தென்பெண்ணேச்சுரர் மாலை ThenPennechurar Malai

தென்பெண்ணேச்சுரர் மாலை

பெண்ணேச்சுரமடம்.

சுவாமி -    தென்பெண்ணேச்சுரர்
அம்பாள் - வேதநாயகி

தலம்   - பெண்ணேச்சுரமடம்.

தீர்த்தம்    -     பெண்ணையாறு.     

விருட்சம் -      பனை மரம்.

பண்:-
கொல்லி    இராகம் - நவரோஸ்

திருச்சிற்றம்பலம்

மந்திர பொருளாகி மண் மேல் கலந்திருப்பானை
   மறை நான்கினுட் பொருளாக யுறைந்திருப்பானை
எந்தையுந் தாயுமாய் எவ்வுயிர்க்கு மிருப்பானை
   ஏழிசையினிய நாதமாய் கலந்தானை
வந்தனை செய்வோர்க்குரிய வானாடளிப்பானை
   வண்டார்குழலாள் வேதநாயகியுடனுறையும்
வெந்தநீறணியும் விமலனை தென்பெண்ணேச்சுரனை
   வேண்டி தொழ வினை நீங்கி வாழ்வாரினிதே ! (1)


மந்திர பொருள் ஆகி மண் மேல் கலந்து இருப்பானை
   மறை நான்கின் உட்பொருளாக உறைந்து இருப்பானை
எந்தையுந் தாயுமாய் எவ்வுயிர்க்கும் இருப்பானை
   ஏழ் இசையின் இனிய நாதமாய் கலந்தானை
வந்தனை செய்வோர்க்கு உரிய வான் நாடு அளிப்பானை
   வண்டார் குழலாள் வேத நாயகியுடன் உறையும்
வெந்த நீறு அணியும் விமலனை தென்பெண்ணேச்சுரனை
   வேண்டி தொழ வினை நீங்கி வாழ்வார் இனிதே!


எந்தை - தந்தை,  ஏழிசை - ச  ரி  க ம ப த நி  ஸ்வரங்கள்,  ஆர் - அழகு,  குழல் - கூந்தல்,  மறை - வேதம்

கருத்துரை :-  
இப்பூவுலகின் கண் எங்கும் எதிலும் ஒரு வேத மந்திரத்தின் சொற்களாக கலந்து இருப்பவனை, நான்கு வேதங்களின் உட்பொருளாக திகழ்பவனை, எல்லாவுயிர்களுக்கும் தாயுமாய் தந்தையுமாய் இருப்பவனை, ஏழு இசைகளின் ஒலியாக கலந்து இருப்பவனை, தன்னை போற்றி வணங்குவாருக்கு தேவருலகு சேர்ந்து இன்புற்றிருக்க அருள் செய்வானை,

வண்டுகள் மொய்க்கின்ற அழகிய கூந்தலை உடையவளாகிய
வேதநாயகி என்னும் திருப்பெயர் தாங்கிய உமையாளோடு விற்றிருக்கும் திருமேனி எங்கும் திருநீறு தரித்துள்ள நிர்மலமானவனை, தென்பெண்ணேச்சுரன் எனும் திரு நாமங் கொண்ட ஈசனை வேண்டி வணங்கி தொழுதிட வினைகள் எல்லாம் நீங்கி இனிதே இப்பூவுலகில் வாழ்வார்கள்.!
 
ஞாலம் புகழொரு பாகம் நாரீக்கீந்தானை
   நன்னெறியாலடியார் தமை யாண்டு கொள்வானை
சீலந் திகழொரு சிவ சொரூபமானானை
   செஞ்சடையில் சீறும் பாம்புஞ் சசியுமணிவானை
காலனை கால் கொடுதைத்து பாலகனை காத்தானை
   கயற் கண்ணினாள் வேத நாயகியுடனுறையும்
நீலமிடற்றோன் நிமலனை தென்பெண்ணேச்சுரனை
   நினைந்து தொழ நில்லா தோடுமே பிணிகளே! (2)


ஞாலம் புகழ ஒரு பாகம் நாரீக்கு ஈந்தானை
   நன்னெறியால் அடியார் தமை ஆண்டு கொள்வானை
சீலந் திகழ ஒரு சிவ சொரூபம் ஆனானை
   செஞ்சடையில் சீறும் பாம்புஞ் சசியும் அணிவானை
காலனை கால் கொட உதைத்து பாலகனை காத்தானை
   கயற் கண்ணினாள் வேத நாயகியுடன் உறையும்
நீலமிடற் றோன் நிமலனை தென்பெண்ணேச்சுரனை
   நினைந்து தொழ நில்லாது ஓடுமே பிணிகளே!


ஞாலம் - உலகம்,  நாரீ - பெண்,    சீலம் - நற்குணம்,  சசி - சந்திரன்,  கயற் - மீன், மிடற்றோன் - கழுத்துடையவன்.

கருத்துரை:- 
உலகம் புகழும்படி தன் மேனியில் ஒரு பாகத்தை உமையவளுக்கு தந்தவனை, நல்ல செய்கைகளால் தன் அடியார் பெருமக்களை ஆட்கொள்பவனை, நல்ல குணங்கள் வாய்ந்த ஒரு சிவ ரூபமாக காட்சி தருபவனை, செஞ்சடையில் சீறுகின்ற பாம்பையும், உடன் சந்திரனையும் தரித்துள்ளவனை, இயமனை தனது கால் கொண்டு உதைத்து பாலகனாகிய மார்க்கண்டேயனை காத்து அருள் புரிந்தவனை,
 
மீன் போன்ற கண்களை யுடையவளாகிய வேதநாயகி எனுந் திருப்பெயர் தாங்கிய அம்பாளோடு விற்றிருக்கும் நீலநிறங் கொண்ட கழுத்தையுடையவனை, குற்றமற்றவனை தென்பெண்ணேச்சுரன் எனும் திருநாமம் கொண்ட ஈசனை நினைந்து வணங்கிட எல்லா நோய்களும் நில்லாது ஓடுமே.!

குறிப்பு - இயமனை காலால் உதைத்தது திருக்கடவூர் எனும் திருத்தலத்தில் .
உமையம்மைக்கு திருமேனியில் சரிபாதி கொடுத்தது திருச்செங்கோடு எனும் திருத்தலத்தில்.

புனைந்த கொன்றை மாலையும் புனலுஞ் சூடினானை
   புலி தோலும் பொங்கரவமும் விரும்பியணிந்தானை
வினையகலொரு வேத பொருளாய் திகழ்ந்தானை
   வேடுவனாக வந்து வில்லாலடிப் பட்டானை
பனை காய்க்க வொரு செந்தமிழ் பாவினை பெற்றானை
   பவழ இதழாள் வேத நாயகியுடனுறை
முனையழிக்கும் முக்கண் பெருமானை தென் பெண்ணேச்சுரனை
   மலர் கொண்டு வணங்குவார்க்கு மயல் தீருமே ! (3)


புனைந்த கொன்றை மாலையும் புனலுஞ் சூடினானை
   புலிதோலும் பொங்கு அரவமும் விரும்பி அணிந்தானை 
வினை அகல ஒரு வேத பொருளாய் திகழ்ந்தானை
   வேடுவனாக வந்து வில்லால் அடிக்கப் பட்டானை
பனை காய்க்க ஒரு செந்தமிழ் பாவினை பெற்றானை
   பவழ  இதழாள் வேதநாயகி உடன் உறை 
முனை அழிக்கும் முக்கண் பெருமானைதென்பெண்ணேச்சுரனை
   மலர் கொண்டு வணங்குவார்க்கு மயல் தீருமே!

புனைந்த - தொடுத்த,  புனல் - கங்கை, அரவம் - பாம்பு,  செந்தமிழ் பா - தேவாரம்,  முனை - பகை

கருத்துரை:- 
அழகாக தொடுத்த கொன்றை மலர் மாலையும், கங்கையும் முடியில் தரித்துள்ளவனை,  புலித்தோலையும், பொங்கி எழும் நாகத்தையும் விரும்பி அணிந்துள்ளவனை, வினைகள் எல்லாம் நீங்குவதற்கு ஒரு மந்திர பொருளாக திகழ்பவனை, அன்று வேடனாக வந்து அர்ச்சுனனிடம் வாதாடி வில்லால் அடிப்பட்டவனை, ஆண் பனைமரம்  பெண் பனைமரமாகி காய்பதற்கு  திருஞானசம்பந்தரால் செந்தமிழ் பாடலாகிய தேவாரத்தை பெற்றுள்ளவனை,

பவழம் போன்ற நிறமுடைய இதழ்களை உடையவளாகிய வேதநாயகி எனும் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு வீற்றிருக்கும், வருகின்ற பகையை அழிக்கும் மூன்று கண்களை உடைய சிவ பரம்பொருளை தென் பெண்ணேச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனை,  நல்ல மணமுள்ள மலர்களைக் கொண்டு சாற்றி வணங்குவாருக்கு உலக மயக்கங்களில் இருந்து விடுப்பட்டு நற்கதி காண்பார்கள்.! 

குறிப்பு - திருவோத்தூர் எனும்  சிவத்தலத்தில் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி காய்ப்பதற்கு திருஞானசம்பந்த பெருமானால் "பூத்தோந்தாயன" என்ற தேவாரம் (1-ஆம் திருமுறை)  பாடப்பெற்றது. ஈசன் வேடனாக வந்து வில்லால் அரச்சுனனிடம் அடிபட்டதை மகாபாரதத்தில் "வன பருவத்தில்" காண்க!
 
அடிகேளாயன்றாலின் கீழே யமர்ந்தானை
   ஆறங்கமும் மோனமாய் விரித்தோதினானை
வடிவம் மாற்றி பொற்காசினை பிரித்தளித்தானை
   வந்து மாமதுரையில் கால் மாறி யாடினானை
நெடியோனுக் கன்று ஆழி படையை நல்கினானை
   நீள் விழியாள் வேத நாயகியுடனுறையும்
படிமீதில் பலவுரு கொண்ட தென்பெண்ணேச்சுரனை
   பரவி யேத்துவார்க்கு பல் வளமும் பெருகுமே ! (4)


அடிகேளாய் அன்று ஆலின் கீழே அமர்ந்தானை 
   ஆறு அங்கமும் மோனமாய் விரித்து ஓதினானை 
வடிவம் மாற்றி பொற்காசினை பிரித்து அளித்தானை
   வந்து மாமதுரையில் கால் மாறி ஆடினானை 
நெடியோனுக்கு அன்று ஆழி படையை நல்கினானை
   நீள் விழியாள் வேதநாயகி உடன் உறையும் 
படிமீதில் பலவுரு கொண்ட தென்பெண்ணேச்சுரனை
   பரவி ஏதத்துவார்க்கு பல் வளமும் பெருகுமே! 

ஆல் - ஆல மரம்,  அங்கம் - உட்பிரிவு,  மோனம் - மௌனம்,  நெடியோன் - திருமால்,  ஆழி படை - சக்கராயுதம், படி - உலகம்.

கருத்துரை: -
அன்று ஒரு ஆலமரத்தின் கீழ் குருவாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தானை,  நான்கு வேதங்களின் உட்பிரிவுகளான ஆறு அங்கங்களை மௌன மொழியால் உபதேசமாக அருளினானை,
திருவீழிமிழலையில் திருஞான சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் பொற்காசினை வடிவம் மாற்றி தனி தனியாக பிரித்து கொடுத்தானை, மதுரையில் பாண்டியனுக்காக  வலது காலில் நின்றாடுவதை இடது காலுக்கு மாற்றி அடி காட்டினானை,  திருவீழிமிழலையில் திருமாலுக்கு சக்ராயுதத்தை அளித்தானை,

நீண்ட அழகிய கண்களையுடைய வேதநாயகி எனுந் திருப்பெயர் தாங்கிய உமையவளோடு வீற்றிருக்கும்,  உலகில் பல வடிவங்களிலும் காட்சி தருபவனை தென்பெண்ணேச்சுரன் எனும் திருநாமங் கொண்டவனை போற்றி பாடி வணங்குவாருக்கு பல் வகையான செழிப்பும் நலன்களும் உண்டாகும்.!

குறிப்பு - சம்பந்தருக்கும், அப்பருக்கும் பொற்காசு கொடுத்தது திருவீழிமிழலை தலபுராணத்திலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் காண்க.
திருமாலுக்கு சக்ராயுதம் கொடுத்த வரலாற்றை திருவீழிமிழலை  தல புராணத்தில் காண்க.
ஈசன் மதுரையில் கால் மாறி ஆடியதை திருவிளையாடற் புராணம் "கால் மாறியாடிய படலத்தில்" காண்க.

அன்று புரம் மூன்றையும் நொடியில் சிரித்தெரித்தானை
   ஆதியு யந்தமுமாய் பலவாய் வொன்றானானை
வென்று மத யானையின் தோலை போர்த்தினானை
   விரும்பி பலியேற்க வீடு தோறுஞ் சென்றானை
கன்றோடு பசுவுக்கும் தன் கருணை புரிந்தானை
   கார் குழலாள் வேதநாயகியுட னுறையும்
என்றுமெங்கு மெதிலும் நிலை கொண்ட தென்பெண்ணேச்சுரனை
   இச்சையால் தொழ இருள் நீங்கி யொளி பெறுவரே ! (5)


அன்று புரம் மூன்றையும் நொடியில் சிரித்து எரித்தானை
   ஆதியும் அந்தமுமாய் பலவாய் ஒன்றானானை 
வென்று மத யானையின் தோலை போர்த்தினானை 
   விரும்பி பலி ஏற்க வீடுதோறும் சென்றானை 
கன்றோடு பசுவுக்கும் தன் கருணை புரிந்தானை
   கார் குழலாள் வேதநாயகியுடன் உறையும் 
என்றும் எங்கும் எதிலும் நிலை கொண்ட தென்பெண்ணேச்சுரனை 
   இச்சையால் தொழ இருள் நீங்கி ஒளி பெறுவரே! 

பலி - பிட்சை,  கார் - கரு மேகம்,  இச்சை - விருப்பம்,  நிலை - விலகாது
 
கருத்துரை:-  
அன்று திரிபுரங்களை ஒரு நொடிப் பொழுதில் சிரித்தே எரித்தவனை,  ஆதிமூலமாகவும், இறுதியாகவும், பலவாறாகவும், ஒன்றாகவும் இருப்பானை, அன்று தாருகாவன ரிஷிகள் ஏவிய மதயானையை அடக்கி அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவனை, விருப்பமொடு வீடு வீடாக சென்று பிட்சை ஏற்றானை, கன்றுக்கும் பசுவுக்கும் தனது கருணையை காட்டினானை,

கரிய மேகத்திற்கு இணையான கூந்தலையுடையவளாகிய வேதநாயகி எனுந் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு வீற்றிருந்து அருள் பாலிக்கும் என்றும் எங்கும் எதிலும் நிலைத்து நிற்கும் தென்பெண்ணேச்சுரன் எனுந் திருநாமாம் கொண்ட ஈசனை விரும்பி தொழுது துதிப்பார்க்கு அவர்கள் வாழ்க்கையில் இருள் நீங்கி பிரகாசம் பொருந்திய ஒளியை (நன்மையை) பெறுவார்கள்.!
 
குறிப்பு - யானை தோலை உரித்து போர்த்து கொண்டதை  "திருவழுவூர்" தலபுராணத்தில் காண்க.  இது அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகும். மற்றவை

திருக்கண்டியூர் -  பிரமன் சிரங் கொய்தது.  
திருக்கோவிலூர் - அந்தகாசூரனை அழித்தது.  
திருவதிகை   -        திரிபுரம் எரித்தது,.
திருப்பறியலூர் -   தக்கனை அழித்தது. 
திருவிற்குடி:-          சலந்தராசுரனை அழித்தது. 
திருக்குறுக்கை -   காமனை எரித்தது.
திருக்கடவூர் -         காலனை உதைத்தது.


கருவின் காரணப் பொருளாய் கலந்திருந்தானை
   கண்டங் கருக்க ஆலந்தான் விரும்பியுண்டானை
உருவி லோரெண் நான்கொ டெண் நான்கு மானானை
   ஒலியுமொளியுமா யெங்கும் பரவியிருந்தானை
பெருகி வரும் பெண்ணையாற்றங் கரையிலிருந்தானை
   பொற் கொடியிடையாள் வேதநாயகியுடனுறையும்
சுருதியும் நாதமுமான தென்பெண்ணேச்சுரனை
   சென்று சேவிப்பார்க்கு செல்வங்கள் பல சேருமே ! (6)

கருவின் காரணப் பொருளாய் கலந்து இருந்தானை 
   கண்டங் கருக்க ஆலந் தான் விரும்பி உண்டானை 
உருவில் ஓர் எண் நான் கொடு எண் நான்கும் ஆனானை
   ஒலியும் ஒளியுமாய் எங்கும் பரவி இருந்தானை 
பெருகி வரும் பெண்ணையாற்றங் கரையில் இருந்தானை
   பொற்கொடி இடையாள் வேதநாயகி உடன் உறையும் 
சுருதியும் நாதமும் ஆன தென் பெண்ணேச்சுரனை
   சென்று சேவிப்பார்க்கு செல்வங்கள் பல சேருமே! 

பரவி - நிறைந்து, சுருதி - வேதம்,  இசை,   நாதம் - லயம், ஒலி,  கரு - மூலம், ஆதி,  கண்டம் - கழுந்து,  ஆலம் - விஷம்.

கருத்துரை: -
உயிர்கள் பிறப்பதற்குரிய மூலப்  பொருளுக்கு (கரு) காரணகர்த்தாவாக கலந்து இருப்பானை,  தனது கழுந்து கருநிறங் கொள்ளுமாறு ஆலகால விஷத்தை விரும்பி உண்டானை,  உருவில்  64 திருமூர்த்தங்களாக திகழ்பவனை  (8x4 =32 + 8x4=32) (32+32 = 64).  எங்கும் கேட்கும் ஒலியாகவும் எங்கும் பார்க்கும் ஒளியாகவும் நிறைந்து இருப்பானை,
நீர் பெருகி வரும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் திருக்கோயில் கொண்டுள்ளவனை, 

பொன்னுக்கு நிகரான கொடி போன்ற இடையழகு உடையவளாகிய வேதநாயகி எனுந் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு வீற்றிருந்து அருள் செய்ய வல்ல,  இசைக்கு ஆதாரமான சுருதியும், நாதமும், லயமும் ஆகி திகழ்கின்றவனை, தென்பெண்ணேச்சுரன் எனுந் திருநாமம் கொண்ட ஈசனை சென்று வணங்குவாருக்கு பல வகையான செல்வங்கள் வந்து சேருமே! 

குறிப்பு - 64 - திருமூர்த்தங்களின் பெயர்களும், எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களும்  sivamurugumalai.blogspot.com என்ற இணைய தளத்தில் பார்க்கவும்,

பழியுரைத்த தக்கனொடு யாகமுங் குலைத்தானை
    பங்கயத்தயனின் சிரந்தன்னை கிள்ளி வீசினானை
அழியாதொரு பரம்பொருளாயெங்கு மிருப்பானை
   அகிலமேழும் படைத்து அதனாக்கமும் புரிந்தானை
பொழிலும் புனலுமாயெங்கு மெழிலே சூழ்ந் தோடும்
   பெண்ணையாற்றங் கரையில் வேதநாயகியுட னுறை
விழி நோக்கி முப்புர மெரித்த தென்பெண்ணேச்சுரனை
   விரும்பி தொழுதிட வினை நீங்கி வாழ்வரினிதே ! (7)


பழி உரைத்த தக்கனொடு யாகமுங் குலைத்தானை 
   பங்கயத்து அயனின் சிரந்தன்னை கிள்ளி வீசினானை 
அழியாது ஒரு பரம்பொருளாய் எங்கும் இருப்பானை
   அகிலம் ஏழும் படைத்து அதன் ஆக்கமும் புரிந்தானை 
பொழிலும் புனலுமாய் எங்கும் எழிலே சூழ்ந்து ஓடும் 
   பெண்ணை ஆற்றங் கரையில் வேதநாயகி உடன் உறை 
விழி நோக்கி முப்புரம் எரித்த தென்பெண்ணேச்சுரனை
   விரும்பி தொழுதிட வினை நீங்கி வாழ்வர் இனிதே.! 

குலைத்து - அழிந்து,  பங்கயம் - தாமரை,  அயன் - பிரமன்,  சிரம் - தலை,  அகிலம் - உலகம்,  ஆக்கம் - செயல்பாடு,  பொழில் - சோலை,  புனல் - நீர்

கருத்துரை: - 
அன்று ஈசனை பழி சொற்கள் கூறி நிந்தித்த தக்கனுடைய யாகத்தைக் குலைத்து அழித்து அவனுடைய சிரமும் அறுத்தானை, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி வீசினானை, அழியாத ஒரு பரம்பொருளாக எங்கும் இருப்பானை, ஏழு உலகங்களையும் படைத்து அதன் செயல்பாடுகளை செய்கின்றவனை, 

சோலைகளும், நீர் ஓடைகளும் காண்பதற்கு எங்கும் அழகாக காட்சி தரும் இயற்கை சூழ்ந்த இடத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் வேதநாயகி எனும் திருப்பெயர் தாங்கிய அம்பாளோடு வீற்றிருக்கும் தனது பார்வையாலே திரிபுரங்களையும் எரித்தவனை, தென்பெண்ணேச்சுரன் எனும் திரு நாமங் கொண்ட ஈசனை விரும்பி வணங்குவார்கள் வினையின் தாக்கத்திலிருந்து விடுபட்டு உலகில் இனிதாக எல்லா வளங்களும் பெற்று வாழ்வார்கள்.! 

குறிப்பு - தக்கன் யாகம் அழித்தது "திருப்பறியலூர்" தல புராணத்தில் காண்க!
பிரம்மன் தலையை அறுத்தது,  “திடுக்கண்டியூர்"  தல புராணத்தில் காண்க!

இசையாலும் மனதாலுமிணைந்திருப்பானை
   இரவும் பகலுமில்லா யெமே ரூர்ந்த செல்வனை
வசை கூறும் வன் நெஞ்சர்க்கு மோர் வாழ்வளிப்பானை
   வையகந்தன்னிலே வந்து சித்து பல புரிந்தானை
குசை வளரும் தென்பெண்னையாற்றங் கரையினில் தங்கிய
   கோள் வளையாள் வேதநாயகியுடனுறையும்
திசை தொருங் கோயில் கொண்டானை தென்பெண்ணேச்சுரனை
   தொழுது வலம் வருவார்க்கு தீவினை யகலுமே! (8)


இசையாலும் மனதாலும் இணைந்து இருப்பானை
   இரவும் பகலும் இல்லா எம் ஏரு ஊர்ந்த செல்வனை
வசை கூறும் வன் நெஞ்சர்க்கும் ஓர் வாழ்வு அளிப்பானை 
   வையகந் தன்னிலே வந்து சித்து பல புரிந்தானை
குசை வளருந் தென்பெண்ணை அற்றாங் கரையினில் தங்கிய
   கோள் வளையாள் வேத நாயகி உடன் உறையும்
திசை தொருங் கோயில் கொண்டானை தென்பெண்ணேச்சுரனை 
   தொழுது வலம் வருவார்க்கு தீவினை அகலுமே!

இணைந்து - சேர்ந்து,  ஏரு - ரிஷபம்,  வசை - பழி,  வையகம் - உலகம்,   குசை - தர்பை புள், கோள் - ஒளி.
 
கருத்துரை:- 
பாடுகின்ற இசையினுள்ளும், மனதின் உள்ளும் என்றும் சேர்ந்து இருப்பானை,  இரவும் பகலும் இல்லாதவனை தன் அடியார்களுக்கு அருள் புரிய ரிஷபமேறி  செல்பவனை,  சகல செல்வங்களுக்கும் அதிபதியாய் திகழ்பவனை,  எதிர்மறையான சொற்கள் கூறும் வஞ்சக எண்ணம் உடையவர் களுக்கும் ஒரு வாழ்வை தர வல்லவனை,  இப்பூவுலகிலே வந்து பலவித சித்து விளையா ட்டுகளை செய்தவனை,

தர்பை புள் அதிகமாக வளர்ந்துள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் வந்து தங்கிய பொன் ஒளி விசும் கை வளையல்களை அணிந்துள்ள வேதநாயகி எனும் திருப் பெயர் கொண்ட உமையவளோடு வீற்றிருக்கும் எண் திசைகளிலும் கோயில் கொண்டுள்ளவனை தென்பெண்ணேச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை வணங்கி வலம் வருவார்க்கு தீவினைகள் எல்லாம் தீர்ந்து போகுமே.! 

குறிப்பு - ஈசன் பல வித சித்து விளையாடல்கள் செய்ததை "திருவிளையாடற் புராணத்தில்" காண்க! 
 எல்லாம் வல்ல சித்தரான படலம், கல் யானைக்கு கரும்பு தந்த படலம், விருத்த குமார பாலரான படலம்,  இரசவாதஞ் செய்த படலம், மாமனாக வந்து வழக்குரைத்த படலம், வலை வீசின படலம், நரி பரியாக்கிய படலம் இன்னும் அநேக சித்துக்களை கூறலாம்.

பாவலர்கள் பாடுமேட்டிலுறையும் பரமனை
   பசுவேறி மனை தோறும் பலி கொண்ட தலைவனை
தேவர்கள் தேடியங் காணொணாத தேவனை
   திகட்டாத தேனொடு பாலு மாடினானை
மூவர் இசையில் மூழ்கி மறந்து பின் அருளினானை
   மானின் நேர் விழியாள் வேதநாயகியுடனுறை
ஏவலனாய் தூது சென்ற தென்பெண்ணேச்சுரனை
   ஏத்தி தொழுவார்கள் இருவினை களைவாரே ! (9)


பாவலர்கள் பாடும் எட்டில் உறையும் பரமனை
   பசுஏறி  மனை தோறும் பலி கொண்ட தலைவனை 
தேவர்கள் தேடியுங் காண ஒணாத தேவனை
   திகட்டாத தேனொடு பாலும் ஆடினானை 
மூவர் இசையில் மூழ்கி  மறந்து பின் அருளினானை
   மானின் நேர் விழியாள் வேதநாயகி உடன் உறை 
ஏவலனாய் தூது சென்ற தென்பெண்ணேச்சுரனை
   ஏத்தி தொழுவார்கள் இரு வினை களைவாரே! 

பாவலர்கள் - புலவர்கள்,  ஏடு - ஓலை சுவடி,  பசு - எருது,  ரிஷிபம்,  பலி- பிட்சை, 
ஆடி -- அபிஷேகம்,  ஏவலன் - ஆளாய்,  ஏத்தி - போற்றி,  களை - நீக்குதல்.

கருத்துரை:- 
புலவர்களும் அடியார்காளும் பாடுகின்ற பாட்டில் வீற்றிருக்கும் பரமேச்சரனை, எருது ஏறி வீடுகள் தோறும் பிட்சை ஏற்ற தலைவனை, திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் தேடியும் காண முடியாத தேவர்க்கெல்லாம் தேவனை,  போதும் என்று சொல்ல முடியாத தேனும் பாலும் தினந்தோறும் அபிஷேகித்து கொள்பவனை,
திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருடைய தேவார பாக்களின் இசையில் மூழ்கி பின் அருள் செய்தானை,  

மானுக்கு நிகரான கண்களை கொண்ட வேதநாயகி எனுந் திருநாமமுடைய உமையவளோடு வீற்றிருக்கும்,  அன்று சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்காக பரவை நாச்சியார் வீட்டிற்க்கு இரவில் ஒரு ஆளாக தூது சென்றானை, தென்பெண்ணேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்ட ஈசனை போற்றி வணங்கி வழிபடுவார்கள் பிறப்பு,  இறப்புக்கு  காரணமாகிய இரு வினைகளை நீக்கி நற்பேற்றை அடைவார்கள்.! 

குறிப்பு - "மூவர்  இசையில் மூழ்கி பின் அருளினான்" என்ற செற்றொடரின் கருத்தை பின் வரும் வரலாறுகளால் அறியலாம்: - திருஞான சம்பந்தர் திருவீழிமிழலையில் படி காசு பெற்றது. அப்பர் சுவாமிகள் திருமறைக்காட்டில் தேவாரம் பாடி கதவை திறந்தது, சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவிநாசியில் முதலை வாயில் பிள்ளையை மீட்டது.  இன்னும் பல வரலாறுகளை கூறலாம்.
"ஏவலனாய் தூது சென்றதை" பெரிய புராணத்தில் காண்க.

கறைமிகு யரக்கன் வரையெடுக்க கால் கொடழுத்தி
   கூர்மிகு வாளொடு கோரிய வரமளித்தானை
நிறை பொருளாய் நெடிதோங்கி காட்சி தந்தானை
   நிலை கொண்டு பதிதொறும் நீடு வரமளிப்பானை
பிறையொடு பாம்ணிந்து பித்தனாய் திரிவானை
   பெண்ணின் நங்கையாள் வேதாயகியுடனுறையும்
இறையவன் எவ்வுயிர்க்குமீசன் தென்பெண்ணேச்சுரனை
   இரு கரங் கூப்பி தொழ இடர் யாவுங் களையுமே ! (10)


கறை மிகு அரக்கன் வரை எடுக்க கால்கொடு அழுத்தி
   கூர்மிகு வாளொடு கோரிய வரம் அளித்தானை 
நிறை பொருளாய் நெடிது ஓங்கி காட்சி தந்தானை
   நிலை கொண்டு பதி தொறும் நீடு வரம் அளிப்பானை  
பிறை யொடு பாம்பு அணிந்து பித்தனாய் திரிவானை
   பெண்ணின் நங்கையாள் வேதநாயகி உடன் உறையும் 
இறையவன் எவ்வுயிர்க்கும் ஈசன் தென்பெண்ணேச்சுரனை
   இரு கரங் கூப்பி தொழ இடர் யாவுங் களையுமே! 

கறை - குற்றம்,  வரை - கயிலை மலை, கோரிய - வேண்டிய, நெடிது - உயர்ந்த,  
பிறை :- சந்திரன்,  இடர் - துன்பம்,   பெண்ணின் நங்கை - பெண்களில் சிறந்தவள் (உமையவள்)

கருத்துரை:- 
குற்றமுடைய அசுரனாகிய இராவணன் கயிலை மலையை பெயர்த்து எடுக்க முயலும் போது தனது கால் விரலால் அழுத்திடவும், அவ்வசுரனும் சாம கானம் பாடவும்,  அவன் கேட்ட வரங்களையும் கூரிய வாளும் அளித்தவனை, எங்கும் நிறைந்த 'பொருளாக உயர்ந்து ஓங்கி காட்சி தந்தவனை,
சிவ தலங்கள் தோறும் நிலையாக வீற்றிருந்து அடியார்கள் வேண்டும் வரங்கள் கொடுப்பவனை, பிறை சந்திரனையும் பாம்பையும் முடியில் அணிந்து பித்தனாக திரிகின்றவனை, 
பெண்களில் சிறந்தவளாகிய,  வேதநாயகி எனுந் திருப்பெயர் கொண்ட உமையவளோடு வீற்றிருக்கும் எல்லா உயிர்களுக்கும் கடவுளாக திகழ்கின்ற ஈசனை தென்பெண்ணேச்சுரனை இரண்டு கைகளையும் மேலே கூப்பி தொழுது வணங்குவாருக்கு துயரங்கள் யாவும் விலகிடுமே.! 

குறிப்பு - இந்த பித்தன் என்ற திருநாமம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் சிவபெருமான்  சுந்தர மூர்த்தி சுவாமிகளை தடுத்தாட் கொள்ளும்போது தம்மை “பித்தா பிறை சூடி "  என்று அடி எடுத்துக் கொடுத்து பாடச்செய்த முதல் தேவாரம் ஆகும்.

முகங்களைந்துமாகிய முழு நீறு பூசிய
   முன்னவனை, முப்புராரியை, முத்திக்கொரு நாதனை
உகரயுருவினள் வேதநாயகியுட னுறையும்
   ஓங்காரத்துள்ளொளியான தென்பெண்ணேச்சுரனை
அகங்குளிர ஆரணியடியார்க்கடியவன்
   அன்பொடுருகி அணியாயறு நான்காயமைத்து
பகன்ற பாமாலைகள் பயில வல்லார்களெவரும்
   பெறுவார் பேரும் புகழும் வளமொடு வாழ்வுமே! (11)


முகங்கள் ஐந்தும் ஆகிய முழுநீறு பூசிய
   முன்னவனை முப்புராரியை முத்திக்கு ஒரு நாதனை 
உகர உருவினள் வேதநாயகியுடன் உறையும்
   ஓங்காரத்து உள் ஒளியான தென்பெண்ணேச்சுரனை 
அகங்குளிர ஆரணி அடியார்க்கு அடியவன்
   அன்பொடு உருகி அணியாய் அறு நான்காய் அமைத்து 
பகன்ற பாமாலைகள் பயில வல்லார்கள் எவரும்
   பெறுவார் பேரும் புகழும் வளமொடு வாழ்வுமே! 

ஈசனின் ஐந்து முகம் - ஈசானம்,  தத் புருஷம், வாம தேவம், அகோரம், சத்யோஜதம்
முப்புராரி - திரிபுரம் எரித்தவன், 
உகரம் - தமிழ் உயிர் எழுத்தாகிய "உ',  
அகம் - உள்ளம். அணி - வரிசை,  அறுநான்கு -  6+4 = 10.  பகன்ற - சொல்லிய, பாடிய,  பயில - கற்றுக் கொள்ள

கருத்துரை:-  
திருநீறு முழுவதுமாக பூசிய ஐந்து முகங்களுடைய முதல் பொருளாகிய சிவனை,  திரிபுரங்களை எரித்தவனை,  முக்திக்கு காரணமான தலைவனை,  " உ" என்ற தமிழ் உயிர் எழுத்துக்குரியவளாகிய உமையவள் வேதநாயகியொடு வீற்றிருக்கும்,
ஓம் எனும் பிரணவத்தின் உள்ளே ஒளி வீசும் ஈசனை  தென்பெண்ணேச்சுரன் எனுந் திரு நாமங் கொண்டவனை ,

ஆரணியடியார்க்கு அடியவன் என்கின்ற இச்சிறியேன் தனது உள்ளங்குளிர அன்பால் உருகி வரிசையாக ஆறொடு நாலுமாக அமைத்து பாடிய பாமாலைகளை கற்று பாடி சொல்ல வல்லவர்கள் எல்லோரும் பேரும் புகழும் வளமொடு நல் வாழ்வும் பெற்று இப்பூவுலகில் இனிதே வாழ்வார்கள்.! 

குறிப்பு -  உகர வடிவினள் - அகரம் உகரம் மகரம் ஆகிய தமிழ் எழுத்துக்கள் சேர்க்கையே "ஓம்' எனும் பிரணவ மந்திரம் ஆகும். அதில் உகர வடிவமாக இருப்பவள் உமையவள் , அகர வடிவமாக அரனும் மகர வடிவமாக மகேச்சுரனும் சேர்ந்ததுதான் "ஓம் " எனும் மந்திரம் என்பதை கருத்தில் கொள்ளவும். ஆக ஈசனும் உமையம்மையும் சேர்ந்ததுதான் சகலமும் என்பதை அறிக.!

முப்புரங்களை எரித்தது "திருவதிகை" தலபுராணத்தில் காண்க

திருச்சிற்றம்பலம்

சுபம்


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam