம் பாடி உலக நன்மைக்காகவும், பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்வார். ஊர் மக்கள் ஏராளமானோர் இந்த விழாக்களில் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறாக தொண்டு செய்யும் நாட்களில் அவரது துணைவியார் நோயுற்று 2009-வருடம் இறைவன் திருவடியை அடைந்து விட்டார். 
அதன்பிறகு 1-5-2012 - வருடம் அடியேன் அங்கே சென்று இருந்த போது குருநாதர் அவர்கள் என்னிடம் இன்னும் 30- நாட்கள் கழித்து நீ வரவேண்டி இருக்கும் என்று கூறினார். அப்போது அது எனக்கு புரியாத ஒன்றாக இருந்தது. அவர் கூறியவாறே 30-5-2012.  அன்று குருநாதர் அவர்கள் திருமுருகபெருமான் திருவடியில் இரண்டற கலந்து விட்டார்.




































 
குருநாதர் - கந்தர் அலங்கார பிரியர் - வள்ளிமலை தண்டபாணி சுவாமிகள்  வரலாற்று சுருக்கம்.













3rd - Gurunadhar - Mirudhanga Vidhvan, Kolar, Malagachar Swamigal





From Right to Left
1. B. BALARAM - KANNADA FILM MUSIC DIRECTOR
2. T.A. SENDHIL OWNER OF THE SAI JEWELS PALACE
3. D.S. VEERAYIA - M.L.C in KARNATAKA ASSEMBLY.
4. PADMA BOOSHAN DR. DODDA RANGE GOWDA
KAVIGALU IN KANNADA FILM.
5. OM. SAI PRAKASH - KANNADA FILM DIRECTOR.
6. NITHYA – KANNADA FILM ACTRESS
7. IN CENTRE THIRUPUGAZ ADIYAR - S.KUPPUSWAMY AYYA
ARANI ADIYARKU ADIYAVAN.













Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam