திருவட்டீச்சுரர் மாலை Thiruvateechurar Malai

திருவட்டீச்சுரர் மாலை

















  திருவட்டீச்சுரர் மாலை 

பேரிகை

 

சுவாமி :--- திருவட்டீச்சுரர்           பண் :--- பழந்தக்கராகம்

அம்பாள் :-- பிரசன்ன நாயகி    இராகம் :--- சுத்தசாவேரி

தீர்த்தம் :--                                             தாளம் :--- கண்டஜம்பை

                                                                    அட்சரம் :--- 2 1/2 

                                    திருச்சிற்றம்பலம்

நதிசேர் செஞ்சடையில் நற்கொன்றையொடு கூவிளமும் 
   நீங்காதென்றும் வைத்து நாதமுங் கீதமுங் கேட்டு 
பொதிசோறும் நீருங் கொடுத்து அடியார்களை யாண்டு
   பொங்கரவஞ் சூடி புலித் தோலுடுத்தி புவனஞ்சிறக்க
மதிநுதலாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   மணம்வீச வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
எதிலுமென்று முமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   எம்மையுந் தயவோடேற்று பணிகொண் டருள்மினே ! ( 1 )


நதிசேர் செஞ்சடையில் நற்கொன்றையொடு கூவிளமும்
   நீங்காது என்றும் வைத்து நாதமுங் கீதமுங் கேட்டு
பொதிசோறும் நீருங் கொடுத்து அடியார்களை ஆண்டு
   பொங்கு அரவஞ் சூடி புலித்தோல் உடுத்தி புவனஞ் சிறக்க
மதிநுதலாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   மணம் வீச வந்தஎம் திருவட்டீச்சுர அரனே !
எதிலும் என்றும் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   எம்மையும் தயவோடு ஏற்று பணிகொண்டு அருள்மினே !


கருத்துரை :-- கங்கையோடு சேர்ந்த செஞ்சடையில் மலரோடு வில்வமும்
நீங்காது வைத்து, தாள இசையோடு கூடிய பாடல்களை கேட்டு,
அடியார்கள் பசி நீங்கும் பொருட்டு கட்டுசோறும் நீரும் கொடுத்து,
        அவர்களை ஆண்டுகொண்டு, மேலே எழுந்து சீறும் பாம்பை மேனி எங்கும்
அணிந்து, இடையில் புலித்தோல் ஆடையை உடுத்தி, இவ்வுலகம் புகழும்
பெருமையும் கொள்ள, திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில்,
        சந்திரனை போன்று பிரகாசிக்கும் ஒளிச்சுடர் வீசும் நெற்றியை யுடைய
பிரசன்னநாயகியுடன், நறுமணம் வீசும்படி உறையும் திருவட்டீச்சுரன்
எனுந் திருநாமங் கொண்ட சிவனே !
எந்தவகையிலும் எங்கும் எப்போதும் உமக்கே ஆளாக தொண்டு புரிய
அடியேனையும் கருணையோடு ஏற்று உய்வித்திடுக !

கூவிளம்:-- வில்வம், பொதிசோறு:-- கட்டுசோறு, புவனம்:-- உலகம்,
பொங்கு:-- மேலெழும், அரவம்:-- பாம்பு, மதி:-- சந்திரன்.


ஆள்விடும் படிகூடற் கோமானு மாணையிட
   ஆங்கோ ராளாயமுதுண் டடியாளுக்குத் துணைநின்று
தோள்வீசி தொய்விலா தாடும் பொற்பாத நீழலில்
   தூய்நெறி தொண்டர் தமையிருத்தி திருவருளே புரிய
வாள்நெடுங் கண்ணாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   ஒளிதிகழ வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
நாள்தொறு முமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   நாயேனை யுமேற்று பணிகொண் டருள்மினே ! ( 2 )


ஆள்விடும் படிகூடற் கோமானும் ஆணையிட
   ஆங்கு ஓர் ஆளாய் அமுது உண்டு அடியாளுக்கு துணை நின்று
தோள்வீசி தொய்வு இலாது ஆடும் பொற்பாத நீழலில்
   தூய்நெறி தொண்டர் தமை இருத்தி திருவருளே புரிய
வாள்நெடுங் கண்ணாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   ஒளிதிகழ வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
நாள்தோறும் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   நாயேனையும் ஏற்று பணி கொண்டு அருள்மினே !


கருத்துரை:-- மதுரையம்பதியில், வைகை நதியில் வெள்ளங்கரை புரண்டுஓட,
அதை அடைக்கும் பொருட்டு அரிமர்த்தன பாண்டியன் வீட்டுக்கு ஓர் ஆள்
அனுப்பும்படி ஆணையிட, அப்போது வந்தி எனும் கிழவிக்கு, பிட்டுக்கு கூலி
ஆளாக வந்து அவ்வம்மையாருக்கு துணை நின்ற,
எட்டு தோள்களையும் வீசி எந்நேரமும் சலிப்பிலாது திருநடனம் ஆடும்
பொன்போன்று ஒளிவீசும் திருவடி நிழலில், தூய்மையான நற் திருப்பணிகள்
செய்கின்ற அடியார்களை இருத்தி திருவருள் செய்வதற்கு,
திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில் கூர்மையான வாள் போன்ற நீண்ட
கண்களை உடைய பிரசன்னநாயகியுடன், ஒளி வீசும்படி வந்து அமர்ந்த
திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட சிவனே !
        அடியேனையும் உமக்கே ஆளாக ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் உமக்கு
திருத்தொண்டுகள் புரிய அருள் செய்து உய்வித்திடுக !

கூடல்:-- மதுரை, கோமான்:-- பாண்டியன், அடியாள்:-- வந்தி,
தொய்வு:-- சலிப்பு, நெறி:-- நல்லசெயல், நாயேன்:-- அடியேன்.


வெஞ்சினர் புரமூன்றையும் வேகவே நகைத்தாங்கு
   விடையேறிய விகிர்தனா யுருமாறி யொளிவீச
கொஞ்சுஞ் சிலம்பணிந்து கொண்டதோர் நடமிட்டு
   கொடிய முயலகனை காலாற்மிதித் துலகுய்யவே
பஞ்சனை விரலாள் பேரிகை பிரசன்ன நாயகியின்
   பாகமுறைய வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
தஞ்சமடைந் தேனுமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   தமியேனையு மேற்று பணிகொண் டருள்மினே ! ( 3 )

வெஞ்சினர் புரம் மூன்றையும் வேகவே நகைத்து ஆங்கு
   விடை ஏறிய விகிர்தனாய் உருமாறி ஒளிவீச
கொஞ்சுஞ் சிலம்பணிந்து கொண்டதோர் நடம் இட்டு
   கொடிய முயலகனை காலாற் மிதித்து உலகு உய்யவே
பஞ்சனை விரலாள் பேரிகை பிரசன்ன நாயகியின்
   பாகமுறைய வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
தஞ்சம் அடைந்தேன் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   தமியேனையும் ஏற்று பணி கொண்டு அருள்மினே !



கருத்துரை:-- மிக அதிகமான கோபகுணம் கொண்ட அசுரர்கள் மூன்று
பேர் பட்டணங்களும் சுட்டெரிந்து போகும்படி சிரித்து, அங்கு ரிஷப வாகனம்
ஏறி வித்தைகள் புரிபவராக, ஒளிவீசும்படி தனது உருவத்தை மாற்றி 
திருவடிகளில் நாதஒலி எழும்பும் காற்சிலம்பு எனும் ஆபரணம்அணிந்து 
தனக்கே உரியதான திருநடனங்களை புரிந்து, இவ்வுலகம் நன்மை பெற்றிட 
கொடிய முயலகன் எனும் அசுரனை தனது காலால் மிதித்து, திருபேரிகை 
எனுஞ் சிவத்தலத்தில், பஞ்சு போன்று மெல்லிய கைவிரல்கள்யுடைய 
பிரசன்னநாயகியொடு ஒரு பாகம் அமர்வதற்கு வந்த எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட சிவனே !
அடியேன் உனது திருவடிகளை தஞ்சம் அடைந்தேன் என்றும் உமக்கே ஆளாக 
இருந்து திருதொண்டுகள் புரிவதற்கு ஏற்று கொண்டு, யான் நற்கதி அடைய 
திருவருள் செய்திடுக !

  வெஞ்சினர்:-- தீகோபம்,  விகிர்தன்:-- வேடதாரி,  விடை:-- ரிஷபம்.


பாரதனில் பல்லுயிரையும் படைத்து படியுமளந்து
   பாங்குடன் பல வேடங்களொடு திருநாமமுங் கொண்டு
ஆரமுத மோனவிழி யாலடியாரை யாண்டு
   அரியதிரு வடியாலருள் புரிந்து புவிவாழ
சேரலராள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   சேர்ந்துறைய வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
ஊரதனி லுமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   உரியேனையு மேற்றுய்ந்திட பணிகொண் டருள்மினே ! ( 4 )

பார் அதனில் பல் உயிரையும் படைத்து படியும் அளந்து
   பாங்குடன் பல வேடங்களொடு திருநாமமுங் கொண்டு
ஆர் அமுத மோன விழியால் அடியாரை ஆண்டு
   அரிய திருவடியால் அருள் புரிந்து புவி வாழ
சேர் அலராள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   சேர்ந்து உறைய வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
ஊர் அதனில் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   உரியேனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !

கருத்துரை:-- இப்பூவுலகில் அனைத்து உயிர்களையும் படைத்து அவைகள்
வாழ்வதற்கு வேண்டிய அனைத்தையும் படைத்து, மிக நேர்த்தியாக தகுந்த
பல வேடங்களை தாங்கி, அங்கே அதற்குரிய திருப்பெயர்களை கொண்டு,
உடலும் உள்ளமும் மகிழ்ச்சியுற தேவையான அமுதத்திற்கு நிகரான
மெளன விழிகளால், தனது அடியார்களை ஆட்கொண்டு காண்பதற்கு அரிய
திருவடிகளால் அருள் புரிந்து, இவ்வுலகம் வாழ்வதற்கு திருபேரிகை எனுஞ்
சிவத்தலத்தில், நறுமணம் வீசும் மலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல,
மணமும் ஒளியும் வீசும் பிரசன்னநாயகியொடு சேர்ந்து அருள் பாலிக்க
வந்த எம்பெருமானாகிய திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனே!
அடியேன் பல ஊர்களுக்குஞ் சென்று உன் திருக்கோயில்களில்,
உனக்கு திருத்தொண்டுகள் புரிவதற்குரிய ஆளாக ஏற்றுக்கொண்டு அருள்
புரிக !

படி:-- உணவு, பாங்கு:-- பொருந்திய, மோனம்:-- மெளனம்,
புவி:-- உலகம், சேரலர்:-- சேர்ந்தமலர்

முகிலொடு மோதுமுகி லெனமுழங்கு மவுணர்குலம்
   முழுதுமழிய முருகனை படைத்து முச்சுடராய் நின்று
எகினமு மேனமுமாய் நேடியயிரு வரறியா
   இணையடிகள் தேயதமடி யார்களை நாடிசெலும்
வகிர்குழலாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   உறவாட வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
நெகிழ்ந்து யானுனடிக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   நிகர்வனையு மேற்றுய்ந்திட பணிகொண் டருள்மினே ! ( 5 )


முகிலொடு மோதும் முகில் என முழங்கும் அவுணர் குலம்
   முழுதும் அழிய முருகனை படைத்து முச்சுடராய் நின்று
எகினமும் ஏனமுமாய் நேடிய இருவர் அறியா
   இணையடிகள் தேய தம் அடியார்களை நாடி செலும்
வகிர் குழலாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   உறவாட வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
நெகிழ்ந்து யான் உன் அடிக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   நிகர்வனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !


கருத்துரை:-- மேகமொடு மோதும் மேகங்கள் என பெரும் இறைச்சலொடு
வரும் அசுரர்குலம் முழுதும் அழிந்து ஒழிய, திருமுருகனை தம் நெற்றிக்
கண்ணில் உதித்து வரச் செய்து, தானே சூரியன் சந்திரன் அக்கினி எனும்
மூன்றுசுடர் ஒளிகளாய் நின்று, 
        அன்ன பறவையாகவும் பன்றியாகவும் உருமாறி தேடிச்சென்ற அந்த பிரம்மனும் திருமாலும் அறிய முடியாத திருவடிகள் தேயும்படி தனது அடியார்களை நாடிச் சென்று அருள் புரியும், திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில், சுருள் சுருளாக அடர்ந்த கருநிறகூந்தல் உடைய அம்மை பிரசன்னநாயகியொடு திருவார்த்தைகளால் பேசி மகிழும் எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனே !
        யான் உளமாற உருகி உன் திருவடிகளுக்கு தொண்டுகள் புரிய ஆளாக
இந்த தாழ்மையானவனையும் ஏற்று நற்கதி காணும்படி அருள் செய்க !

முகில்:-- மேகம், முழங்கு:-- இறைச்சல், எகினம்:-- அன்னம்,
ஏனம்:-- பன்றி, நேடி:--- தேடி, இருவர்:--- பிரம்மன் திருமால்,
வகிர்:-- சுருள், நிகர்வன்:-- தாழ்மையானவன்.
முச்சுடர்:-- சூரியன் சந்திரன் அக்கினி.


துணிந்து மதகரியின் தோலுரித்து போர்த்தி களித்து
   தனிநடம் புரிந்து திங்களொடரவு பகைநீக்கி
நணியில் வைத்து நக்கனாய் திரிந்தரவ முமாட்டி
   நஞ்சினையுண்டு நாடியதேவ ரொடுலகை யுங்காக்க
மணிமொழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   மஞ்சளாட வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
பணிந்துன தடிக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   பேதையேனையு மேற்றுய்ந்திட பணிகொண் டருள்மினே ! ( 6 )


துணிந்து மத கரியின் தோல் உரித்து போர்த்தி களித்து
   தனி நடம் புரிந்து திங்களொடு அரவு பகை நீக்கி
நணியில் வைத்து நக்கனாய் திரிந்து அரவமும் ஆட்டி
   நஞ்சினை உண்டு நாடிய தேவரொடு உலகையுங் காக்க
மணிமொழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   மஞ்சளாட வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
பணிந்து உன் அடிக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   பேதையேனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !


கருத்துரை:-- மதம்பிடித்த யானையை துணிவோடு தாக்கி, அதன் தோலை உரித்து திருமேனியின் மேல் போர்வையாக போர்த்தி, மகிழ்ந்து தனிநடனம் ஆடியும், சந்திரனையும் பாம்பையும் பகை நீக்கி, செஞ்சடைக்கருகில் ஒன்றாக வைத்து,
        தாருகாவன ரிஷிகள் புரிந்த தீய யாகத்தை அழிக்க திகம்பரனாய் திரிந்து, பாம்பையும் ஆட்டி, கொடிய ஆலகால விஷத்தை உண்டு, தேடி வந்த தேவர்களையும், உலகையும் காக்க, திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில், நவமணிகள் போன்று பேசுபவள் ஆகிய அம்மை பிரசன்னநாயகியொடு மஞ்சள் நீரால் நீராட வந்த எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனே ! 
         யான் உமக்கு ஆளாகி, பணிவோடு வணங்கி திருத்தொண்டுகள் புரிய இந்த அறிவிலியையும் ஏற்று நற்கதி காண திருவருள் செய்திடுக !

மதம்:--- திமிர்,  கரி:--- யானை களித்து:---மகிழ்ந்து,  அரவு:--- பாம்பு,
திங்கள்:--- சந்திரன்  நணியில்:--- அருகில்,  நக்கன்:---  திகம்பரன்,
பேதை:--- அறிவிலி,  நஞ்சு:--- விஷம்.

காலனை காலாலிடறி மாணிக்கு கதியளித்து
   காமனையுங் கண்ணால் காய்ந்து பொன்னுலகு துயரற
வேலனையுந் தந்து வாதுபுரிந்து வன்தொண்டரை மீட்டு
   வில்லாலடிப்பட்டு சித்துக்கள் பலவாடி வினையறுக்க
கோலவிழியாள் பேரிகை பிரசன்ன நாயகியின்
   கரம்பற்றிட வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
சீலமுடனுமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   சிறியேனையு மேற்றுய்ந்திட பணிகொண் டருள்மினே ! ( 7 )


காலனை காலால் இடறி மாணிக்கு கதி அளித்து
   காமனையுங் கண்ணால் காய்ந்து பொன் உலகு துயர் அற
வேலனையுந் தந்து வாது புரிந்து வன்தொண்டரை மீட்டு
   வில்லால் அடிப்பட்டு சித்துக்கள் பல ஆடி வினை அறுக்க
கோலவிழியாள் பேரிகை பிரசன்ன நாயகியின்
   கரம் பற்றிட வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
சீலமுடன் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   சிறியேனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !



கருத்துரை:-- இயமனை காலால் உதைத்துத் தள்ளி, மார்கண்டேயருக்கு
நற்பேற்றை வழங்கி, மன்மதனை நெற்றிக் கண்ணால் சுட்டு எரித்து, தேவர்
உலகம் யாவும் துயரத்தில் இருந்து விடுபட, 
        சக்திவேலை ஏந்திய வடிவேலனை தந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆவணங் காட்டி, வழக்கு தொடுத்து ஆட்கொண்டு, வேடனாக உருவம் எடுத்து அருச்சுனனால் வில்லால் அடிக்கப்பட்டு, அதிசயக்க தகுந்த பலவித சித்து விளையாடல்களை புரிந்து, உயிர்களின் வினைகளை நீக்க, திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில், சித்திரம் போன்று அழகு மிகுந்த விழிகளை உடைய பிரசன்னநாயகியின் கைகளை பற்றிட வந்த எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனே !
        நல்ல குணங்களோடும் ஒழுக்கத்தோடும் உமக்கே ஆளாக இருந்து
திருத்தொண்டுகள் புரிவதற்கு இச்சிறியவனையும் ஏற்று, நற்பேற்றை
அடைவதற்கு திருவருள் செய்திடுக !

காலன்:---- இயமன், இடறி:---- உதைத்து, மாணி:---- மார்கண்டேயர்,  காமன்:---- மன்மதன், காய்ந்து:---- எரித்து, பொன்னுலகு:---- தேவர்உலகு,    வேலன்:---- முருகன், வன்தொண்டர்:---- சுந்தரமூர்த்தி சுவாமிகள்

ஊன்றி கான்மாறி யுன்னதாடல் புரிந்தாங்கு
   யுருமாறி மண்சுமந்தடி யும்பட்டவனி யிலெங்கும்
வான்பொழிந்து மலிவளஞ் சிறக்கவகை யறிந்துயிர்க்கு
   வேண்டிய யூணளித்து ஓங்குமறை போற்றவே
தேன்மொழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   திளைத்துறைய வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
ஆன்றதோ ருனடிக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   அடியேனையு மேற்றுய்ந்திட பணிகொண் டருள்மினே ! ( 8)

ஊன்றி கால் மாறி உன்னத ஆடல் புரிந்து ஆங்கு
   உருமாறி மண்சுமந்து அடியும் பட்டு அவனியில் எங்கும்
வான் பொழிந்து மலிவளஞ் சிறக்க வகை அறிந்து உயிர்க்கு
   வேண்டிய ஊண் அளித்து ஓங்கு மறை போற்றவே
தேன்மொழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   திளைத்துறைய வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
ஆன்றதோர் உன் அடிக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   அடியேனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !


கருத்துரை:-- திருஆலவாய் மதுரை எனும் சிவத்தலத்தில் இடதுகாலை
ஊன்றி வலதுகாலை மாற்றி மேன்மை மிக்க திருநடனம் புரிந்து, அங்கு
உருமாறி பிட்டுக்கு மண்ணும் சுமந்து, அரிமர்த்தன பாண்டியன் கையால்
பிரம்பு அடியும் பட்டு, உலகெலாம், உலகில் எல்லா உயிர்களும் வாழ்வதற்கு
தேவையான நல்ல மழை பொழிந்து எங்கும் உணவு தானியங்கள் விளைந்து
குவிந்து, வளம்பெருகச்செய்து, ஓங்கி ஒலிக்கின்ற வேதங்கள்
போற்றிட, திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில், தேனைப்போன்று
இனிக்கின்ற மொழிகளை பேசுபவளாகிய, பிரசன்னநாயகியுடன், சேர்ந்து
மகிழ்வதற்கு வந்த எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட
சிவனே !
அரிதாகிய உன் திருவடிகளுக்கு யான் ஆளாக இருந்து திருத்தொண்டு
புரிய ஏற்று, இவனையும் உய்வித்திடுக !

உன்னதம்:---- மேன்மை, மலி:---- குவிந்து, பெருகி, வகை:---- வழி,    ஊண்:---- உணவு, ஓங்கு:---- உயர்ந்த, திளைத்து:---- மகிழ்ந்து,  ஆன்றது:---- அரியது.

நான்மறை பொருளைநயந்து நால்வர்க்குரைத்து மிடறினில்
   நஞ்சடைத்த கண்டனாய் கண்டவர் நகையாடும் பித்தனாய்
ஆனஞ்சாடு மருவுருவ னாயறிய வொணார்க்கும்
   அல்லாதார்க்கு மம்மையு மப்பனுமா யருள்தரவே
மான்நேர் விழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன் மகிழ்ந்துறைய 
   வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
யான் வந்தேனுமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   என்னையு மேற்றுயிந்திட பணிகொண் டருள்மினே ! ( 9 )

நான்மறை பொருளை நயந்து நால்வர்க்கு உரைத்து மிடறினில்
   நஞ்சடைத்த கண்டனாய் கண்டவர் நகையாடும் பித்தனாய்
ஆன் அஞ்சாடும் அரு உருவானாய் அறிய ஓணார்க்கும்
   அல்லாதார்க்கும் அம்மையும் அப்பனுமாய் அருள்தரவே
மான்நேர் விழியாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   மகிழ்ந்து உறைய வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
யான் வந்தென் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   என்னையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !

கருத்துரை:-- நான்கு வேதங்களின் சாரங்களையும் சனகாதி
முனிவர்கள்
நான்கு பேருக்கும் தெளிய மிகுதியாக உரைத்து, கழுத்தில்
கொடிய விஷத்தை அடக்கி நீலகண்டன் எனும் திருநாமம் பெற்று,
பார்ப்பவர்கள் சிரிக்கும்படி பித்தனாக, பசுவின் மூலம் கிடைக்ககூடிய ஐந்து
பொருள்களால் தினம் மேனியில் திருமஞ்சனம் செய்துக் கொள்ளும்,
உருவமுடையவன் உருவமற்றவன் என்று தெரிந்து கொள்ள
முடியாதவர்க்கும் தெரிந்து கொண்டவருக்கும்,
தாயுமாய் தந்தையுமாய் இருந்து அருள் செய்வதற்காகவே,   திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில், மானின் கண்கள கொண்டவளாகிய பிரசன்ன நாயகியுடன் மகிழ்ந்து உறவாட வந்த எங்கள் திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட சிவனே !அடியேன் உமது திருக்கோயிலுக்கு வந்து திருப்பணி செய்யும் ஒரு ஆளாக
என்னையும் ஏற்றுக்கொண்டு யான் நற்கதி அடையச் செய்க !

நான்மறை:---- நான்குவேதங்கள், நால்வர்:---- சனகாதிமுனிவர்கள்,     மிடறு:---- கழுத்து, நஞ்சு:---- விஷம், நகை:---- சிரிப்பு, ஆன்:---- பசு,    அஞ்சு:---ஐந்து, ஆடும்:---- திருமஞ்சனம், அரு:---- உருவமற்ற,

குறிப்பு:---- பசுவின் மூலம் கிடைக்கும் ஐந்து பொருள்கள்:----     பால், தயிர், நெய், கோமயம், சாணம் ( திருநீறு )


முனிகணங்களும் மாலொடயனான வானவரும்
   மூவேழாறு மீன்களுங் கோள்களும் ஒருசேர
பனிமலையில் மறையோதி நிற்க பலபண்ணொடாடி
   பஞ்சாட்சரமொடு பதமுமருளி கார்பொழியவே
கனியிதழாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   களித்துறைய வந்தயெம் திருவட்டீச்சுர யரனே !
இனிமையாயுமக்கே தொண்டுகள் புரிய யாளாய்
   இவ்வடியேனையு மேற்றுயிந்திட பணிகொண் டருள்மினே ! ( 1௦ )


முனிகணங்களும் மாலொடு அயன் ஆன வானவரும்
   மூ ஏழு ஆறு மீன்களும் கோள்களும் ஒருசேர
பனிமலையில் மறை ஓதி நிற்க பல பண்ணொடு ஆடி
   பஞ்சாட்சரமொடு பதம் அருளி கார் பொழியவே
கனி இதழாள் பேரிகை பிரசன்ன நாயகியுடன்
   களித்து உறைய வந்த எம் திருவட்டீச்சுர அரனே !
இனிமையாய் உமக்கே தொண்டுகள் புரிய ஆளாய்
   இவ்வடியேனையும் ஏற்று உய்ந்திட பணி கொண்டு அருள்மினே !

 
கருத்துரை:-- முனிவர்களும் சிவகணங்களோடு திருமாலும் பிரமனும்
மற்றும் தேவர்களும், 27  நட்சத்திரங்களும், 9 கிரகங்களும் ஒன்று
சேர்ந்து கயிலைமலையில் வேதம் ஓதி நிற்க, பலவித இசைகளோடு
திருநடம் புரிந்து பஞ்ச அட்சரங்கள் ஆகிய நமசிவயமொடு திருவடிகளும்
அருளி எங்கும் பசுமையும் வளமையும் பெருக மழையை
பொழிவித்து, திருபேரிகை என்னுஞ் சிவத்தலத்தில், கனி இதழாளாகிய
அம்பிகை பிரசன்ன நாயகியுடன் மகிழ்ந்து உறவாட வந்த எங்கள்
திருவட்டீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட சிவனே ! மகிழ்ச்சியாக உமக்கு
திருத்தொண்டுகள் புரிய இவ்வடியேனையும் ஒரு ஆளாக ஏற்று நற்கதியை
அடைய திருவருள் செய்திடுக !

மூவேழாறு:--- (3x7=21)+6= (27), மீன்கள்:---- நட்சத்திரங்கள், கனி:----பழம்,   கோள்கள்:---- நவகிரகங்கள், பனிமலை:---- கயிலைமலை, கார்:---- மழை,   மறை:---- வேதம், பண்:---- இராகம், களித்து:---- மகிழ்ந்து.

வாவியொடு பொழில்கள் சூழ்ந்த யிவ்வையகந் தனிலே
   வளந்திகழும் பேரிகையில் வடிவே யழகான
பூவிதழாள் பிரசன்ன நாயகியுட னுறையும்
   புவிபோற்றுந் திருவட்டீச்சுர யரனை நினைந்தென்றும்
ஆவிக் காதரவாய் பணி கொண்டுய வேண்டி
   ஆரணி யடியார்க் கடியவன் கூறிய பத்தையும்
நாவினில் நயமுடன் சொல்லி நினைவார்க ளெவரும்
   நலம் பலவும் பெற்று ஞாலமதில் வாழ்வரினிதே ! ( 11 )


வாவியொடு பொழில்கள் சூழ்ந்த இவ்வையகந்தனிலே
   வலந்திகழும் பேரிகையில் வடிவே அழகான
பூவிதழாள் பிரசன்ன நாயகியுடன் உறையும்
   புவிபோற்றும் திருவட்டீச்சுர அரனை நினைந்து என்றும்
ஆவிக்கு ஆதரவாய் பணி கொண்டு உய வேண்டி
   ஆரணி அடியார்க்கு அடியவன் கூறிய பத்தையும்
நாவினில் நயமுடன் சொல்லி நினைவார்கள் எவரும்
   நலம் பலவும் பெற்று ஞாலம் அதில் வாழ்வர் இனிதே !


கருத்துரை:-- நீர்நிறைந்த நிலைகளும் ஓடைகளும் சோலைகளும் எங்கும்
நிறைந்துள்ள இப்பூமியில் சகல வளமும் நலமும் பெற்றுள்ள
திருபேரிகை எனுஞ் சிவத்தலத்தில்,பூவின் இதழுக்கு நிகரான இதழ்களை
கொண்டுள்ள அளவிட முடியாத பேரழகுடைய பிரசன்ன நாயகியுடன்
உறைகின்ற, உலகெல்லாம் போற்றி புகழும் திருவட்டீச்சுரன் எனும்
திருநாமங் கொண்ட ஈசனை, அனுதினமும் நினைந்து உளமுருகி தன்
உயிர்க்கு என்றும் ஆதரவாய் இருக்கவும், அந்த ஈசனுக்கே என்றும்
தொண்டுகள் புரியவும், அதனால் நற்கதியை அடையவும்
வேண்டி, ஆரணி எனும் சிவத்தலத்தில் ஈசனருளால் உதித்து,
ஆரணியடியார்க்கு அடியவன் என்ற இச்சிறியவன் எடுத்து கூறிய இந்த பத்து
பாடல்களையும், தங்கள் நாவினில் மகிழ்ச்சியோடு விரும்பி ஈசனை
நினைந்து, பாடியும் அல்லது படிப்பவர்களும் எவரோ, அவர்கள்
இப்பூவுலகில், எல்லா வளமும் நலனும் பெற்று இனிதே வாழ்வார்கள் !

 வாவி:---- நீர்நிலை,  பொழில்:---- சோலைகள்,  புவி:---- உலகம்ஆவி:---- உயிர், பணி;---- திருத்தொண்டு, உய:---- நற்கதி,  நயம்:---- மகிழ்ச்சி,  ஞாலம்:--- உலகம்.

திருச்சிற்றம்பலம்

சுபம்

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam