வேதாரண்யேச்சுரர் Vedharanyesurar

வேதாரண்யேச்சுரர்   Vedharanyesurar



பாதாரமே ஓர் துணையென்றிருந்தேனரனே
நீதான் வருஞ் சுமையை நீக்கச்செய்வையேயு
னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக !

பாதாரமே ஓர் துணை என்று இருந்தேன் அரனே !
நீதான் வருஞ் சுமையை நீக்கச் செய்வையே உன்
ஓதா உண்மையை உள் உணர வைத்த ஒளியே நீயே 
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக! 

பொழிப்புரை:-

திருவடியே ஒரு துணை என்று இருந்தேனே சிவனே, 
நீதான் வருகின்ற சுமையை நீக்கச் செய்வாயே,  உன்னுடைய
ஓதா (சொல்லமுடியாத) உண்மையை உள்ளே உணர வைத்த ஒளியே,  நீயே 
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக!

கருத்துரை - 

சிவனே! நீ தான் வருகின்ற துயரங்களையும், சுமைகளையும் நீக்க வல்லவன் ஆயிற்றே என்று உனது. திருவடியே எனக்கு ஒரு துணை என்று எண்ணி இருந்தேனே !
வாக்கினால் சொல்ல முடியாத உனது மெய்பொருள் தன்மையை எனது உள்ளத்தினுள்ளே உணர வைத்த  ஒளியே !  நீயே எனக்கு ஆதாரமாக இருந்து வேண்டியதெல்லாம் திருவருள் செய்வாயாக ! 

பரதாரம் - திருவடி,  ஓதா - சொல்ல முடியாத,  உண்மை - மெய்பொருள்,
உள் - உள்ளம்


திருத்தல பெருமை:-
 
சுவாமி  -    வேதாரண்யேச்சுரர்.
அம்பாள் -  யாழைப்பழித்தமொழியாள்

தீர்த்தம்  -   வேத தீர்த்தம், மணிகர்ணிகை

விருட்சம் - வன்னி மரம் 

தலம் -  திருமறைக்காடு - சோழ நாடு - காவிரி தென்கரை தலம்  - 125. 

பாடியவர்கள் -  சம்பந்தர்,  சுந்தரர்,  அப்பர்,  அருணகிரிநாதர்
பரஞ்சோதி முனிவர், ஆரணியடியார்க்கடியவன். 

நூல் -  தேவாரம்,  திருப்புகழ், லிங்காட்சரமாலை, தலபுராணம் 

வழிபட்டோர்- சுந்தரர்,  சம்பந்தர்,  அப்பர்,  அருணகிரிநாதர்,  இந்திரன், முசுகுந்தன்,  வேதங்கள், பரஞ்சோதி முனிவர்,  இராமர், அகத்தியர்,  கௌதமர்,  விசுவாமித்திரர்,  வசிஷ்டர்,  நாரதர், பிரம்மன்,  காவிரி,  கங்கை.

வழிபடும் பலன் - நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கல்,  திருமணம்,  குழந்தை பேறு,  கல்வி,  அறிவு,  ஞானம், செல்வம்,  செழிப்பு,  பிணி நீங்குதல்,  துயர் களைதல், மன அமைதி,  வேலை வாய்ப்பு,  தொழில் விருத்தி, உத்யோக உயர்வு. 

குறிப்பு:- இத்தலத்து லிங்காட்சரமாலையில் "வேண்டியதை தருக" என்று ஈசனை வேண்டும் சொற்றொடர்
திருநாவுக்கரசர் தமது திருமறைக்காடு திருத்தாண்டகத்தில் (6-ஆம் திருமுறை)  " "தூண்டு சுடரனைய சோதி கண்டாய்"  என்ற பதிகத்தில் முதல் செய்யுளில் "வேண்டுவார் வேண்டுவதே ஈவான்"  என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கிக் காண்க!






Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam