அயிராவதேச்சுரர் Iyravathechurar

அயிராவதேச்சுரர்    Iyravathechurar



மருந்துசேர் மருந்தினை மாலய னரனான
பெருந்சோதி சுயம்புவை முச்சுடரை தேவனை
அருவ வுருவனை புராந்தகனை தொழ
இருமையிலு மினிமறுமையிலும் அவனருள் கூடுமே!


மருந்து சேர் மருந்தினை மால் அயன் அரன் ஆன
பெரும் சோதி சுயம்புவை முச்
சுடரை தேவனை
அருவ உருவனை புராந்தகனை தொழ
இருமையிலும் இனி மறுமையிலும் அவன் அருள் கூடுமே!


மருந்து  –  மூலிகை,  இருமை - இப்பிறவி,
மறுமை – விண்ணுலகு,  சேர் - கலந்த,
மருந்து  –  சிவன்,  சுயம்பு - தானாய் தோன்றிய,
முச்சுடர் - மூன்று ஒளி (சூரியன்,  சந்திரன்,  அக்கினி)
அருவம் -  புலப்படாத.     

பொழிப்புரை:-

மூலிகை கலந்த மருந்தைத் திருமால் பிரம்மன் ருத்ரன் ஆகிய 
பெருஞ்சுடரை தானாய் தோன்றியவனை மூன்று ஒளியை தேவனை
புலப்படாத வடிவனை முப்புரங்களுக்கு இயமனை வணங்க 
இப்பிறவியிலும் இனி விண்ணுலகிலும் அவன் (ஈசன்) அருள் சேருமே!

கருத்துரை:- 

பல மூலிகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கிய கலவை ஆகிய மருந்தாக இருந்து நோய்களைக் குணபடுத்தும் ஓர் அறிய பரிகார பொருளைப் போலத் திகழ்பவனை, திருமால், பிரம்மா, ருத்திரன் என மூவராய் நின்று அருள் புரிபவனை, காண்பதற்கரிய சோதி பிழம்பாய் நின்றானை, தானே தோன்றினானை, சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று ஒளிகளாக இருப்பானை, தேவர்களுக்குத் தலைவனை, 

தன்னை உணராதிருப்பவர்களுக்கு காணமுடியா பொருளாய் மறைந்திருப்பானை, திரிபுரங்களை எரித்தானை, அசுரர்களுக்கு இயமன் போன்றவனை தொழுது வணங்கிட இப்பிறப்பிலும் இனி செல்லும் மேலுலக வாழ்விலும் ஈசன் திருவருள் உமக்கு நற்கதியை நல்குமே.!


திருத்தலப் பெருமை:-

சுவாமி    –  ஐராவதேச்சுரர், அழகேச்சுரர்.

அம்பாள் – காமாட்சியம்மை, அகிலாண்டேஸ்வரி

தலம்  -          அத்திமுகம்.

தீர்த்தம்   -  அகத்திய தீர்த்தம்

விருட்சம் -  வில்வ மரம்

வழிபட்டோர் –  இந்திரன், ஐராவதம், அகத்தியர் சோழ, பல்லவ, ஹொய்சள,                                 விஜயநகர மன்னர்கள்.

பாடியவர்கள் – திருஞானசம்பந்தர், அப்பர், ஆரணியடியார்க்கடியவன்

நூல்        -              தேவாரம் (கிடைக்கவில்லை), லிங்காட்சரமாலை,      ஐராவதேச்சுரர் மாலை

வழிபடும் பலன் - கல்வி அறிவு, மணமாலை, மகப்பேறு, பிணி தீருதல், தொழில் விருத்தி, தோஷம் நீங்குதல்.

வரலாறு -  இத்திருக்கோயில் தோராயமாக 1800 வருடம் பழமையானதாகக் கருதப்படுகிறது. சோழர், பல்லவர் ஹொய்சளர், விஜயநகர மன்னர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் திருப்பணி செய்யபட்டு கல்வெட்டுக்களும் உள்ளது. இங்கு ஐராவதேச்சுரர், காமாட்சியம்மை, விநாயகர், சண்முகர், பைரவர், நந்தி ஆகிய மூர்த்திகள் வேறெங்கும் இல்லாத வகையில் வேறுபாடுள்ளுதாகவும், சிறப்பாகவும் அமைந்ததுள்ளது.

ஐராவதேச்சுரர் யானை முகங் கொண்டவர், காமாட்சியம்மை சுவாமிக்குப் பின்புறம் நின்ற கோலம், விநாயகர் கரங்களில் அக்ஷ்ரமாலை, சண்முகர்
 இடது புறம் பார்த்த மயில்மேல் அமர்ந்து சாந்தசொருபம், பைரவர் இருக்கரம் கொண்டு சூலம் பிடித்து ஆடும் கோலம், நந்தியெம்பெருமான் ஈசனுக்கு எதிரில் இடது புறம் தள்ளி அமர்ந்த நிலை.
இங்குப் பஞ்சபூதங்களுக்குரிய பஞ்சலிங்க சந்நிதிகள் வரிசையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தை மாதம் முதல் வாரம் சூரியன் கதிரொளி அத்திமுக லிங்கத்தின் மேல் விழுவது சிறப்பு. இங்குள்ள நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்கள். 

கருவரையில் அப்பர், திருஞானசம்பந்தர் உருவங்கள் காணப்படுகின்றன. இந்திரன் விருத்திரனை கொன்ற தோஷம் நீங்கியதாக வரலாறு. அகத்தியரால் அகத்திய தீர்த்தம் உண்டாக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால் மேற்கூறிய பலன்கள் கிடைப்பதாக வரலாறு.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam