ஓணகாந்தீச்சுரர் OnaKanthechurar

ஓணகாந்தீச்சுரர்   OnaKanthechurar





சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய்
நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே
ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய்
பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்!

சேவு அது ஏறி ஓர் சூலமுந் தாங்கிய பரமாய் 
நாவு அதில் உறை சுக அனுபவ அச்சிவத் தீயே 
ஆவணந்தான் அவை முன் காட்டி அடிமையாய் 
பாவணம் பாட வைத்தான் அவனை ஓதி உய்வு அடைவீர்!

சேவு - எருது,   பரமாய் - பரம் பொருளாய்,  சுகானுபவம் - இனிய அனுபலம்,  ஆவணம் - அடிமை  பத்திரம்,  பாவணம் - தேவாரம்.

பொழிப்புரை:-

எருது ஏறி ஒரு சூலம் ஏந்திய பரம் பொருளாய்
நாவில் உறைகின்ற இனிய அனுபவமாகிய அந்த சிவத் தீயே
ஆவணத்தை சபை முன் காட்டி அடிமை கொண்டு
(தேவார) பாடல்களை பாட வைத்தான்,  அவனை பாடி நற்கதி அடைவீர்!

கருத்துரை:- 

எருதாகிய ரிஷபத்தின் மேல் ஏறி ஒரு கையில் சூலமும்  தாங்கி சிவபரம் பொருளாய் அடியார்கள் நாவில் உறைகின்ற அந்த பேரானந்த அனுபவமாகிய சிவ ஒளியே,

அன்று சுந்தர  மூர்த்தி சுவாமிகளின் திருமணத்தின் போது சபையோர் நடுவே அடிமை ஓலையை (ஆவண பத்திரம்) காட்டி அவரை அடிமை கொண்டு சிறந்த நயமிக்க பாக்களாகிய தேவாரத்தை பாட வைத்த ஈசனை நீங்களும் பாடி வணங்கி நற்கதியை அடையுங்கள்.

திருத்தல பெருமை:-

சுவாமி -     ஓணகாந்தீச்சுரர். 
அம்பாள் - காமாட்சியம்மை.

தலம்  -  காஞ்சிபுரம். - தொண்டை நாடு - 3- வது தலம்.

தீர்த்தம் - ஓணகாந்த தீர்த்தம்,  விட்ணுதீர்த்தம்,  தான் தோன்றி தீர்த்தம் 

விருட்சம் - வன்னி மரம்,  மா மரம், புளிய மரம் 

வழிபட்டோர் -  ஓணன்,  காந்தன்,  சலந்தரன்,  சுந்தரர்,  சேக்கிழார்.

நூல் -   தேவாரம்,  லிங்காட்சரமாலை. 

பாடியவர்கள் -  சுந்தரர்,  சேக்கிழார்,  ஆரணியடியார்க்கடியவன்.
 
வழிபடும் பலன் - பொன்,  பொருள்,  காரிய சித்தி,   திருப்பணி. 


குறிப்பு:-

இத்தலத்து லிங்காட்சரமாலையில் "சேவதேறி"  என்ற சொற்றொடர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு ஓணகாந்தன்தளி தேவாரத்தில் 11- வது செய்யுளில் "எருதொன்றேறும்" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக.

மேலும்  லிங்காட்சர மாலையில் "பாவணம் பாட" என்ற சொற்றொடர் அதே 11- வது செய்யுளில் "பாவணத்தமிழ்" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க.

அதுவல்லாது  லிங்காட்சர மாலையில் சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஈசன் அடிமை கொண்டதை எடுத்து காட்டுகிறது.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam